Skip to main content

கரோனாவை விரட்டியடிக்கும் மருத்துவப்படை... எப்படி கட்டுப்படுத்துகிறார்கள்? வெளிவந்த தகவல்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

hospital



கரோனா நோய் சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. அதுபோல தமிழகத்தின் வூகானாக, தலைநகரான சென்னை மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “தமிழகத்தில் கரோனா இரண்டாவது நிலையில் இருக்கிறது. பல மாவட்டங்களில் இன்று கரோனாவே இல்லை என்கிற நிலை உருவாகி வருகிறது. சமுதாய தொற்று என்ற நிலையை கரோனா அடைய வில்லை'' என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.


ஆனால் சென்னை நகரில் கரோனா கடந்த வாரம் நூற்றுக்கணக்கான நோயாளிகளை உருவாக்கியுள்ளது. மீடியாக்களில் வேலை செய்பவர்கள் 35 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 30 டாக்டர்கள், 17 முதுநிலை பட்டதாரி மாணவர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் சென்னை நகரில் கரோனா தாக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  hospital



சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு சுகபிரசவம் நடக்கவில்லை. அவரது ரத்தம் திடீரென உறையத் தொடங்கியது. அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவரை பல வார்டுகளில் வைத்து மாற்றி மாற்றி சிகிச்சை அளித்தார்கள். பிரசவ வலி வேகம் பெறவே அவரை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவருக்கு பிறந்த குழந்தை இறந்துபோனது. அந்த பெண்ணும் இறந்து போனார்.


அவருக்கு கரோனா சோதனை, சிகிச்சையின்போதே எடுக்கப்பட்டது. இறந்த பிறகு பெறப்பட்ட அதன் ரிசல்ட் அவருக்கு கரோனா நோய் இருந்ததை உறுதிப்படுத்தியது. அவருக்கு சிகிச்சை அளித்த பல டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் அந்த நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், அத்தனை டாக்டர்களையும், செவிலியர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டது.

அவர் சிகிச்சை பெற்ற கஸ்தூரிபாய் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது. அடையாறு, கேன்சர் இன்ஸ்டியூட்டில் 65 வயது நபருக்கு கரோனா வந்தது. அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இறந்து போனார். அவர் மூலம் அவரது மகனுக்கு கரோனா வந்தது. அவர் ஒரு உணவு பரிமாறும் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார். அந்த நபர் யார் யாருக்கெல்லாம் உணவை கொடுத்தார் என நூற்றுக்கணக்கான பேரை மருத்துவர்கள் கண்டுபிடித்து தனிமை படுத்தினார்கள்.
  hospital



கோயம்பேட்டை சேர்ந்த சலூன் கடை ஊழியருக்கு கரோனா ஏற்பட்டது. அவர் மூலமாக வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பரவியது. இப்படி சங்கலி தொடர்போல கோயம்பேட்டில் பரவிய கரோனா 38 பேரை சென்றடைந்தது. மைலாப்பூரில் ஒரு சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூலம் 30 பேருக்கு கரோனா நோய் பரவியது. பெரம்பூர் டிஇடி தோட்டம் பகுதியில் ஒருவருக்கு பரவிய கரோனா நோய் மிக குறுகிய தெருக்களும் வீடுகளும் கொண்ட பகுதியில் 40 பேரை பாதித்தது.


இப்படி ராயபுரம், மாம்பலம், மைலாப்பூர், கோயம் பேடு, பெரம்பூர் என பல பகுதிகள் கரோனா மண்டலங்களாகவே மாறியுள்ளது. இதில் 400 நோயாளிகளுக்கு யாரிடம் இருந்து கரோனா பரவியது. எப்படி வந்தது என்பதே தெரியவில்லை.

ஒரு நபருக்கு கரோனா நோய் வந்தால் அவர் குறைந்த பட்சம் 3 பேருக்கு அந்த நோயை பரப்புகிறார். அந்த 3 பேர் 10 பேருக்கு நோயை பரப்புகிறார்கள். கரோனா நோய் வளர்ந்து அறிகுறிகளுடன் வெளியே தெரிவதற்கு 7 நாட்கள் ஆகும். அது மற்றவர் களுக்கு முழுவதுமாக பரவுவதற்கு 28 நாட்களாகும். கரோனா நோய் பாதித்த ஒருவர் 14 நாட்களில் குணம் பெறுகிறார். இதுதான் எங்கள் கணக்கு.

ஒருவருக்கு கரோனா நோய் வந்தவுடன் அவர் வாழக் கூடிய பகுதியை 28 நாட்களுக்கு நாங்கள் மூடி வைத்து விடுவோம். அப்படித்தான் மாம்பலம் பகுதியில் முதலில் கரோனா வந்தது. அந்த பகுதியை 28 நாள்கள் மூடி வைத்தோம். இப்பொழுது அந்த பகுதியில் கரோனா நோய் இல்லை. இவ்வாறு நோய் தொற்றால் பாதித்த மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

ஆனால் சென்னையில் நோய் பாதித்த 98 சதவிகித நோயாளிகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. சென்னை நகரில் அதிகபட்சமாக கரோனா சோதனைகளை நடத்துகிறோம். அதனால் நிறைய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ்.

தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் கரோனாவை தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி சென்னை மாவட்ட பொறுப்பாளராக சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சமுதாயத் தொற்று ஏற்பட்டுள்ள சென்னையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இது மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மக்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரிப்பதன் மூலம் வெகு வேகமாக தமிழகம் முழுக்க பரவும். கோயம்பேட்டிற்கு கரோனா வந்ததற்கு காரணம், கரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர்தான். அதனால் சென்னை நகரத்தில் கணக்கில்லாமல் பெருகி வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீனாவில் இருந்து உலகம் முழுக்க வைரஸ் பரவியதை போல சென்னையில் இருந்து தமிழகம் முழுக்க கரோனா பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதே நேரத்தில், இங்குள்ள மருத்துவக் கட்டமைப்பின் முழுவீச்சான பணிகளால், கரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றி விடமுடியும்'' என்கிறார்கள் நூறு சதவீத நம்பிக்கையுடன்.


 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.