Skip to main content

"அன்று கிழிந்த சட்டையுடன் வந்தோம்... இன்று..." - அரசு பள்ளி ஆசிரியர்களை கையெடுத்துக் கும்பிட்ட முன்னாள் மாணவர்கள்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசுப்பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு  முன்பு படித்த மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். உடல் தளர்ந்த நிலையில் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பெருமிதம் அடைந்தனர்.

 

school

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1998 ஆண்டு மேல்நிலை வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்களது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பின் இருபது ஆண்டுகால நிறைவை கொண்டாட முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். இந்நிகழ்வில் தங்களுக்கு ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ஆசிரியர்களை இந்நிகழ்விற்கு கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர். விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சின்னப்பா, கிராமக்கல்விக்குழு நிர்வாகிகள் தம்பிராஜ் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவித்தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் செய்திருந்தார்.

 

 

விழாவின்போது  பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கௌதமன், சிவக்குமார், பள்ளியின் முன்னாள் இயற்பியல் சேகர், முதுகலை ஆசிரியர்  சப்பாணிமுத்து, கணித ஆசிரியர் முருகையன் ,விலங்கியல் ஆசிரியர் அழகிரிசாமி ,தமிழ் ஆசிரியர் அப்பாசாமி , அறிவியல் ஆசிரியர்கள்   திருநாவுக்கரசு ,ஜெய்சிங் , கணித ஆசிரியர் அய்யாத்துரை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன்,தாமஸ் இம்மானுவேல் ஆகியோரை பாராட்டி  முன்னாள் மாணவர்களின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

 

school

 

இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர், கோபிநாத் காவல்துறை உதவி ஆய்வாளராகவும் , ஜகாங்கீர்  லண்டனில்  கணினி இயந்திர பொறியாளராகவும், செந்தில்ராஜன் , ஸ்டாலின் , கலையரசன் , ரவி   கணினி மென் பொறியாளர்களாகவும்,  கருப்புச்சாமி சென்னையில் போக்கு வரத்து நிறுவன அதிபராகவும், மணிகண்டன் , முத்துக்குமார்,ரமேஷ்குமார், சுரேஷ்குமார், இளையராஜா , பாரதி தாசன் , அண்ணாத்துரை , பால்ராஜ் , குமாரவேல் , முருகாயி, அருந்தேவி, மனோகரன்   ஆகியோர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாகவும், தெய்வராசு, கோதண்டபாணி ஆகியோர் கல்லூரி பேராசிரியர்களாகவும் , ரமேஷ் தனியார் போக்குவரத்து மேலாளராகவும் ,  செல்வேந்திரன், ஜானகிராமன், செந்தில் வேல் , முருகானந்தம், கோதண்டராமன், விஜயகுமார், சித்திரவேல் ஆகியோர் தனியார் நிறுவனங்களை நடத்தி சுய தொழில் புரிவோராகவும் பலர் நாட்டுக்கே சோறு கொடுக்கும் விவசாயிகளாகவும்  வாழ்வில் உயர்ந்ததற்கு தங்களது ஆசிரியர்கள்தான் காரணம் என வாழ்த்தி   பேசினர். 

 

முன்னாள் மாணவர்கள் சார்பில் பேசிய ஜகாங்கீர் தான் தற்போது லண்டனிலுள்ள ஒரு  நிறுவனத்தில் தாம் நிர்வாகத்தலைவராக இருப்பதாகவும் , தற்போது தமது திறமைகளுக்கு அடித்தளமிட்டது இந்தப்பள்ளியின் ஆசிரியர்களும், இந்த வகுப்பறைகளும் தான் என நினைவு கூர்ந்தார் மேலும்  இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவரும் சமூகத்தின்  உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அடித்தளமாக விளங்கிய எம் ஆசிரியர்களை என்றும் நன்றியோடு பார்க்கிறோம் மேலும்   இப்பள்ளிக்கும் தற்போதுள்ள மாணவர்களின் வளர்ச்சிக்கும்  தொடர்ந்து நலப்பணிகளை செய்ய தயாராக உள்ளோம், தற்போது பள்ளிக்கு சைக்கிள் நிறுத்துமிடம் அமைத்து தர முடிவு செய்துள்ளோம்  என்றார் . 

school

 

ஏற்புரை வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் கவுதமன் பேசியதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய எங்களை தேடிபிடித்து இவ்விழாவில் சிறப்பித்த எங்கள் முன்னாள் மாணவர்களின் ஏற்பாடு  மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் விலங்கியல் ஆசிரியர் மனித நேயத்தையும் , சமூக நெறிகளையும் கற்பிக்கும் இடமாக அரசுப்பள்ளிகள் இருப்பதை  நன்றி நவிழும் இந்த நிகழ்வு மெய்ப்பித்துள்ளது என்றார்.

 

 


முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலரும் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான தமிழரசு பேசுகையில் , இங்கே எங்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மாணவர்கள் கிழிந்த உடையோடு பள்ளிக்கு வந்த அடித்தட்டு மாணவர்கள் என்றாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை அப்படியே பயன்படுத்தி கொண்டதால் இன்று உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர், உடையும் , பகட்டும் மனிதனை உயர்த்தாது , அரசுப்பள்ளியில் படிப்பவர்கள் மட்டும் சுய படைப்புத்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எனவே அரசுப்பள்ளிகளில் படிக்கும் தற்போதைய மாணவர்களே நீட் உள்ளிட்ட எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்க  தற்போதைய ஆசிரியர்களின் உழைப்பு போற்றத்தகுந்த வகையில் உள்ளது என்றார்.

 

 

 

 

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.