Skip to main content

கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த வரிச்சியூர் செல்வம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

How varichiyur selvam has been arrested by police

 

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல, நகைகளைக் குவியலாக அணிந்துகொண்டு ஜோக்கர் கெட்டப்பில் வலம் வந்தாலும், தனது ரவுடித் தனத்தை வரிச்சியூர் செல்வம் தொடரவே செய்திருக்கிறார். 2020-ல் மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணராஜனும், ஊராட்சி மன்றப் பணியாளர் முனிச்சாமியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவரை சென்னைக்கு தப்பிச் சென்றுவிடுமாறு வரிச்சியூர் செல்வம் கூறிய நிலையில் மாயமானார். குற்றவாளி செந்தில்குமாரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்குமார் மனைவி முருகலட்சுமியும், தனது கணவர் காணாமல்போனதாக விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டும் என மனு அளித்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண் காரத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டது.

 

வரிச்சியூர் செல்வம் கைதான பின்னணி இது:

 

காணாமல்போன செந்தில்குமாரின் செல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, வரிச்சியூர் செல்வத்திடமும், திருவான்மியூர் சாம் குமாரிடமும் பேசியது தெரியவந்துள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலினால் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதை சாம்குமார் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

How varichiyur selvam has been arrested by police
செந்தில்குமார்

 

வரிச்சியூர் செல்வத்துடன் பிரச்சனையானதால், அவரிடமிருந்து பிரிந்து விருதுநகரில் குடியேறிய செந்தில்குமார், சமாதானம் பேச அழைக்கப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சென்னையில் ஆள் கடத்தல் அசைன்மெண்ட் ஒன்றை செந்தில்குமாரிடம் தந்த வரிச்சியூர் செல்வம், கூடவே இரண்டு நபர்களை அனுப்பி வைத்துள்ளார்.

 

வரிச்சியூர் செல்வத்தின் உள்நோக்கத்தை அறியாத செந்தில்குமாரை, உடன் சென்ற இருவரும் மாமல்லபுரம் திருவடந்தை காட்டேஜ் ஒன்றில் தங்கவைத்துள்ளனர். பிறகுதான் அந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இரண்டுபேர் செந்தில்குமாரைத் திமிரவிடாமல் பிடித்துக்கொள்ள, ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். நடந்ததை எல்லாம் வாட்ஸ்-அப் காலில் வரிச்சியூர் செல்வத்துக்கு காட்டியுள்ளனர். அதன்பிறகு, செந்தில்குமாரின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து செந்தில் குமாரின் உடலை கம்பளியால் சுற்றி தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாட்டுக்கு எடுத்துவந்து தாமிரபரணி ஆற்றில் வீசியிருக்கின்றனர்.

 

How varichiyur selvam has been arrested by police

 

காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் செந்தில்குமார் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்ட வரிச்சியூர் செல்வம், கொலைக்கான காரணத்தை இவ்வாறுதான் பதிவு செய்யவேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார். “என்னை மீறி செந்தில்குமார் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு துரோகமும் செய்தான். அதனால்தான், அவன் கொலை செய்யப்பட்டான்” என்று கூறியிருக்கிறார்.

 

செந்தில்குமார் கொலையை வரிச்சியூர் செல்வம் வாட்ஸ்-அப் காலில் பார்த்து ரசித்ததன் பின்னணியில் வலுவான சொந்த விவகாரம் ஒன்று இருக்கிறது. வரிச்சியூர் செல்வத்தின் உறவுகளில் ஒன்றை தொந்தரவு செய்ததாலேயே செந்தில்குமாரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த உண்மையைப் பதிவு செய்துவிடவேண்டாம் என்பதே வரிச்சியூர் செல்வத்தின் கோரிக்கையாக இருந்திருக்கிறது.

 

ஆள் கடத்தல், கொலை செய்தல், சட்ட விரோதமாக உடலை மறைத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.