Skip to main content

ஒரு மளிகைக் கடைக்காரரின் தாராள மனம் 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா மீன்சுருட்டி அருகே உள்ளது மேலணிக்குழி. இந்த ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் கொஞ்சம் பெரிய கிராமம் மேலணிக்குழி. அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்க இந்த ஊருக்கு வருவார்கள். இந்த ஊரில் சண்முக விலாஸ் என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் கந்தசாமி. 
 

 

 

store



கரோனா நோய் பாதிப்பு வராமல் மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள். மக்களுக்கு வருவாய் போதிய வருவாய் இல்லை. அரசாங்கத்திற்கு செலவுகள் அதிகம். எனவே அரசு வழியாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த கந்தசாமி தன் மளிகை கடை வருமானத்தின் மூலம் சேமித்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அளிப்பதற்கு முடிவு செய்தார்.
 

ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கந்தசாமி, வட்டாட்சியர் கலைவாணனை சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்குமாறு கூறி வழங்கினார்.
 

ஒரு குக்கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ஒரு சிறிய வியாபாரி, ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியது கண்டு அங்கிருந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கந்தசாமிக்கு நன்றி தெரிவித்தனர். 
 

அப்போது கந்தசாமி, மக்களிடமிருந்து தான் என்னைப் போன்றவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதை நேரடியாக செய்வதற்கு என்னைப்போன்ற சாதாரணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் அரசு மூலம் இந்த உதவி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதற்காக முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கச் சொல்லி வட்டாட்சியர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை அளித்துள்ளேன்.
 

என்னைப் போன்று சிறிய பெரிய வியாபாரிகள் இதுபோன்று அரசுக்கும் மக்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய முன்வரவேண்டும். எவ்வளவு பணம் இருந்தாலும் அதை மக்களுக்கு கொடுப்பதற்கு நல்ல மனம் உள்ளவர்கள் முன்வரவேண்டும். அதுவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசும் சிரமப்படுகிறது, மக்களும் சிரப்படுகிறார்கள். ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரம் என்பார்கள். அதுபோல அனைவரும் உதவ வேண்டும் என்கிறார் கந்தசாமி. ஒரு குக்கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ஒரு சிறிய வியாபாரியான கந்தசாமியே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவும்போது, தமிழகத்தில் உள்ள செல்வந்தர்கள் பலருக்கும் உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும், மக்கள் பசி இல்லாமல் கரோனா நோயை எதிர்த்து மீண்டு வருவார்கள்.
 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.