Skip to main content

"நான் அரசியலுக்கு வந்தப்ப கவுண்டமணி அடித்த கமெண்ட்!" - கார்த்திக் 

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

இன்றும் மக்களின் மனதில் மறக்க முடியாத பல காட்சிகளை நடித்தவர், அந்த காலத்து இளம் பெண்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர், 'மிஸ்டர் சந்திரமௌலி...' என்று அவர் பேசிய வசனம் இன்றும் ஒலிக்கிறது... இப்படி சினிமாவில் நவரச நாயகனாக ஜொலித்த கார்த்திக் அரசியலில் நகைச்சுவை நாயகனாகப் பார்க்கப்பட்டார். அரசியல் களம் அவருக்குப் புரிபடும் முன்னரே தானிருந்த கட்சிக்குள்ளேயும் சரி, பிற கட்சிகளாலும் சரி பந்தாடப்பட்டார். தேர்தலில் இவர் அறிவித்த வேட்பாளர்களை அதிமுக அள்ளிக்கொண்டு போனதெல்லாம் காமெடி ட்ராஜெடி. இன்று ரஜினி, கமல், விஜய், விஷால் என சினிமா அரசியல் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் அவரை சந்தித்து அவரது அரசியல் பற்றி பேசினோம்...

 

karthik



"பத்து வருஷமா அரசியலில் இருந்த நான், இப்போ ரெண்டு வருஷமா விலகியிருக்கேன். முதலில் நான் ஆரம்பிச்சது கட்சி இல்ல, 'சரணாலயம் நற்பணி இயக்கம்'தான். அதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க, பிரச்சாரம் செய்ய, பல இடங்களுக்குப் பயணம் செய்தேன். ராஜபாளையம் போனேன், மதுரை தமுக்கம் மைதானத்துக்குப் போனேன்... அங்கெல்லாம் கூடிய கூட்டத்தையும் மக்கள் காட்டுன பாசத்தையும் பார்த்து என்னை அரசியலுக்கு இழுத்தாங்க. அதுதான் உண்மை.

 

 


முதலில் நான் ஒத்துக்கலை. "ஏன்பா... எனக்கும் அரசியலுக்கும் சுத்தமா சம்மந்தமே கிடையாது. நற்பணி இயக்கம் வேற, அரசியல் வேற, என்னை ஏன் கூப்பிடுறீங்க?"னு கேட்டேன். அதுக்கு, "ரெண்டும் கிட்டத்தட்ட ஒன்னுதான், நீங்க இங்க வந்தா இன்னும் அதிகமா நல்லது செய்யலாம். அதிகாரமும் கிடைக்கும்"னு சொன்னாங்க. ரொம்ப யோசிச்சுட்டு, பல விஷயங்களையும் ஆராய்ஞ்சுட்டு, அப்புறமா ஓகே சொல்லிட்டேன். முதலில் ரெண்டு வருஷம் நல்லாதான் போச்சு. அப்புறமாதான் நான் உணர்ந்தேன். அது ரொம்ப சிக்கலான வேலை. அரசியலில் இருந்தா ஃபுல்டைம் இருக்கணும், இல்லைனா இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் என்னால் ஃபுல்டைமா இருக்க முடியல. நிறைய வேலைகள் செய்து கொண்டிருந்தேன். படம் இயக்கணும்னு எண்ணம் இருந்தது.

  karthik on stage



அரசியலில் மட்டும் சூதாட்டம் பண்ண முடியாது. முழுசா இங்க இருந்தாத்தான் மக்கள் நம்மை நம்புவாங்க. இல்லைனா, விரலை சுண்டுவதற்குள் எல்லாம் மாறிவிடும். நான் அப்போ அரசியலில் இறங்கி முதல் சுற்றுப்பயணம் போயிட்டு வந்தேன். ஷூட்டிங்ல இருந்தேன். கவுண்டமணி பக்கத்துல இன்னொரு ஷூட்டிங்குக்காக வந்திருந்தார். பார்த்தப்போ டூர்லாம் எப்படியிருந்ததுனு கேட்டார். நல்லா இருந்துச்சுன்னு சொன்னேன். உடனே, என்னை ஒரு சைடா பாத்துகிட்டே, "எதுக்கு???"னு அவரு ஸ்டைல்ல தலையை ஆட்டிக்கிட்டே கேட்டார். செம்ம சிரிப்பு அப்போ.   சில பேர் சொல்றாங்க 'அரசியலில் ரஜினிக்கும் கமலுக்கும் நீங்க சீனியர்'னு. அதெல்லாம் இல்லை, நான் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து அவுங்க நடிப்பதைப் பார்த்திருக்கேன். அவுங்களுக்கு நான் சீனியரானு எனக்கே சிரிப்பு வரும்.

 

 


காமெடியெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், எங்க அப்பா முத்துராமன் இருக்கும்போது அவர், மக்கள் மேல் ரொம்ப பாசமா இருந்தார். தென்தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் போனார். மக்களும் அவர்மேல் பாசமா இருந்தாங்க. இப்பவும் நீங்க 'சௌத்'க்கு போனா மக்கள் சொல்வாங்க, அப்பாவைப் பற்றி. அதுவே ஒரு தனி சேப்டர். ஆனா, அப்பாவால் முழுசா இறங்கி செய்ய முடியல. அவர் மேல வைத்த நம்பிக்கையை என் மேலும் வைக்குறாங்க. அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்ல? திரும்ப தீவிர அரசியலுக்கு வருவதற்கான வேலைகள் இப்போ நடந்துகொண்டிருக்கு."
                                  

 

 

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.