Skip to main content

என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? நீதிபதியிடம் எம்.எல்.ஏவின் மணப்பெண் குமுறல்!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தைச்சேர்ந்த பவானிசாகர் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலளர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் ஆகியோர் தலைமையில் இவர்களது திருமணம் நடைபற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ்களும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென மாயமானர் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து, எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மணப்பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் மணப்பெண் சந்தியா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சந்தியாவை அழைத்துச்சென்று இன்று மாலை 6.30க்கு கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

mlaaa


கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணப்பெண் சந்தியா நீதிபதி பாரதி பிரபாவிடம் கூறியதாவது,

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கும் நிச்சயக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம்.. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார். இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்தார்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏவான ஈஸ்வரனுக்கு வயது 43, ஆனால், மணப்பெண் சந்தியாவுக்கோ வயது 23 தான். திருமண பேச்சு தொடங்கியதில் இருந்து எனக்கு இவரை பிடிக்கவில்லை, மேலும் இவ்வளவு வயது வித்தியாசம் உள்ளவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சந்தியா பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
 

DSC03608


இதேபோல், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் சந்தியாவிடம் போனில் பேசும் போதெல்லாம்.. எனக்கு உங்களை பிடிக்கவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் எம்.எல்.ஏ., ஈஸ்வரனோ.. திருமணம் உறுதியாகிவிட்டது. முதலமைச்சரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்க போகிறார். உனக்கு இந்த மரியாதை என் மூலமாக கிடைக்கப்போகிறது என சந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியதோடு திருமணம் நடந்தே தீரும் என கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியே இல்லாமல் ஊரில் இருந்தால் திருமணம் நடந்தே தீரும்.. எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என விரும்பிய சந்தியா வீட்டை விட்டு கிளம்பி சென்றுள்ளார்.

சந்தியாவின் இந்த போராட்டம் அவரை ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் அதிகார மிரட்டலுக்கு சிக்காத பறவையாக விடுதலை பெற செய்துள்ளது.

 

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.