Skip to main content

முகமதுஜான் அதிமுக ராஜ்யசபா வேட்பாளரானது எப்படி? பரபரக்கும் தகவல்கள்!!!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

அதிமுகவில் உள்ள கழக சிறுபான்மை நலப்பிரிவின் இணை செயலாளராக இருப்பவர் முகமதுஜான் தற்போது மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
 

muhamed john



முகமது ஜான் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்தை சேர்ந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2011ல் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் முகமதுஜான். அதோடு வேலூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அப்போது ஜெயலலிதா அமைத்த 5 பேர் கொண்ட கட்சி கமிட்டியில் ஓ.பி.எஸ். இருந்தார். அவரது கைங்கர்யத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சராகவுள்ள வீரமணியும் இருந்தார் என்றும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவினார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. எம்.எல்.ஏ.வாக இருந்தும் அடங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சீட் கேட்டவருக்கு தரப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவினரே எதிர்பாராத விதமாக முகமதுஜான்க்கு ராஜ்யசபா எம்.பி பதவி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

இதுப்பற்றி ராணிப்பேட்டை அதிமுகவினரிடம் விசாரித்தபோது, மாவட்டத்தில் அமைச்சர் வீரமணியின் டாமினேட் அதிகமாகவுள்ளது. அதனால்தான் ஜெயலலிதா இறந்ததும் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன், அணைக்கட்டு கலையரசு, சோளிங்கர் எம்.எல்.ஏ. பார்த்திபன், ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனுவாசன் என பலரும் கட்சியை விட்டு அமமுகவுக்கும், பாஜகவுக்கும் சென்றார்கள். இதனால் வேலூர் கிழக்கு மாவட்டத்தில் கட்சி படுவீக்காக உள்ளது. தினகரனே கூட, முகமதுஜானை அமமுகவுக்கு அழைத்தார், ஆனால் அவர் செல்லவில்லை அதற்கு பரிசாகத்தான் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்கள்.

மேல்மட்ட அதிமுகவினரோ, அமைச்சர் வீரமணி ஆரம்பம் முதலே எடப்பாடியை எதிர்த்துவருகிறார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது முதல்வராகவுள்ள எடப்பாடிக்கு தெரியும். மேலே ஓ.பி.எஸ்.க்கும், மாவட்டத்தில் வீரமணிக்கும் செக் வைக்கவே, முகமதுஜானை எம்.பி.யாக்க முடிவு செய்தார் எடப்பாடி. அதோடு, திமுகவில் ஒரு ராஜ்யசபா சீட் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் வில்சன்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் நம்மீது அதிருப்தியில் உள்ளனர். அந்த அந்த கோபத்தை போக்க இஸ்லாமிய சமுதாயத்துக்கு நாம் சீட் வழங்கினால் நம்மீது அச்சமூகத்துக்கு உள்ள கோபத்தை தணிக்க முடியும் என்பதற்காக அமைச்சர் தங்கமணி சிபாரிசு மூலமாக முகமதுஜானை தேர்வு செய்தனர். பாராளமன்றத்தில் எம்.பி.யாக இருந்த அன்வர்ராஜா பாஜகவுக்கு எதிராக பேசியதால், மீண்டும் அவரை எம்.பி.யாக்கி பாஜகவின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக இவரை தேர்வு செய்தனர் என்கின்றனர்.

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.