Skip to main content

''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்! ஆன்லைன் அவஸ்தை!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
work from home

 

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளர்கள் படும் துயரங்கள் குறித்து, கடந்த வாரம் நக்கீரன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அது தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தக் கட்டுரையை படித்த வாசகர்கள் பலரும், தங்களின் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா காலத்தில், அது எளிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது, வலிமையான சக்திகள் எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

 

தொழில் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் கொரோனா மூலம் லாபம் பார்க்கின்றன என்று விவரிக்கும் ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேஷ், ""ஐ.டி ஊழியர்களுக்கும் இது சோதனைக் காலம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை செய்வார்கள். ஆனால் தற்போது இந்த ஊரடங்கில் தங்களின் வேலையை நிலைநிறுத்திக் கொள்ளவே அதிகநேரம் அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் நல சட்டம் ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது உழைக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால், ஒவ்வொரு மணி நேரமும் உயர்அதிகாரி தொலைபேசியில் "என்ன நடக்கிறது? வேலை முடிந்ததா?' என்று சோதனை செய்துகொண்டே இருப்பார். இதனால் அவர்கள் பயந்து கண்கொத்திப் பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

திடீர் திடீரென மீட்டிங் போடுவார் உயர் அதிகாரி. அதனால் அவர்களால் சரியான நேரத்தில் உணவுகூட உண்ண முடிவதில்லை. அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறார்கள். குறிப்பாக டார்கெட் முடிக்கவில்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்கு வதால் உடலும் அவர்கள் இருப்பிடமும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க வீட்டில் குளிர்சாதனக் கருவி பொருத்தவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவைக் கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை. ஆனால் ஊழியர்களுக்காக நிறுவனம் அளிக்கும் வாகன சேவை, அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் போன்ற பல செலவுகள் நிறுவனத் தரப்புக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் அதிகரித்துள்ளது'' என்று பட்டியலிடுகிறார்.

 

wfhஇந்த நிலை குறித்து தனியார் நிறுவன மனிதவள அதிகாரி ராஜராஜன் சொல்லும் போது...“""தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் எங்களது நிறுவனம் அடுத்த வருடம் முதல், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையைக் கையாளுவது என்று திட்டமிட்டுள்ளோம் கொரோனா காலத்தில் எங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்களை நாங்கள் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வீட்டிலிருந்து எங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் பல தனிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மின்சாரத் துண்டிப்பு, உடல் ரீதியான பிரச்சனைகள் என. குறிப்பாக, ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பதால் இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அவர்களால் வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படியான தனிப்பட்ட காரணங்களை எங்களின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் போது தான் இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்''’என்கிறார் ஆன்லைன் வேலைகளின் எதார்த்தத்தை உணர்ந்தவராய்.

 

சமீபத்தில் "லிங்க் டு இன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாக'த் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் "இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்' என்று கூறியுள்ளனர். "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக' 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, "இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக' 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை (ஒர்க் ஃப்ரம் ஹோம்) விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழுமனதுடன் முழுவீச்சுடன் வேலைபார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகிறதாம். அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இப்படி பல காரணங்களால், "போதுமடா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.

 

இவர்களின் கவலைகலந்த எதிர்பார்ப்பிற்கு எப்போது கொரோனா முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதோ?

 

-சேகுவேரா

 

 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.