Skip to main content

விலை மாதுக்களை காக்கப் போய், நான் விபச்சாரியான கதை... ஆட்டோ சங்கர் #8

Published on 16/06/2018 | Edited on 24/06/2018
auto sankar 8 title



திருவான்மியூர்! கெட்ட காரியங்களுக்கு ஒரு காலத்தில் வேடந்தாங்கலாக இருந்த ஏரியா! 1980களிலிருந்து தப்புச்செயல்களுக்கு அதுதான் தலைநகரம். போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் போட்டு தங்கள் நீள அகலமான கவலையைப் பெருமூச்சுடன் தெரிவிக்க அன்றைய டி.எஸ்.பி.க்கு செம கண்டனக்கணைகள்!

ரௌடிகள் அட்டகாசம், கள்ளச்சாராய கால்வாய், எல்லாவற்றுக்கும் மேலாக விபச்சாரம்! காவல்துறையின் பெயர் கணிசமாக நாறிப்போனது. போலீசின் "மாமூல்' வாங்கும் வாழ்க்கை செழிப்பாக நடந்ததே தவிர, ஜனங்களின் "மாமூல்' வாழ்க்கைக்கு பயங்கர பாதிப்புகள்!

 

 


அனுமந்தராவ், ஹரிநாயுடு, ரவணம்மா, அனுசூயா இந்த நான்கு பேர்களும் ஆந்திரா பேர்வழிகள். தேசிய ஒருமைப்பாட்டுக்கு முன்னுதாரணமாக கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா என பல ஊர் சங்கதிகளை ஊர்பேர் சொல்லி போணி செய்தனர். அவர்கள் செய்தது லாட்டரி பிசினஸ் இல்லை. பலான பெண்களை வைத்துக்கொண்டு நடத்திய விபச்சாரம்.

மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் மாமாக்கள் மட்டுமில்லை. தாதாக்களும்கூட. போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிகட்டுக்காளைகள்! டி.எஸ்.பி.யால் அடக்கவும் முடியவில்லை. பிடிக்கவும் முடியவில்லை. பிடிக்க வருவதை முதலிலேயே மோப்பம் பிடித்து (கீழ்மட்டத்துக்கு எலும்புத்துண்டுகள் வீசிதான்) தேடிவரும் போதெல்லாம் அகப்படாமல் எப்படியோ தப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான்குபேரில் யாராவது ஒருத்தர் அகப்பட்டுக்கொண்டாலும், மற்ற மூன்று பேரும் "தொழில்வளம்' குன்றாமல் ஒலிம்பிக் ஜோதி மாதிரி அணைந்துபோகாமல் அடைகாத்தனர். அப்படியொரு "தொழில் பக்தி”!

 

 


தன் கீழ்மட்ட போலீசை வைத்துக்கொண்டு இந்த நான்கு மாமாக்களையும் அடக்கிவிட முடியாது என்பது டி.எஸ்.பி.க்குத் தெளிவாக புரிந்துபோயிற்று. ஆழமாக யோசித்தார். 

"டி.எஸ்.பி. தங்கையா வரச்சொன்னார்'' - சுகுமார் வந்து சொல்ல நெற்றியில் வியந்தேன்.

"டி.எஸ்.பி.யா...? என்னைக் கூப்பிட்டாரா? எதுக்கு?'' என்றபடி பார்க்கப்போனேன்.

காதோரம் மெளிதான நரை! தோள் பட்டையில் நட்சத்திரம்... வீங்கின வயிறு... மிடுக் தோற்றம் கொடுத்தார் டி.எஸ்.பி. மரியாதையை ஒற்றைப் புன்னகையில் ஏற்றுக்கொண்டு எதிர் நாற்காலியில் அமரச்சொன்னார். நாற்காலி நுனியில் பட்டும் படாமலும் பரவுகிறேன். முகத்தில் கணிசமான மரியாதை...

 

 


"சங்கர்...! நாலு தெலுங்குக்கார பயலுக பயங்கர தலைவலியா இருக்காங்க...! நாலு பேரையும் ஏரியாவை விட்டு துரத்தணும்... இந்த ஹெல்ப்பை நீ செய்வியா?''

அடர்த்தியாகச் சிரித்தேன்.

"என்ன சார்... ஹெல்ப் கில்ப்புன்னுகிட்டு... செய்யிடான்னா செய்து கொடுத்துட்டுப்போறேன்.... யாரு சார் அவனுக... என்ன பண்றாங்க?''

"அம்பது அறுபது பொம்பிளைகளை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்றானுக... அனுமந்தராவ், ஹரிநாயுடு, ரவணம்மா, அனுசூயான்னு நாலுபேரு. நம்ப சரகத்திலே இருக்கிற போலீஸாலே அவங்களைக் காலி செய்யமுடியாது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. நாலு பேரும் இடத்தைக் காலி செய்யணும்... புரியுதா...?''


 

auto sankar



ரொம்பவும் குஷியாகிப்போனது. ரொம்ப நாளாக "இதை யாராவது ஒழிக்க மாட்டாங்களா...?” என்று ஏங்கிக்கொண்டிருந்த சங்கதி, ஒழியப்போகிறது... அதுவும் ஒழிக்கப் போகிற பொறுப்பும் இந்த சங்கருக்கே... எத்தனை சந்தோஷமான செய்தி! சட்டென்று வியூகம் அமைத்தேன்.... தளபதிகள் இன்னொரு போருக்குத் தயாரில் இருந்தனர். விதம்விதமான தாக்குதல்கள்... தினுசு தினுசான போர் முறைகள். போலீஸையே மிஞ்சும் செயல்பாடுகள். தேடிப்போனதும் ஆள் அகப்படவில்லையென்றால் போலீஸ் திரும்பிவிடும். அல்லது அந்த நபருக்கு பொறிவைத்துக் காத்திருக்கும். நம்மளோட ஸ்டைலே வேறு!

ஆள் இல்லையென்றதும் கூடுதல் தெம்பு சேர்ந்துகொள்ள வீட்டுக்குள் தர்பாராக நுழைந்து இடத்தை ரணகளப்படுத்தினேன். கலர் டி.வி. சுக்கு நூறாக உடைபட்டது. கட்டில்கள், டேப் ரிக்கார்டு, ஃபிரிஜ் எல்லாமும் துவம்சம். வீட்டிலிருந்த பெண்மணிகளை வேனில் ஏற்றிச்சென்று சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு! "வேலைசெய்து பிழைங்கடி! ஒருசாண் வயித்துக்காக எண்சாண் உடம்பை விக்கறீங்களே... கேவலமா தெரியலை? இன்னொரு தடவை நான் இங்கே வரப்போ உங்களைப்பார்த்தா வெட்டி கொன்னுருவேன்!''

ஒரு மாசம் தொடர்ந்து கலாட்டா. பலமான போலீஸ் சப்போர்ட் வேறு... ஆந்திர ஆசாமிகளுக்கு ஓடுவது தவிர வழியில்லாது போயிற்று. துண்டைக்காணோம் துணியைக் காணோம் என மறைந்துபோனார்கள். ஒருமட்டிலும் திருவான்மியூரிலிருந்து விபச்சாரத் தொழிலைச் சுத்தமா துடைத்தெறிந்தாகிவிட்டது. அப்பாடா!

 

 


ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருப்தி. எத்தனையோ யுத்தமும் ரத்தமும் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த கலாட்டாவிலும் கிடைக்காத பரிபூரண திருப்தி இதில் கிடைத்தது. ஏனென்றால், ஒரு அவலத்தை ஏரியாவைவிட்டு துரத்தியாயிற்று! ஒரு சாக்கடையை அப்புறப்படுத்தியாகிவிட்டது! ரகளை மூலமாக முதன்முதலாக ஒரு சமூக சேவையைச் சாதித்திருப்பதாகவே தோன்றியது.

 

 

prostitution



அதே போல் ஏரியாவாசிகளில் பலரும் நேர்முகமாய் பாராட்டினார்கள். ஊர் பெரியவர்கள் மனமார வாழ்த்துச் சொன்னார்கள். "நல்லகாரியம் பண்ணியிருக்கீங்க சங்கர்! நீங்க நல்லா இருக்கணும்''. மனசு கொள்ளாத சந்தோஷம். பெருமிதமும் கர்வமும் ரெட்டைத் தண்டவாளமாக நெஞ்சு நெடுக ஓட டி.எஸ்.பி.யைப் பார்க்கச் சென்றேன். அவர் ஆர்வத்துடன் என் விரல்களை வாங்கிக்கைக்குள் பொத்திக்கொண்டு விடாமல் கைகுலுக்கினார். 'பரம்வீர் சக்ரா' விருது கிடைத்த சந்தோஷம் பொங்கிற்று மனசுக்குள்.

அமரச் சொன்ன தங்கய்யா... "சங்கர்... இன்னொரு உதவிகூட நீ செய்யணும்'' என்றார். "சொல்லுங்க சார்...'' என்றேன் ஆவலாக... 

முந்தைய பகுதி:

நான் திருட்டுத்தனமா பாலை கறந்தேன், அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்! ஆட்டோ சங்கர் #7

 

அடுத்த பகுதி:

அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #8   

 





 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.