Skip to main content

உடையும் பிம்பம்... குஜராத் மாடலின் கோர முகம்...

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

 

gujarat covid mismanagement crisis

 

2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடி, அக்காலகட்டத்தில் முன்வைத்த ஒரு முழக்கம் 'துடிப்பான குஜராத்'. குஜராத்தை இந்தியாவின் முன்மாதிரியான மாநிலமாக மாற்றுவோம் என முழங்கிய மோடி, 13 ஆண்டுகாலம் அம்மாநில முதல்வராகத் தனது பணியை முடித்து இந்தியாவின் பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். 2014 -ல் வீசியதாகச் சொல்லப்படும் மோடி அலையில், பாஜகவினரால் அதிகளவில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் 'குஜராத் மாடல்'. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத் என்றும், அம்மாநிலத்தில் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தவர் மோடி என்றும் ஒரு பிம்பம் இப்பிரச்சாரத்தில் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக மெல்ல விரிசல் விட்டுவந்த 'குஜராத் மாடல்' என்ற இந்த பிம்பம் தற்போதைய கரோனா விவகாரத்தால் முற்றிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது.

 

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ், கடந்த சில வாரங்களாகப் பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களில் இவ்வைரஸின் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதில் வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை இவற்றைக் கடந்து மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மை, மருந்து தட்டுப்பாடு, இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய போதிய வசதியின்மை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, மருந்துகளின் கள்ளச்சந்தை பெருக்கம் எனத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாடல் மாநிலம் என அழைக்கப்பட்ட குஜராத் மாநிலம். 

 

gujarat covid mismanagement crisis

 

அம்மாநிலத்தில் நேற்றைய புள்ளிவிவரங்களின்படி, 24 மணிநேரத்தில் 8,152 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகளும், 81 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது, அம்மாநிலம் இதுவரை கண்டிராத உச்சபட்ச பாதிப்பாகும். பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், செய்வதறியாது திணறிப்போய் நிற்கிறது குஜராத் மாநிலம். கரோனாவால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையைக் கையாள போதிய வசதி இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், களநிலவரமோ வேறொரு வகையான தகவலை நாட்டிற்குத் தந்துகொண்டிருக்கிறது. 

 

கரோனா பாதித்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி வரும் மக்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதி கூட இல்லாத சூழலிலேயே குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன. அப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரண தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை எனப் பல இடர்பாடுகளைச் சந்தித்தே நோயாளிகள் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது. போதிய வசதியின்மையால் பல மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கு ஒன்றாக சிகிச்சையளிக்கும் சூழலும், மருத்துவமனை வராண்டா தரையில் நோயாளிகளைப் படுக்க வைத்து சிகிச்சையளிக்கும் சூழலும் நிலவிவருகிறது. 

 

gujarat covid mismanagement crisis

 

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதென்பது இவ்வளவு கடினமானதென்றால், ஆம்புலன்ஸை பிடித்து மருத்துவமனைக்குச் செல்வதென்பதே பல பகுதிகளில் இதனைவிடக் கடினமாக இருக்கின்றது. பல இடங்களில் குறைவான ஆம்புலன்ஸ்கள் இருப்பதனாலும், சில இடங்களில் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாலும் ஆம்புலன்ஸை பிடிப்பதே குதிரைக் கொம்பாகிவிடுகிறது இதுபோன்ற இடங்களில். உதவி எண்ணுக்கு அழைத்துவிட்டு ஆம்புலன்ஸுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பது, மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பல மணிநேர காத்திருப்பது என அல்லல்படும் மக்கள், வைரஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தினை பெறவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.   

 

கடந்த வாரம் அம்மாநிலத்தில் ஏற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக, ஒரே நாளில் இம்மருந்தினை வாங்க நோயாளிகளின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளின் முன்பு கூடியது மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த மாதமே குஜராத் மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசிடம், கரோனா தடுப்பு பணிகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மாநில அரசோ, நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், வைரஸ் பரவலைக் கையாள போதிய வசதிகள் உள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தது. ஆனால், மக்களோ அம்புலன்ஸுக்கும், மருத்துவமனை படுக்கைக்கும், மருந்துகளுக்கும் காத்திருக்கும் அவலமே அங்கு நிலவி வருவதாக உள்ளூர்வாசிகள் குமுறுகின்றனர். இப்படி ஒவ்வொரு காத்திருப்பும் மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. 

 

gujarat covid mismanagement crisis

 

ஆனால், இந்த காத்திருப்புகளை எல்லாம் விட மக்கள் மனதை மேலும் ரணமாக்கியிருக்கக்கூடிய மற்றொரு காத்திருப்பு, உடல் தகனங்களுக்கான காத்திருப்பு. கரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் இறந்த தங்களது உறவினர்களின் உடலுக்காக மருத்துவமனையில் காத்திருந்து அவற்றைப் பெறும் மக்கள், அந்த உடல்களை எரியூட்டுவதற்கான தகன உலைகளைக் கண்டறிவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அம்மாநிலத்தின் பல தகன உலைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு உலையின் இரும்பு அடைப்புகள் உருகும் நிலைக்குச் சென்றுள்ளன. தகன உலைக்காகப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில், பலர் திறந்த மைதானங்களில் வைத்தே உடல்களை எரியூட்டும் சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன. அதேபோல, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ மற்றும் பார்சி மக்களும் உடலைப் புதைக்க முடியாத சூழலில் உடலைத் தகனம் செய்ய அம்மத சபைகள் அனுமதியளித்துள்ளன. 

 

இப்படி மக்கள் பல்வேறு இன்னல்கள் சந்தித்துக் கொண்டிருக்கையில் கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி பல்வேறு வகையான ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளும் அம்மாநிலத்தில் நடந்தேறி வருகின்றன. அகமதாபாத்தில், கரோனாவால் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களைத் திருடிய அரசு மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, 800 ரூபாய் மதிப்புள்ள ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து குஜராத்தின் கள்ளச்சந்தைகளில் ரூ.12,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல்துறை சிலரைக் கைதும் செய்துள்ளது. திருட்டு, கள்ளச்சந்தை இவற்றையெல்லாம் கடந்து போலி கரோனா சோதனைகளும் அம்மாநிலத்தில் நடைபெறுவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

gujarat covid mismanagement crisis

 

இந்த வாரத் தொடக்கத்தில், அகமதாபாத்தின் கோடாசர் பகுதியில் 3,000 க்கும் மேற்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்திய ஒரு ஆய்வகத்தை, அங்குச் சோதனை செய்துகொண்டவர்கள் புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அந்த ஆய்வகத்தில் ஆன்டிஜென் சோதனைகளை நடத்துவதற்கு உபகரணங்கள் எதுவுமே இல்லாததும், மக்களுக்கு அந்த ஆய்வகத்தினர் போலியான சோதனை முடிவுகளைத் தெரிவித்து, பணம் சம்பாதித்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டது. 

 

இப்படி, குஜராத்தில் மக்கள் கரோனாவுடனும், அடிப்படை வசதியின்மையுடனும் போராடிக்கொண்டிருக்கையில், இவ்வாரம் நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகளின் கேள்வியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக டி.ஆர்.டி.ஓ உதவியுடன் 900 படுக்கை வசதி ஏற்பாடு செய்வது, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்வது, ரெம்டெசிவிர் மருந்து இருப்பை உறுதி செய்வது எனக் கடந்த வாரம் திடீர் வேகம் காட்டியது குஜராத் மாநில அரசு. நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க மருந்துகள், ஊசி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத மருத்துவ வல்லுநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்கூறி அகமதாபாத் மருத்துவச் சங்கம் குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. பிரதமரால் சிலாகித்துக் கூறப்பட்டு வந்த மாடல் மாநிலமான குஜராத்தின் வளர்ச்சி எனும் பிம்பத்தை கரோனா இன்று ஆட்டம்காண வைத்துள்ளது. 

 

 

 

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்தம்பித்த குஜராத்; பாஜகவிற்கு எதிராக வெகுண்டு எழுந்த ராஜ்புத் சமூகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
gujarat rajput struggle against bjp in rupala speech

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரூபாலா தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒன்று தற்போது பாஜகவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ''ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

gujarat rajput struggle against bjp in rupala speech

இதனிடையே, தவறை உணர்ந்த மத்திய அமைச்சர் ரூபாலா ராஜபுத்திர சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ராஜபுத்திர சமுதாய மக்கள் மனம் மாறவில்லை. ரூபாலாவை பதவி நீக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ராஜ்கோட் தொகுதியில் நிறுத்தப்படும் ரூபாலாவை திரும்பப்பெற வேண்டும் எனப் பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜக தரப்பில் இதற்கு செவிசாய்க்காததால், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் போராடுவோம் என்று ராஜபுத்திரர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். அதன்படி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில், ‘நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான ராஜபுத்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

gujarat rajput struggle against bjp in rupala speech

இதனிடையே, பேசிய ராஜ்புத் சங்கலான் சமிதி தலைவர் கரன்சிங் சாவ்தா, ''ஏப்ரல் 19-க்குள் ரூபாலாவின் வேட்புமனுவை பாஜக வாபஸ் பெறவில்லை என்றால், தங்கள் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.." என்று தெரிவித்துள்ளார். இது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாஜக வெற்றிக்கு உதவிய ராஜபுத்திரர் சமுதாயம் இந்த முறை போர்க்கொடி தூக்கியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ரூபாலாவை திரும்பப் பெறுவது என்பது ராஜ்கோட் தொகுதியில் செல்வாக்குமிக்க அவர் சமூகத்தின் வாக்குவங்கியை பாதிக்கும் எனக் கருதுகிறார்கள். அதனால், இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியாமல் டெல்லி வெள்ளைக் கொடியை காட்டி வருகிறது. ஆனால், ராஜ்கோட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ரூபாலாவிற்கு சமூதாய ஓட்டு இருப்பதால் அங்கு அவர் தப்பினாலும், அவரின் சர்ச்சைப் பேச்சு ஓட்டுமொத்த ராஜபுத்திர சமுதாயத்தினரைப் பாஜகவிற்கு எதிராக ஒன்றுசேர்த்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இருக்கும் ராஜபுத்திர சமுதாயத்தினர், பாஜகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சர்ச்சை பேச்சு விவகாரம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.