Skip to main content

"சிரித்த முகத்துடன் சத்தமாக அழைப்பார், முதுகில் தட்டிக்கொடுப்பார்" -வசந்தகுமார் நினைவுகளை பகிர்ந்த செல்லதுரை

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
h vasanthakumar

 

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான வசந்த் அன் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார் சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார். இன்று காலை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வசந்த் அன் கோ நிறுவன ஊழியர்கள், தி.நகர் வியாபாரிகள், தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

பின்னர் அவரது உடல் காமராஜர் அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வசந்தகுமாரின் உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னியரசு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் நம்மிடம் பேசிய செல்லதுரை, அவரை பார்த்தாலே சுறுசுறுப்பு வரும். பார்த்தவுடனேயே என்ன செல்லதுரை என்று சிரித்த முகத்துடன் சத்தமாக அழைப்பார். உடனிருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். முதுகில் தட்டிக் கொடுப்பார். நாம சோர்வாக போயிருந்தாலும், கலகலப்புடன் பேசி நம்மை உற்சாகப்படுத்தி திருப்பி அனுப்புவார். 

 

h vasanthakumar

 

 

வியாபாரத்தை அவர் ஆரம்பிக்கும்போது எந்த பொருளாதார பின்னணியும் அவருக்கு இல்லை. இன்று அவர் எட்டா உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். வியாபாரத்தையும், அரசியலையும் இணைந்தே பார்த்தவர். பிரித்து பார்க்க மாட்டார். இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றார். வெற்றிப் படிக்கட்டு என்ற நூலை எழுதியதற்கும், அதைப் பற்றி பேசுவதற்கும் சரியான நபர் அண்ணன் வசந்தகுமார்தான். 

 

அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் கிராமம். இந்த கிராமம் இன்று வெளியுலகுக்கு தெரிந்தது என்றால் வசந்தகுமார்தான். கரோனா காலத்தில் அவரை போல் ஓடி ஒடி உதவி செய்த எம்.பி.யை பார்க்க முடியாது. அவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார். இனி இப்படி ஒரு எம்.பி. நமது தொகுதிக்கு கிடைப்பாரா? என்று ஆண்களும், பெண்களும் கண்ணீர் விடுகிறார்கள். அவருடைய தொகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு துக்கம் நடந்தது போல் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு மிக முக்கிய காரணம். 

 

h vasanthakumar

 

அவருடைய காரில் எப்போதும் வேட்டி, சேலை, துண்டு, சட்டை, அரிசி இப்படி ஏதாவது இருக்கும். நான் பார்த்திருக்கிறேன். காரில் போகும்போது கிராமங்களில் வண்டியை நிறுத்தி, வேட்டி சேலை அரிசியை எடுத்து கொடுப்பார். தன் சொந்த காசில்தான் பல பேர் பசியை போக்கியிருக்கிறார். நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். படிப்புக்கு பணம் கொடுத்திருக்கிறார். இதனை நான் நேரில் பார்த்தவன். இதனை யாராலும் மறுக்க முடியாது. காமராஜரை மிகவும் நேசிப்பார். அவரது வழியில் செல்லக்கூடியவர். அதனால்தான் பல மாணவர்களின் பசியையும் போக்கியிருக்கிறார். பல மாணவர்களின் படிப்பு கனவையும் நிறைவேற்றியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை எங்கள் பகுதியைச் சேந்தவர். எனக்கு தூரத்து உறவினர். தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு. 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆரம்ப காலக்கட்டத்தில் எங்கள் தலைவர் திருமாவளவன் உள்பட எங்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தால் ஊக்குவிப்பார். உங்களைப்போன்றவர்கள் உயரத்திற்கு வர வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். உறுதுணையாக நின்றிருக்கிறார். கடைசி வரைக்கும் அந்த நட்பை தொடர்ந்து வந்தார். அதேபோல் எங்கள் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அவர் மேல் தனிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.