Skip to main content

ஆட்சியை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற கவலை! ஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்ட ப்ளான்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

தேர்தல் முடிவுகள் முன்னே பின்னே இருந்தாலும் மத்தியில் ஆட்சியமைத்து விட முடியும் என கணக்குப் போடும் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற கவலைதான் அதிகமாக உள்ளது என்கின்றன மத்திய உளவுத்துறை வட்டாரங்கள். அதே கவலை பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் எதிரொலித் துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஜெ.வின் உதவியாளராக இருந்து சசிகலாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவராக இருக்கும் பூங்குன்றன் சமீபத்தில் சசிகலாவை சந்தித்தார். அதற்கு முன் அவர் தமிழக முதல்வர் எடப்பாடியையும் சில முக்கிய அமைச்சர்களையும் சந்தித்தார். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளை சசிகலாவிடம் தெரிவித்தார்.

 

ops



தமிழக அரசியல் சூழல் விரைவாக மாறி வருகிறது. இதுவரை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டது இல்லை. முதன்முறையாக தமிழக சபாநாயகர், தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.எல். ஏ.க்களுக்கு கொடுத்த நோட்டீஸில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்மூலம் ஓ.பி.எஸ். உட்பட பதினோரு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்திலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்து அந்த பதினோரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரும். அ.தி.மு.க. பிளவு பட்டு நின்றால் தி.மு.க. வெற்றி பெறுவதை தவிர்க்க முடியாது. எனவே அ.தி.மு.க. மறுபடியும் இணைய வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் ஓரம் கட்டப்பட வேண்டும். சசிகலா மறுபடியும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தலைமை ஏற்க வேண்டும். முதல்வராக சசிகலா யாரை விரும்புகிறாரோ அவரை கொண்டு வரலாம்'' என பூங்குன்றனிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

 

ops



அதை சசிகலாவிடம் அவர் தெரிவித்தபோது, "தினகரன் மீது எனக்கு எப்பொழுதும் பாசம் உண்டு. அவரது மனைவி அனுராதா எனது சகோதரர் சுந்தரவதனத்தின் மகள்தான். ஆனால் அனுராதா ஆட்டம் அ.ம.மு.க.வில் அதிகமாகிவிட்டது. அதனால்தான் அவர்களே நிர்வகிக்கட்டும் என அ.ம.மு.க.வை ஒரு தனி அரசியல் கட்சியாக, தினகரனை தலைவராக போட்டு கட்சி ஆரம்பிக்க நான் கடிதம் கொடுத்தேன். நான் எப்போதும் அக்கா கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த அ.தி.மு.க. பக்கம்தான். நான் எடப்பாடியை முதல்வர் ஆக்கினேன். அவருக்கு பதில் செங்கோட்டையனை முதல்வராக்கியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது'' என சசிகலா சொல்லியிருக்கிறார். அவரிடம், அ.தி.மு.க. அணிகள் இணைவதை பா.ஜ.க. ஆதரிக்கிறது என கூடுதல் தகவலையும் சொல்லியிருக்கிறார் பூங்குன்றன். "நல்லது நடக்கட்டும் பார்க்கலாம். நான் இரட்டை இலையின் பக்கமே' என எடப்பாடிக்கு பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா. இதையொட்டி இப்போது அதற்கான மூவ் நடக்கிறது. இது ஓ.பி.எஸ். தரப்பை அதிர வைத்துள்ளது. "ஜெ. மறைவுக்கு பிறகு தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த்தது மாபெரும் தவறு'' என ஓ.பி.எஸ். வெடித்திருக்கிறார். அத்துடன், "எனக்கெதிராக எடப்பாடி செயல்படுகிறார். அவர் சசிகலாவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் வாரணாசியில் மோடியை சந்தித்து பேசிய விஷயங்களை திரித்து மீடியாக்களில் மாநில உளவுத்துறை மூலம் எடப்பாடி பரப்பினார்'' என டெல்லி பா.ஜ.க. தலைமையில் புகார் கடிதம் வாசித்திருக்கிறாராம் ஓ.பி.எஸ்.

 

sasikala



அதே நேரத்தில், தினகரனின் அ.ம.மு.க. இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும். இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் ஜெயிக்கும் அந்த வெற்றியின் அடிப்படையில் பன்னீருக்கு கல்தா கொடுத்துவிட்டு அவரது இடத்தில் தினகரனை துணை முதல்வராக நியமிப்பார்கள் என       டெல்லிக்கு கிடைத்துள்ள ரிப்போர்ட்டின்படி, "எடப்பாடி ஆட்சி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தொடரும். சசிகலா மீண்டும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

"எடப்பாடி முதல்வராக தொடர்வதை தினகரன் ஏற்றுக் கொள்வாரா?' என அவரது குடும்ப வட்டாரங்களில் கேட்டோம். "சசிகலா சொன்னால் தினகரன் எதையும் செய்வார். அதனால்தான் தினகரன், திவாகரன், விவேக் என அனைவரும் ஒருவித மவுனத்தையே இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்கிறார்கள். மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அளித்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் தினகரனை கேட்காமல்தான் சென்றார்கள். சபாநாயகர் உத்தரவுக்கு தடை என இடைக்கால தீர்ப்பு வந்ததும் தினகரனின் பேச்சைக் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகாமல் இருந்த பிரபு எம்.எல்.ஏ. தினகரன் சொன்ன பிறகு ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். தினகரனின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் அசைவுகள் காட்டுகிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.