Skip to main content

"எங்களிடம் வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கும் மாடாகத்தான் இருக்க வேண்டும்; வேறு யாராவது வாலாட்டினால்..." - கௌதமன் எச்சரிக்கை

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

க

 

சென்னையில் இந்தித் திணிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டம் அருகே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் கௌதமன் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி மீண்டும் எங்களைப் போராட வைக்காதீர்கள் என்றார்.

 

இதுதொடர்பாக பேசியவர் அவர், " இங்கே பேசியவர்கள் எல்லாம் கூறினார்கள் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றியும், அதற்கு எதிராக நாம் எப்படி நம்முடைய போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே பேசியவர்கள் கூறினார்கள். இதிலே முக்கியமான விஷயம் 1965ம் ஆண்டுக்கு முன்பே 1938ம் ஆண்டே இந்தியைத் திணிக்க இவர்கள் முயன்றார்கள். இல்லையென்றால் நாம் ஏன் தாளமுத்து, நடராஜனை இழந்திருக்கப் போகிறோம். ராஜகோபாலச்சாரி காலத்திலேயே அவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சி எடுத்துத் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தார்கள். தற்போது இந்திய ஒன்றியம் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறது.

 

தமிழுக்கு முடிவு கட்டிவிட்டு சமஸ்கிருதத்தைக் கொண்டு வர நினைக்கிறது. இந்தியைத் திணிக்கலாமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. இவர்களுடைய சூழ்ச்சி என்ன? இதை ஒருபோதும் தமிழினம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எங்கள் விவசாயிகளை டெல்லியில் நிர்வாணமாக ஓட விட்டபோது என்ன நடந்தது? கத்திபாரா பாலத்தில் நடைபெற்றது இந்த உலகத்துக்கே தெரியும். இந்திய ஒன்றியத்துக்கும் தெரியும். நம் வரலாறு இன்று நேற்று தோன்றியது இல்லை.சிந்து சமவெளியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற நாணயத்தில் காளை இருந்ததற்கான வரலாறு நமக்கு உண்டு.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடைபெற்றது என்று இவர்களுக்கு நினைவில்லையா என்று தெரியவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என்று பத்திரிகையாளர் மன்றத்தில் நாங்கள் கூறி போராட்டத்தை ஆரம்பித்தோம். அது தீப்பொறி போலப் பற்றி தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி இந்திய ஒன்றியம் அதிர்ந்து போனது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  உச்சநீதிமன்றம் நீங்கள் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டாம் என்று உத்தரவு போட்டது. இந்திய ஒன்றிய அரசு தமிழர்களைப் பார்த்துக் கைவிரித்து நின்றது. கொக்கரித்தது. கடைசியாக நம்முடைய போராட்டத்துக்கு அடிபணிந்து நீங்கள் உங்கள் சட்டமன்றத்திலேயே சட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறி நம்மிடம் பணிந்து போனார்கள். 

 

இந்திய ஒன்றியத்துக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையைக் கொடுக்கிறோம். இந்தப் புரட்சி உங்களுக்கு நல்ல ஒரு பாடத்தைக் கொடுத்திருக்கும். இனிமே எங்களிடம்  வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கின்ற மாடாகத்தான் இருக்க வேண்டும். வேறு எவன் வாலாட்டினாலும் இழுத்து வச்சி ஒட்ட நறுக்கிடுவோம். சண்டை நடந்தால் தலைதெறிக்க ஓடுகின்ற கூட்டம் ஒன்றிய கூட்டம். அது எத்தனையோ இடத்தில் நடைபெற்று இருக்கிறது. சண்டை என்றால் அதை நோக்கி ஓடுகின்ற கூட்டம் இந்தப் பச்சைத் தமிழினக்கூட்டம். எங்கள் வரலாறு தெரியவில்லை என்றால் புறநானூறு, திருக்குறளைப் படியுங்கள். இரண்டு வரி தப்புத் தப்பாக மட்டும் படிக்காதீர்கள். அர்த்தத்தை உள்வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

 

 

Next Story

இந்தி மொழி பற்றிய கேள்வி; கோபமாய் பதிலளித்த விஜய் சேதுபதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay sethupathy about hindi imposition

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.

Next Story

'கோவாவில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்' - தமிழக முதல்வர் கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 26/12/2023
 'Hindi is the official language and not the national language'; Chief minister condemns player for insulting Tamil woman

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவரால் மிரட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.  

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவர். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ’தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி பாடம் எடுக்கும் வகையில் தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல. பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சி தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.