Skip to main content

அரசுப் பேருந்து நடத்துனரா இவர்??? பார்த்தவர்கள் பாராட்டும் வைரல் வீடியோ

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

 

conductor


விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, பயணம் தொடங்கும் விமான பணிப்பெண்கள் (ஏர்ஹோஸ்டஸ்) பாதுகாப்பு நெறிமுறைகளை செய்து காட்டி விளக்குவார்கள். பயணிகளை சிறப்பாக வரவேற்பார்கள், பயணிகளுக்கு மிகக் கனிவாக சேவை செய்வார்கள். இந்தக் கனிவும் சேவையும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இதுபோல அரசு பேருந்தில் நடந்தால் எப்படி இருக்கும்? சில்லறை இல்லயென்றாலே கத்துறாங்க, கடந்த வாரம் 'ஸ்டாப்பில் ஏன் நிறுத்தலை?' என்று கேட்ட பெண்ணை கண்டக்டர் அடித்த வீடியோ வைரல் ஆச்சு, இந்த நிலைமையில் கனிவாவது, பணிவாவது? இதுதான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம். இதை உடைக்கும் வகையில் மதுரை டூ கோவை அரசு பேருந்து ஒன்றின் நடத்துனர் தனது பயணிகளுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை சொல்லும் ஏர்ஹோஸ்டஸ் போல பேருந்துப் பயணத்துக்குத் தேவையான நெறிமுறைகளை சொல்லி அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், "பேப்பர் போன்ற குப்பைகளை வெளியே போட்டால் பேருந்து கொஞ்சம் சுத்தமாக இருக்கும். அதேபோல வாமிட் வருவதுபோன்று தொந்தரவு இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள், கேரி பேக் தருகிறேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், புளிப்பு மிட்டாய் தருகிறேன் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார். பின்னர், பயண கட்டணங்களை தெரிந்துகொள்ளலாம் என்று வழியில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயர்களைச் சொல்லி அதற்கான விலையையும் தெரிவித்தார். முடிந்த அளவிற்கு சில்லறை கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இறுதியில், பேருந்தில் பயணம் செய்பவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமென தனது வாழ்த்துகளை நடத்துனர் தெரிவித்துக் கொண்டார்.

ஒவ்வொரு அரசு பேருந்து பயணமும் இப்படித் தொடங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமென இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பகிர்ந்து சிலாகிக்கிறார்கள். 

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.