Skip to main content

காங்கிரசுக்கு ஆக்சிஜன் அளித்த ஹிமாச்சல் வெற்றி; கேரள ஸ்டைலில் ஆட்சியை திருப்பி போட்ட மக்கள்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

hjk

 

நடந்து முடிந்த குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் காலை முதலே வெளியாகி வரும் நிலையில் தற்போது பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. குஜராத், இமாச்சல் மாநிலத்தின் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையிலான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குஜராத்தில் 120 சீட் வரை பாஜக ஜெயிக்கலாம் என்ற கருத்துக்கணிப்பை உடைத்து 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று 7 முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் யாருமே எதிர்பாராத வண்ணம் வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்து கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்கியுள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க மீண்டும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக முடிசூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்திருந்த நிலையில், பாஜக தரப்பு அதிர்ச்சி அடையும் வகையிலும், காங்கிரஸ் தரப்பு மகிழ்ச்சி அடையும் வகையிலும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கைகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை. அந்த வகையில் கேரள மக்கள் எப்படி ஆளும் கட்சியை அடுத்த முறை வெற்றிபெற வைப்பதில்லையோ அதே போல இமாச்சல் மக்களும் இந்த முறை ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள்.

 

ஆனால் இந்தமுறை கள நிலவரம் என்பது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று சொல்வதற்குரிய எந்த அறிகுறிகளும் இல்லாமலே இருந்து வந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது. வழக்கம்போல் எதிர்க்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர். 

 

தோல்வியில் தொடர்ந்து தத்தளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஆக்சிஜனாக இந்த வெற்றி பார்க்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்றது போல் குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா அல்லது அரசியல் விளையாட்டை இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக அரங்கேற்றுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். 

 

 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.