Skip to main content

பசுமை வழிச்சாலை எதிர்ப்பில் பம்மும் திமுக எம்.எல்.ஏக்கள் – வெதும்பும் விவசாயிகள்!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

 

சேலம் - சென்னை இடையே 274 கி.மீ தூரம் அமைக்கப்படும் 8 வழி பசுமைவழி விரைவுச்சாலை அமைப்பால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்கள், காடுகள், கிராமங்கள் அழிப்படப்போகின்றன. இந்த சாலையை அமைத்தே தீருவோம் என அதிமுகவை சேர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாக யார் பேசினாலும், கூட்டம் நடத்தினாலும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

 

 


வன்முறையை தூண்டினார் என நடிகர் மன்சூர்அலிகான், இயற்கை ஆர்வலர் பியூஷ்மனுஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய சங்க பிரமுகர்கள், விவசாயிகளை திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்த முயன்றார்கள் என ஜீன் 20ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களோடு ஆலோசனை கூட்டத்துக்கு வந்த 22 விவசாயிகள் வரும் வழியிலேயே போலிஸார் கைது செய்தனர். சி.பி.எம் மற்றும் விவசாய சங்கத்தினரின் போராட்டத்தால் விடுதலை செய்தது போலிஸ்.
 

இந்நிலையில் ஜீன் 23ந் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுகவினர் சார்பில், பசுமை வழிச்சாலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் செயல்தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிருப்தியை விவசாய குடி பெருமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் 5 தொகுதிகளில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. செங்கம், கீழ்பென்னாத்தூர், போளுர், வந்தவாசி என 4 தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் வழியாகத்தான் பசுமைவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொகுதி எம்.எல்.ஏக்களான மு.பெ.கிரி, கு.பிச்சாண்டி, கே.வி.சேகரன், அம்பேத்குமார் யாரும் இதுவரை விவசாய மக்களுக்காக பேசவில்லை.
 

dmk mla


இந்த சாலையால் இந்த தொகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, 99 கிராமங்கள் பாதிப்படைகின்றன. இந்த பிரச்சனைக்காக இடதுசாரிகள், மதிமுக, பசுமை அமைப்புகள் தான் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று நேரடியாக மக்களை சந்தித்து ஆறுதல் கூறி போராட்டத்துக்கு மக்களை திரட்டி வருகிறதே தவிர. இதுவரை திமுக நிர்வாகிகளோ, திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

தங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள், யார் பின்னாடி நாம் திரளுவது என திக்கு தெரியாமல் பாதிக்கப்படும் மக்கள் தத்தளிக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை குறைந்த பட்சம் சந்தித்து ஆறுதல் கூறி, சட்டப்படி என்ன செய்யலாம் என்பதை கூட இந்த தொகுதி எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் கூறவில்லை என்பது இப்பகுதி மக்களின் வருத்தம்.

சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை போல திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருந்தால் எங்களுக்கு ஆறுதலாக இருந்துயிருக்கும். காரணம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்தளவு கி.மீ.களே இந்த பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 122 கி.மீ தூரம் செல்வதால் அதிகளவு பாதிப்படைவது திருவண்ணாமலை மாவட்டம் தான்.
 

திமுகவுக்கு பலமுள்ள இந்த மாவட்டத்தில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆட்சியில் உள்ள அதிமுக தான் எங்களை அழிக்க இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என்றால் நம்பி வாக்களித்த திமுகவினரும் பாரமுகமாக இருக்கிறார்களே என மக்கள் வெதும்புகிறார்கள் என புலம்புகிறார்கள் மக்களை திரட்டும் பணியில் உள்ள அமைப்பினர்.


 

 

நியாயமாக இந்த பிரச்சனைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கள் கட்சி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும், அப்படி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள், என்ன எதிர்த்தாலும் இந்த திட்டம் வந்தே தீரும், அரசாங்கத்தை எதிர்ப்பது வீண் வேலை என சொல்லிக்கொண்டு உள்ளார்கள். தேர்தலில் தோற்றுவிடுவோம் என தெரிந்தே போட்டியிடுவதில்லையா. அதுப்போலத்தான் வருவது வரட்டும், எதிர்த்து குரல் கொடுப்போம் என்கிற எண்ணமே எங்கள் நிர்வாகிகளிடம் இல்லை என புலம்பியவர்கள். இப்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதவராக நாங்கள் இல்லையென்றால் வரும் தேர்தலில் அவர்களிடம் எப்படி வாக்கு கேட்டு செல்வது என புலம்புகிறார்கள்.
 

திமுக நிர்வாகிகள் இப்படி ஒதுங்கி நிற்பதை பார்க்கும்போது ஆளும்கட்சியுடன் மறைமுக கூட்டு வைத்துள்ளார்களோ என்ற எண்ணம் வருவதாகவும் கவலைத் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்