Skip to main content

தங்கத்துடன் மல்லுக்கட்டு... வெள்ளி கிலோ 50 ஆயிரமாக உயர்வு!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

ஆபரண உலோகத்தில், தங்கத்திற்கு அடுத்து முக்கிய பங்காற்றும் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ வெள்ளி 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது, வெள்ளி வியாபாரிகள், ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


உடலில் குண்டுமணி தங்கம் கூட அணியாதவர்கள் இருக்க முடியும்; ஆனால் வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி அணியாமல் யாரும் இளம் பிராயத்தைக் கடந்து வந்திருக்க முடியாது. இவ்வகை ஆபரணங்களில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளி கொலுசு, வெள்ளை அரைஞாண் கொடி மட்டுமின்றி வெள்ளியால் ஆன குத்துவிளக்கு, செயின்கள், மாட்டல்கள், கம்மல்கள், மோதிரங்கள் என பல்வேறு வகையான ஆபரணங்கள் மட்டுமின்றி, வெள்ளி குவளைகள், வெள்ளி சங்கு, சொம்பு, பாத்திரங்கள் என வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்பிலும் வெள்ளிக்கு முக்கிய இடம் உண்டு.

GOLD AND SILVER PRICE INCREASE


வெள்ளி கொலுசு தயாரிப்பில், உலகளவில் சேலம் மாவட்டம் பிரத்யேக இடம் வகிக்கிறது. ஆபரணச் சந்தையில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே வெள்ளிக்கு எப்போதும் மவுசு இருந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக தங்கத்தின் விலையைப்போல வெள்ளியின் விலையும் வேகமாக உயர்ந்து வருவது, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எப்போது ஆன்லைன் வர்த்தகம் வெள்ளிச்சந்தையில் நுழைந்ததோ அப்போது முதல் இத்தொழில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் சிலரிடம் பேசினோம். ''கடந்த 2007ம் ஆண்டு ஆன்லைன் வர்த்தகத்தின் கீழ் வெள்ளியும் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் வெள்ளி விலையில் அடிக்கடி மாற்றம் இருந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, அதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், முதன்முதலாக ஒரு கிலோ வெள்ளி 70 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. இதுதான் வெள்ளியின் அதிகபட்ச விலையாக இப்போது வரை இருந்து வருகிறது. அதன்பிறகு, வெள்ளி விலை குறைந்தாலும்கூட சீரற்ற போக்கு நீடிக்கிறது.

GOLD AND SILVER PRICE INCREASE

இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக ஏறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் வெள்ளி கிலோ 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதுவே நடப்பு ஆண்டு பிப். 20ம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி 47750 ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டே நாளில், கிலோவுக்கு 2250 ரூபாய் அதிகரித்து, பிப். 22ம் தேதியன்று ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
 

சில்லரை விலையில் ஒரு கிராம் வெள்ளி 53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், வெள்ளியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். இதனால் வெள்ளி பொருள்களை இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கு நட்டம்தான் ஏற்படுகிறது. இவ்வாறு வெள்ளி வியாபாரிகள் கூறினர். 
 

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், வெள்ளியும் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால், குழந்தைகளின் கால்களில் கொலுசு மாட்டி அழகு பார்க்கும் ஏழை வர்க்கம்தான் பெரும் பாதிப்புக்குள்ளாவர். வெள்ளி கொலுசு, வெள்ளி கட்டிகள் படங்கள் வைத்துக்கொள்ளவும்.

 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.