Skip to main content

102 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு; 33 ஆண்டுகள் தேடல்; அசத்திய சுகாதாரத்துறை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

தமிழ்நாட்டில் இருந்த மிட்டா மிராசுகளும், வணிகர்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பலரும் ஏழைகளின் பயன்பாட்டிற்காக பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகளை சொந்த செலவில் ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாரிசுகள் அதை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரிமளம் தொடங்கி காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நகரத்தார்களால் இந்த பணிகள் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது.

 

இதே போல தான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 1920ல் தாய்சேய் நல மையத்தை கௌரவ மாஜிஸ்திரேட் பள்ளத்தூர் அடைக்கப்ப செட்டியார் தனது மகள் உமையாள் ஆச்சி பெயரில் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பிரசவம் என்பது குறைவு தான் என்றாலும் அதற்கான தேவைகள் இருந்ததால் அந்த கட்டடத்தைக் கட்டி அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் டட் என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதற்கான கல்வெட்டு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

102 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த கட்டடம் சற்றும் சிதிலமடையாமல் உள்ளதால் அந்த கட்டடத்தை இடித்து விடாமல் ரத்த வங்கியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் ரத்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை அலுவலராக பணிக்கு வந்த விவேகானந்தன் பழைய கல்வெட்டை பார்த்து அடைக்கப்ப செட்டியார் குடும்பத்தினரை அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கடந்த 1990 ஆண்டு முதல் அவரது குடும்பத்தினரை தேடத் தொடங்கியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் வந்த பிறகு சமூக வலைதளங்கள் மூலம் தேடிய போது 2021ம் ஆண்டு மதுரையில் இருந்து அருணாசலம் என்பவர் தொடர்பு கொண்டு எங்கள் பாட்டனார் தான் பள்ளத்தூர் அடைக்கப்ப செட்டியார் என்று அறிமுகமானார். கொரோனா காரணங்களால் அவர்களால் வர இயலாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைக்கப்ப செட்டியாரின் 3வது தலைமுறை வாரிசுகளான பெங்களூரில் இருந்து லெட்சுமணன் செட்டியார் (வயது 85) மற்றும் அடைக்கப்பன், கதிரேசன், அருணாசலம் ஆகியோர் தங்கள் பாட்டனார் கட்டிய மகப்பேறு மையத்தைப் பார்க்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து பழைய கட்டடத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டனர்.

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

தொடர்ந்து தாங்கள் கையோடு கொண்டு வந்த கௌரவ மாஜிஸ்திரேட் அடைக்கப்ப செட்டியார் மற்றும் அவரது மகள் உமையாள் ஆச்சி படங்களை தலைமை மருத்துவர் அன்பழகனிடம் வழங்கினார்கள். தொடர்ந்து விவேகானந்தன் அடைக்கப்பன் வாரிசுகளுக்கு புத்தகங்கள் பரிசளித்து பொன்னாடைகள் அணிவித்து கௌரவப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. 

 

 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.