Skip to main content

மாரடைப்பு; பைபாஸ் - விளக்கும் மருத்துவர் சென் பாலன்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Heart Attack.. Bypass.. - Dr. Chen Balan explains

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையிலும், அவரது திடீர் உடல் நலக்குறைவை சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர் சென் பாலனை சந்தித்து மாரடைப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவர் நமக்கு அளித்த பேட்டி;

 

நல்ல உடல் நிலையோடு இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுமா?

 

நிச்சயமாக நெஞ்சு வலி எப்போது வேண்டுமானாலும் வரும். நல்ல ஆரோக்கியமாக இருந்தவர் அடுத்த நிமிடத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது போன்ற எத்தனையோ செய்தியை நாம் படிக்கிறோம். நன்றாக இருக்கும் ஒருவருக்கு அடுத்த ஐந்தே நிமிடத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரே போகும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு மாரடைப்பு வராது என்று மக்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.

 

பைபாஸ் சிகிச்சை என்றால் என்ன?

 

ரத்தவோட்டம் இருந்தால்தான் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்யும். அதே போல், மனிதனின் முக்கியமான உறுப்பான இதயத்திற்கும் ரத்தவோட்டம் தேவைப்படும். இதயத்திற்கு சப்ளை செய்யும் ரத்த குழாயில்  இரண்டு, மூன்று கிளை இருக்கும். அந்த கிளையில் அடைப்பு ஏற்பட்டால், இதயம் வேலை பார்ப்பதற்கு தேவையான ரத்தம் அதற்கு கிடைக்காது. அதை தான் நாம் மாரடைப்பு என்கிறோம்.

 

இந்த அடைப்பை இரண்டு வகையில் தீர்க்கலாம். முதல் வகையான BCI என்ற முறையில், ரத்த நாளம் வழியாக ஏதாவது ஒரு சிறிய ஊசி மாதிரியான கம்பியை செலுத்தி இதய ரத்த குழாயில் இருக்கின்ற அடைப்பை எடுத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்வார்கள்.

 

அடுத்ததாக பைபாஸ் சர்ஜரி என்று சொல்லலாம். அதில் ரத்தக் குழாயில் பெருமளவு சேதம் அடைந்திருப்பது அல்லது ரத்த குழாயில் கொழுப்பு படிந்து இருக்கிறது எனும்போது பைபாஸ் சிகிச்சை மேற்கொள்வோம். அந்த சிகிச்சையில், உடம்பில் உள்ள வேறு ஒரு இடத்தில் சிறிய ரத்த குழாயை எடுத்து இதயத்தில் ஏற்பட்ட ரத்த குழாயில் பைபாஸ் மூலம் ஒன்றிணைத்து ரத்தத்தை சீர் செய்வோம். இந்த முறையை தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்திருக்கிறார்கள்.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்த பிறகு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர முடியுமா?

 

இது அவருடைய  மருத்துவ நிலையை பொறுத்து தான் இருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் கூட இதயத்தில் ரத்த அழுத்தம் சீரற்று இருக்கலாம். அதே போல் ரத்தம் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கு சில மருந்துகள் பயன்படுத்துவார்கள். அந்த மருந்து சில நேரத்தில் மூளையில் கசிவு ஏற்பட்டு வலிப்பு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே அவருடைய மருத்துவ நிலையை  பொறுத்து தான் அவருடைய ஒத்துழைப்பு இருக்கும். ஒருவேளை, இதெல்லாம் சரியாக இருந்தால் அவரால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வாய்ப்பு இருக்கிறது.  

 

செந்தில் பாலாஜிக்கு 70% ரத்த குழாய் அடைப்பு என்று மருத்துவ குழுவினர் சொல்கிறார்கள். இது எந்தளவுக்கு அபாயகரமானதாக இருக்கும்?

 

இதய அடைப்பை பொறுத்தவரையில் அபாயகரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுகோலில் வைத்து சொல்ல முடியாது. மேலும், ரத்த அடைப்பு பாதிப்பு அவருடைய ரத்த தேவையை பொறுத்து தான் சொல்ல முடியும். அதே மாதிரி இதய தசை உயிரோடு இருப்பதற்கான ஆக்ஸிஜன் சீராக கிடைக்கிறதா என்பதை வைத்து தான் சொல்ல வேண்டுமே தவிர வெறும் சதவீதத்தை வைத்து மட்டும் அபாயகரத்தை சொல்ல முடியாது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கால்களை எட்டி உதைக்கிறார். இதனை பலரும் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். நெஞ்சுவலி ஏற்பட்ட ஒருவர் அப்படி செயல்பட முடியுமா?

 

ஒருவரை தண்ணீரில் அழுத்தும்போது, சில நொடிகளில் அவருக்கு மூச்சு திணறி ஒரு வித பயம் ஏற்பட்டு தன்னை அறியாமல் எதையோ செய்வார்கள். அதே போன்ற பயம் தான் மாரடைப்பு ஏற்படும் போதும் வரும். ஏனென்றால், மூளை தனக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது தன்னுடைய சக்தியை பயன்படுத்தி அனைத்து ஆக்ஸிஜனையும் எடுத்துக் கொள்ள நினைக்கும். இந்த சூழ்நிலையில், நோயாளிகள்  எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை யூகிக்க முடியாது.

 

மூச்சுக் காற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர் கை கால் ஆட்டுவது, உதைப்பது போன்ற அனைத்து  வாய்ப்பும் இருக்கிறது. சில நேரத்தில் இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய் இறுகுவதால் மூச்சு திணறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் முதலுதவிக்காக ஒரு மாத்திரையை கொடுக்க வேண்டும். அந்த மாத்திரையை கொடுத்தால், ரத்த குழாய் உடனடியாக விரிவடைந்து இதயத்திற்கு தேவையான ரத்தம் திரும்ப கிடைக்கும். அந்த சூழ்நிலையின் போது அவர் சாதாரண நிலைக்கு வருவார்.

 

 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
The court ordered the enforcement department! for Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Court order to enforcement department fot Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (20-02-24) நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.