Skip to main content

மனிதன் மிருகமாகிறானா ?

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை  அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு சுவற்றிலும், வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்து வந்தனர். பின்னர், போலீஸ் வந்து, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றவுடன் தாக்கப்பட்டதில் ஒருவரான  65 வயது மூதாட்டி இறந்துவிட்டார். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் இரண்டு பேருக்கு முதல் உதவி செய்திருக்கின்றனர். 
 

thiruvannamalai

 

 


பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர்தான் காருக்குள் இருந்தவர்கள். அந்த ஊர் மக்களால் தாக்கப்பட்டவர்கள். அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள் என்று இப்படி மிருகத்தை போன்று மாறி காரில் வந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள், தெரியுமா? காரில் வந்தவர்கள் அந்த ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்ல சென்னையில் இருந்து வந்துள்ளனர். வழி மாறிச் சென்றதால், கோவிலுக்கு வழியை விசாரித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். அப்போது அங்கே இருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார் அந்த மூதாட்டி. இதனைத்தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து நீங்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் தானே என்று தாக்கியுள்ளனர்.

 

 

 

இந்த சம்பவம் நடந்து ஓய்வதற்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் முப்பது வயதிற்கும் உட்பட்டவர் ஒருவர் பார்க்க குழந்தை பிடிப்பவர் போன்று இருந்தாராம். உடனே கூட்டமாக சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவர் யார், என்ன என்று கூட துளியும் விசாரிக்காமல் அடித்து துவம்சம் செய்துள்ளனர். அடித்த அடியில் அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. இன்னும் மிருகத்தனமாக அவரது கண்ணையையும் தோண்டி இருக்கின்றனர். அவரது உயிர் பிரிந்தவுடன். கொஞ்சம் கூட தயக்கமின்றி, 'எல்லோருக்கும் பாடம் கற்பிக்கிறேன்' என்று அங்கே உள்ள உப்புநீரி ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறந்தவரின் கால்களைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காவலர்கள் வந்து விசாரித்தபின்புதான் தெரிகிறது, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று. இந்த இரண்டு ஊர்களிலும் சிறிது காலங்களாக குழந்தைகள் கடத்தல் நிகழ்ந்திருக்கிறது. அதனால், விழிப்பாக இருக்க முயன்று, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி உள்ளன என்கின்றனர்.      

  

palaverkadu murder


இச்சம்பவங்களை போன்றே கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம், பார்க்க நோஞ்சானாக இருக்கும் 27 வயது வாலிபன், அந்த வீடியோவில் அவர் முகத்தில் அப்பிராணியான ஒரு சிரிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஒரு மூட்டை அரிசி, அதில் ஒரு சார்ஜர் வயர் போன்ற பொருட்களை எல்லாம் வீடியோவில் தூக்கி தூக்கி காட்டுகின்றனர், அப்போதும் அவன் முகத்தில் அதே சிரிப்பு தான். அங்கே அவரை சூழ்ந்த கூட்டமெல்லாம் கோபமாக அவனைக் கடிந்து தாக்க ஆரம்பித்தனர். பிறகு, அவரை பக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்று அடி அடி என்று அவரை அடித்துள்ளனர். அப்படி அடிக்கும் பொழுது அதை ஒருவர் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்றால் பாருங்கள், அவருக்கு எத்தனை இலகுவான மனது. சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை போட்டு லைக்ஸ்களும் ஷேர்களும் வாங்க அவர் காட்டிய மும்முரம், தாக்கப்பட்ட மதுவைக் காப்பாற்ற காட்டியிருக்கலாம். ஆனால், மது கொடூரமாக கொல்லப்பட்டார். 

 

மனிதனின் சந்தேக குணம், அது கோபம் என்ற எல்லையை மீறி மிருகமாக அவனை மாற்றுகிறது. காரில் வந்தவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்களாகவே இருந்தாலும் கூட, அவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களிடம் பேசியிருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். அதேபோல மதுவின் சம்பவத்தில் அவர் திருடிவிட்டார் திருடிவிட்டார் என்று, கொல்லும் அளவுக்கு அடித்துள்ளனர். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். எதையும் திருடவில்லை, அவரின் தோற்றம் பார்க்க அழுக்காக இருப்பதால் மக்களே அவ்வாறு முடிவு செய்து இருக்கின்றனர். 

 

 

  kerala madhu


திருடனாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, மனிதனாக இல்லாமல் மிருகமாக மாறி, தவறு செய்தவர்கள் என்ற சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு தண்டனை கொடுத்திருப்பது தற்போதிருக்கும் மனிதர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மக்களுக்கு அரசியல், சூழலியல் விழிப்புணர்வு, போராட்ட உணர்வு அதிகரிப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதன் பெயரில் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களும் வன்முறையும் பெருகியிருப்பது போனஸ். இவர்கள் யாரும் தங்களின் கோபத்தை அரசியல்வாதிகளிடமும் தேர்தலில் வாக்கு செலுத்துவதில் மட்டும் காட்டுவதாய் தெரியவில்லை. அங்கே அவர்கள் செய்த தவறுகளை எல்லாம் மறந்து மனிதாபிமானத்தை நூறு சதவீதம் காட்டுகிறார்கள். 

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள்” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai says People of North India have also realized it

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரின் போது பா.ஜ.கவும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியும் 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றினாரே?

“அவருக்கு எதிர்க்கட்சி மாடம் கிடைக்கிறதா என்று பார்க்க சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்த ஊழல்களை பற்றியெல்லாம் தென்னிந்திய மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். வட இந்திய மக்கள் கொஞ்சம் தெரியாமல் இருந்தார்கள். இப்பொழுது, வட இந்திய மக்களும் அதை உணர ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், தங்களுடைய தொகுதி குறித்த கோரிக்கைகள் எதையுமே அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. மற்ற எம்.பிக்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்காத இந்தச் செவிட்டு அரசு, மோடி பேசுவது மட்டும் நாங்கள் கேட்டுக் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்”.

தென்னிந்தியாவில் பா.ஜ.க வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்திற்கு வரும்போது வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

“நோட்டா கூட போட்டி போட முடியாத சூழல்தான் கடந்த தேர்தலில் நடந்தது. இப்பொழுது நோட்டா அளவுக்கு வரலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அதைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடிய பாஜக வேட்பாளர் கூட இந்த ஊரைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். இங்கே பா.ஜ.க வலுவாக இருக்கிறது என்றால் இங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. சென்னையிலிருந்து வேட்பாளரை கூட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

திருவண்ணாமலையில் ஏசி தரத்துடன் இருக்கின்ற பொது நூலகத்தைப் போல இளைஞர்களுக்கு வேறு என்ன ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

“நூலகங்களை விரிவுபடுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அந்த நூலகத்தில் மக்கள் பயன் பெறுகின்ற, மாணவர்கள் பயன்பெறுகின்ற புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.  அது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்தத் திட்டம் தொடரும்”.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் அமைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த மாதிரி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறீர்களா?

“நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 507 கேள்விகளில் ஒன்றிய அரசின் கீழ் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அந்தத் துறைகள் அடிப்படையில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  மாநில அரசு திட்டத்தின் மூலமாக, இந்தத் திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்”.

அண்ணாமலையார் கோவிலை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களே?

“திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை கோவிலுக்கு சிமெண்ட் சாலைகளை அமைச்சர் போட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தத் திருவண்ணாமலையை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். மொத்தமாக் திருவண்ணாமலை நகருக்கு அடிப்படை வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், கார்த்திகை தீப நாளில் 45 லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் அளவிற்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பாக அந்தந்த நிதிகளை பயன்படுத்தி என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்”.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியும் இதுவரைக்கும் விவசாயி குறித்துப் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

“விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி, நமது முதலமைச்சர்தான் தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே விவசாயிகள் கடனை முதன் முறையாக தள்ளுபடி செய்தது டாக்டர் கலைஞர்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். அவர் வழியில் நமது முதலமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த இரண்டரை வருஷத்தில் 2 லட்சம் மின்சாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, தேர்தல் அறிக்கையில் விவசாய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதைவிட விவசாயிகளைப் பற்றி யார் அதிகமாக பேசுவது?. மோடி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? விவசாய கடன் தள்ளுபடி பற்றி மோடியும், எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்காகவே தனிப்பட்ட தனி பட்ஜெட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.