Skip to main content

"இது அழுகிப் போன மனங்களின் அருவருப்பான குற்றச்சாட்டு" - விளாசும் பேராசிரியர் ஹாஜா கனி! 

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

 Haja Kani  Interview

 

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு சர்ச்சையானது மற்றும் சம கால அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பேராசிரியர் ஹாஜா கனி எடுத்து வைக்கிறார்.

 

சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக, உதயநிதி சனாதனம் குறித்து பேசியுள்ளார் என்று சொல்வது அழுகிப் போன மனங்களின் அருவருப்பான குற்றச்சாட்டு. பிற சமயத்தினரின் நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேச இஸ்லாமியர்களுக்கு உரிமையில்லை என்று தான் இஸ்லாம் சொல்கிறது. சான்றிதழ்படி உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்து தான். அவர் சனாதனத்தைக் கேள்வி கேட்பதால் சிறுபான்மையினருக்கு என்ன சந்தோஷம் வந்துவிடும்? முத்தலாக் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது "ஏன் எங்கள் மதத்தில் தலையிடுகிறீர்கள்?" என்று யாரும் கேட்கவில்லை. 

 

அன்று மதரசாக்களில் தான் பொதுக்கல்வி என்பது இருந்தது. அங்கு படித்த ராஜாராம் மோகன்ராய் தான் உடன்கட்டை ஏறுதலை தடுத்து நிறுத்தினார். உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையாகப் பார்க்க முடியுமா? நீ படிக்கக் கூடாது, தொட்டால் தீட்டு என்றெல்லாம் சொல்வது மதப் பிரச்சனையா? உதயநிதி எந்த மதத்தையாவது குறிப்பிட்டு பேசினாரா? இஸ்லாமியர்கள் மீது தினந்தோறும் வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும் பாஜகவினர் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. உதயநிதி பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசும் மோடி, பற்றி எரியும் மணிப்பூர் பற்றி ஏன் ஒருமுறை கூட பேசவில்லை?

 

இவர்கள் சனாதனம் என்று சொல்வது உண்மையில் ஆன்மீகமா? உதயநிதி சொன்னது பொய் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? இட ஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறது என்று அதன் தலைவர் இப்போது பேசுகிறார். இட ஒதுக்கீட்டை எதிர்த்தால் இங்கு அரசியல் செய்ய முடியாது என்கிற நிலை இருக்கிறது. நம்முடைய தலைவர்களின் கடின உழைப்பும் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளும் தான் தமிழ்நாட்டை இந்த உயரத்தில் வைத்திருக்கின்றன. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது.

 

உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ளார் ஒரு உத்தரப் பிரதேச சாமியார். இதையே ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாத சமுதாயம் என்று இவர்கள் சொல்லியிருப்பார்கள். இப்போது மீடியாக்கள் உட்பட அனைவரும் அமைதி காக்கிறார்கள். உதயநிதிக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய மௌலானாவும் பேசியுள்ளார். போலிகளை எப்போதுமே இஸ்லாமிய சமுதாயம் அங்கீகரிக்காது. உதயநிதியோடு நாடு நிற்கிறது. பெரும்பான்மை மக்களின் காயங்களுக்கு நியாயம் தேடுவது தான் உதயநிதியின் பேச்சு.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.