Skip to main content

எப்படி இருந்தது இந்த சட்டசபை? மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
Kalaivanar Arangam tamil nadu assembly

 

 

கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி போதிய இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் செப். 14 முதல் 3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடந்த சட்டப்பேரவைக் கூட்ட அனுபவம் பற்றி நக்கீரன் இணையதளத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி சுவாரஸ்யமான விஷயங்களுடன் விவரித்திருக்கிறார். 

 

''கடந்த 14.09.2020 அன்று கூடிய தமிழக சட்டசபை ஒரு புதிய அனுபவத்தை எங்களுக்கு தந்தது.

 

கோவிட் 19 காரணமாக நெருக்கடிகளும், எதிர்பார்ப்புகளும் சூழ்ந்திருந்தது.

 

மார்ச் 26 அன்று  அவசர, அவசரமாக நிறைவு செய்யப்பட்ட சட்டசபை, 6 மாத கால அவகாசத்தில் மீண்டும் கூடியது. எல்லோரும் ஓரிரு மாதங்களில் கரோனா நிறைவடையும் என எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், பலரும் அச்சத்துடனேயே சென்னை வந்தனர்.

 

72 மணி நேரத்திற்கு முன்பு  எல்லோரும் கோவிட் டெஸ்ட் எடுத்த சான்றிதழோடு வந்திருந்தனர். அதை காட்டி அடையாள அட்டை பெற்று, அதை கழுத்தில் மாட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

 

இம்முறை செயின் ஜார்ஜ் கோட்டையில் கூடாமல், கலைவாணர் அரங்கின் மூன்றாவது மாடியில் அவை நடைபெற்றது. இது ஒரு புதிய அனுபவம்.

 

எனினும் ஏற்கனவே இப்படி பலமுறை நடந்திருக்கிறது. கோடை கால கூட்டத் தொடர்கள் முன்பு ஊட்டியில் நடந்திருக்கிறது.

 

கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 2010ல், ஓமந்தூரார் தோட்டத்தில் அவர் கட்டிய, இப்போது பன்னோக்கு மருத்துவமனையாக செயல்படும் கட்டிடத்தில் கூட்டத் தொடர் நடைபெற்றிருக்கிறது.

 

இப்போது கரோனா நெருக்கடி காரணமாக சமூக இடைவெளியுடன் அமர வேண்டிய நிர்பந்தத்தில் இங்கு அவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது  எங்களுக்கு புதிய அனுபவத்தை தந்தது.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

முதல் நாளில்  நானும், தனியரசும் ஒரே காரில் கலைவாணர் அரங்கிற்கு சென்றோம்.

 

புதிய இடம் என்பதால் காலை 9.30 மணிக்கே எல்லோரும் வந்து விட்டனர். திமுக MLA க்கள் அனைவரும் BAN NEET என்ற வாசகம் பொறித்த முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர்.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

அதிமுக உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே அவைக்குள் சென்ற வண்ணமிருந்தனர்.

 

எல்லோரும் வெப்பநிலை அறியும் சோதனைக்கு பிறகு, கிருமி நாசினியை கையில் தேய்த்தபடியே  உள்ளே நுழைந்தனர்.

 

கீழ்தளத்தில் இருந்த  மின் தூக்கி (LIFT ) வழியே பலரும், நீண்ட படிக்கட்டுகளில் ஏறி பிறகு நகரும் படிக்கட்டுகள் ( ESCALATOR) வழியே பலரும் உள் அரங்கினுள் நுழைந்தனர்.

 

கையெழுத்து போட்டுவிட்டு சபை நடைபெறும் மண்டபத்தில் நுழைந்ததும் ஒரு பிரம்மாண்டத்தை உணர முடிந்தது.

 

கோட்டையில் உள்ள தலைவர்களின் படங்கள் அச்சு அசலாக அதே போல் வைக்கப்பட்டிருந்தன.

 

சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டு வரிசைகள் அதிகப்படுத்தப்பட்டு, எல்லோரின் முகங்களும் தெரியும்படி தளத்தின்   உயரங்கள் சீர் செய்யப்பட்டிருந்தது.

 

நான் நுழைந்த போது முன் வரிசை அமைச்சர்களில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,செல்லூர் ராஜ், காமராஜ், கருப்பணன் போன்றோர் முன்னதாகவே வந்தமர்ந்திருந்தனர்.

 

காலை 9.50 அளவில் துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வருகை தர, அடுத்து முதல்வர் வருகை தந்தார். எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்தி, புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

 

சரியாக 10 மணிக்கு சபாநாயகர் வந்ததும் வணக்கம் தெரிவித்து விட்டு, குறளை வாசித்தார்.

 

"நேற்று இருந்தவர் இன்று இல்லாமல் இறந்து போனார் என்று சொல்லப்படும் நிலையற்ற தன்மை உடையது இவ்வுலகம் "என்று பொருள்படும் குறளை வாசித்தார். அன்றைக்கு அது பொருத்தமாகவே இருந்தது.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

மறைந்த சமகால உறுப்பினர் ஜெ.அன்பழகன், சமகாலத்தில் இங்கு பணியாற்றிவிட்டு  பிறகு நாடாளுமன்றம் சென்ற வசந்தகுமார் MP உள்ளிட்டவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பு நடந்தது.

 

எல்லோரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் மெளன மரியாதை செலுத்தினர். சமகால சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்த காரணத்தால் அவை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

 

எல்லோரும் வெளியேறினாலும் பலர் அங்கேயே சுற்றி, சுற்றி நின்றனர்.

 

சபாநாயகர் அமரும் மாடம் இங்கு எடுத்து வரப்பட்டு அதில் தான் அவர் அமர்ந்திருந்தார். அந்த மேடை தளத்தை சற்று உயரமாக அமைத்திருக்கலாம் என பலரும் கருத்து பகிர்ந்தனர்.

 

பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் அமரவும் தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

முதல்வர் உள்ளிட்ட முக்கிய VVIP களுக்கு, ஆலோசனை நடத்த  தனி அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.

 

அதை விட இந்த அவை விசாலமாக, தனித்தனி நாற்காலி வசதியுடன் நன்றாகவே இருக்கிறது என ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.

 

இரண்டாவது நாள் அவை கேள்வி - பதிலுடன் தொடங்கியது.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

அவை தொடங்கும் முன்பு,  வெளியே BAN NEET என்ற அட்டையை ஏந்தி நான் மஜக வின் நிலைபாட்டை வெளிப்படுத்தினேன். காட்சி ஊடகங்கள் அதை முதன்மைப்படுத்தின.

 

அன்று நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எழுந்து நீட் தேர்வு குறித்து விவாதிக்க கோரினார். சபாநாயகர் அனுமதியளித்தார்.

 

அப்போது அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசிய சில கருத்துகள், அவையில் திமுக உறுப்பினர்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டது.

 

சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது விமர்சனம் வைக்க, அவர்கள் பொங்கியெழுந்தனர்.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

தங்கள் கட்சி மீது வைத்த விமர்சனங்களை அவை குறிப்பிவிருந்து நீக்கக்கோரி, சபாநாயகரின் இருக்கை முன்பு கூடி ஆட்சேபித்தனர்.

 

தொடர்ந்து அவர்கள் அதே நிலைபாட்டிலிருக்க, அவர்களை கூண்டோடு வெளியேற்ற ஆணையிட்டார் சபாநாயகர்.

 

அன்று அவைக்கு உள்ளேயும், வெளியேயும் இதுதான் 'ஹாட் நியுஸ் ' ஆனது.

 

நான்கு  விஷயங்களுக்கு நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தேன். 

 

நீட் ரத்து, தேசிய கல்வி கொள்கை, ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை, டெல்டா மாவட்டங்களில்  ONGC நிறுவனம் புதிய குழாய் பதிப்பு ஆகியவை குறித்து பேச அனுமதி கேட்டிருந்தேன். ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே அனுமதி என்றனர்.

 

நான் சபாநாயகரிடம் இரண்டில் பேச வாய்ப்பு கேட்டேன். 

 

அவர் சூழலை விளக்கினார். நேரம் இல்லை, நாட்கள் குறைவாக உள்ளது, நிறைய உறுப்பினர்கள் நிறைய கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளனர். எனவே நீங்கள் தேசிய  கல்வி கொள்கையை பற்றி பேச அனுமதிக்கிறேன் என்றார்.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

மூன்றாவது நாள் கேள்வி-பதில் நிகழ்வு தொடங்கிய போது கருணாஸ் எழுந்து அவர் தொகுதி கோரிக்கையை  பேசினார்.

 

ssss

 

நான் என் தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப, அமைச்சர் CV.சண்முகம் அது பற்றி பரிசீலிக்கப்படும் என சாதகமான பதிலை கூறினார். 

 

அமைச்சர்களில் அவர் வித்தியாசமானவர். குறிப்புகளை  எழுதி வைத்து பேசாமல், நினைவாற்றலுடன் தெளிவாக பேசும் திறன் பெற்றவர். அதை எதிர்கட்சி உறுப்பினர்களும் சிலாகிப்பார்கள்.

 

அன்று தேசிய கல்வி கொள்கை தொடர்பாக திமுகவினர் சிறப்பாக பேசினர். அதிமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியோரின்  குரலும் இதில் ஒரே அலைவரிசையில்  எதிரொலித்தது.

 

நான் இது குறித்து பேசும் போது, முதல்வர், துணை முதல்வர் எதிர்கட்சி தலைவர், ஆகியோர் என்னை உற்று நோக்கி, உரையை கூர்ந்து கவனித்தனர்.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

அன்று இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டு மீண்டும் அவைக்கு வந்தனர்.


வழக்கம் போல் எதிர்கட்சி துணைத் தலைவர்  துரைமுருகன் அடிக்கடி முக்கிய பிரச்சனைகள் குறித்து தனக்கேயுரிய பாணியில் பேசி கலகலப்பூட்டினார். 

 

அவை அன்று பரபரப்பாக இருந்தது. அன்று மட்டும் 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

 

இது ஒரு வகையில் சோர்வை ஏற்படுத்தியது என்பதே உண்மை. 

 

இவ்வளவு நெருக்கடியில் ஏன் அவையை நடத்த வேண்டும்? குறைந்தது 5 நாட்களாவது நடத்தியிருக்கலாமே...என பல உறுப்பினர்களும்  புலம்பினர்.

 

கரோனா காரணமாக உள்ளே உணவு பொருட்கள் அனுமதியில்லை.

 

அவைக்கு வெளியே உறுப்பினர்கள் அமரும் ஒய்வு இடத்தில் பசுமை தேநீர் (Green tea), வறுத்த முந்திரி, தண்ணீர் குடுவை மட்டுமே கிடைத்தது.

 

அவையானது இரண்டு நாட்களும் இடைவெளியின்றி தொடர்ந்ததால், மதிய உணவு இன்றி பலரும் அவையில் பங்கேற்றனர்.

 

சர்க்கரை வியாதி உள்ளவர்களும், மூத்தவர்களும் சற்று சிரமப்பட்டனர் என்பதே உண்மை.

 

எதிர் வரிசையில் இருந்த அமைச்சர்கள் காமராஜ், கருப்பணன் ஆகியோர் எனக்கும், தனியரசுக்கும் தாங்கள் கொண்டு வந்த  கடலை மிட்டாயை கொடுத்தனுப்பினர்.

 

முன்பெல்லாம் அவையில் ஒரே வரிசையிலிருக்கும் நானும், தனியரசு, கருணாசு, அபுபக்கர், விஜயதரணி ஆகியோரும் அவையில் அதிகம் உரையாடுவோம். கருத்துகளை பரிமாறிக் கொள்வோம்.

 

இம்முறை சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்ததால் எங்களுக்குள் உரையாடும் வாய்ப்பு குறைந்து போனது.

 

எங்களுக்கு பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர் நேரு வழக்கமான கலகலப்புடன் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தார்.

 

Kalaivanar Arangam tamil nadu assembly

 

மூன்று நாள் கூட்டத் தொடர் முடிந்து எல்லோரும் புறப்பட்டப் போது ஒரு இறுக்கம் நிலவியது. அது கரோனா குறித்த அச்சமாகவும் இருக்கலாம். 

 

இன்னும் ஓரே ஒரு கூட்டத் தொடர் ஜனவரியில் நடக்கும். அதற்கு பிறகு தேர்தல் என்பதால் கூட இருக்கலாம்.

 

அடுத்த கூட்டத் தொடர் இங்கு நடக்குமா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்குமா? தெரியவில்லை.

 

அது கரோனாவை வைத்தே முடிவாகும் என்பதே உண்மை''.

 

 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Condolence of Tamil Nadu Chief Minister MLA Pugazhendi passed away

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். 

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். 

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.