Skip to main content

எட்டு கோடி மக்களை விட ஆளுநர் உயர்ந்தவரா? தமிழன் ரோட்டில் நிற்கிறான் ஆளுநருக்கு 600 ஏக்கரில் பங்களா தேவையா? - சீமான்

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

jkl

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல், நடப்பு அரசியல் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழகத்தில் ஆளுநர் போக்கு பற்றி என்னிடம் கேட்கிறீர்கள், ஒரு விரலில் ஐந்து விரலுக்கு அதிகமாக ஒரு விரல் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது. அதனால் அந்த விரலை வெட்டி விட வேண்டும், அதைப்போல ஆளுநர் நமக்குத் தேவையில்லாத ஒருவர், எட்டு கோடி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசை இயங்க விடாமல் இடையூறு செய்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல முடியும்.

 

ஆன்லைன் மசோதாவில் இவர் எதற்குக் கையெழுத்துப் போடாமல் இருந்தார். ஏனென்றால் இதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எல்லாம் பாஜக தானே இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு பின்பு இருந்து செயல்படுகிறது. மார்டீன் அவர்கள் பாஜகவுக்கு ஐம்பது ஐம்பது கோடியாகப் பணம் கொடுத்தாரா இல்லையா? இவர்கள் பணம் பெற்றுக்கொண்டு இருந்தால் அப்புறம் எப்படி ஆன்லைன் ரம்மி விளையாடுவதைத் தடுப்பார்கள். எல்லாவற்றிலும் அரசியல் செய்வார்கள், இதிலும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். ஆனால் இதில் இருக்கும் அரசியல் பின்புலம், எதனால் சந்தேகம் கேட்கிறார்கள், திருப்பி அனுப்புகிறார்கள் என அனைத்தும் தமிழக மக்களுக்குத் தெரியும். நீண்ட காலம் மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக நீங்கள் வைத்திருக்க முடியாது. 

 

தமிழ்நாட்டில் பலரும் இருக்க இடமில்லாமல் கிடைத்த இடத்தில் இருக்கிறார்கள், அதுவும் இல்லாதவர்கள் ரோட்டில் தவித்து வருகிறார்கள். ஆனால் இவருக்கு 600 ஏக்கர் பரப்பளவில் பங்களா தேவைப்படுகிறது. மக்கள் அவதிப்பட்டாலும் தான் சந்தோஷமாக இருந்தால் போதுமென்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். மக்களைப் பற்றி சிறிது கவலை இருந்தாலும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்களைப் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். நம்முடைய விதி இவர்கள் கீழெல்லாம் நாம் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.

 

இதையெல்லாம் நாம் நம்முடைய தலைவிதி என்று நினைத்து கடந்து போய்விட வேண்டும். முன்பெல்லாம் அதாவது கலைஞர்,ஜெயலலிதா, எம்ஜிஆர் இருக்கின்ற போதெல்லாம் ஆளுநர்கள் இந்த மாதிரி எதாவது இடையூறு கொடுத்தார்களா? அவர்கள் அவர்களுடைய வேலை என்னவோ அதை மட்டுமே பார்த்தார்கள். ஏதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றால் அதற்குச் சென்று பட்டம் கொடுக்கும் வேலையை மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது அத்துமீறி வருகிறார்கள். இது தவறான ஒன்று, ஆளுநர் அவர்களுக்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் சிறப்பாக இருக்கும்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.