Skip to main content

குஜராத் கலவரத்தின் முதல் நெருப்பு பற்றவைக்கப்பட்டது!

Published on 27/02/2018 | Edited on 28/02/2018

 

பிப்ரவரி 27 - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள் 

இந்தியாவின் குஜராத் மாநிலம் உலகத்துக்கே அஹிம்சை வழியால் பெரும் அதிகாரம் கொண்ட சாம்ராஜ்யத்தை விரட்ட முடியும் என நிரூபித்த காந்தி பிறந்த மண். அந்த மண்ணில் தான் அதிகாரத்துக்காக மனித இனத்தை அழிக்கலாம் என இந்தியாவுக்கு வழி காட்டியது விந்தையிலும் விந்தை.

 

kothari incident


2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை நரேந்திரமோடி முதல்வராக இருந்து ஆட்சி செய்து கொண்டு இருந்தார். குஜராத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயில் யாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷித் என்கிற இந்து இயக்கத்தினர் சென்று விட்டு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் 1700 பேர் அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பிப்ரவரி 27ந்தேதி இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தொடர்வண்டி வந்து நின்றது.

அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் நின்று கொண்டு கோஷமிட்டனர். அப்போது அந்த ரயிலின் எஸ்5 என்கிற ரயில் பெட்டி தீ பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 3 பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டியில் கரசேவகர்கள் இருந்தனர். அந்த இரயிலை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் தீயை அணைக்காமல், அதிகரிக்க வைத்தது. இதில் இரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இந்த படுகொலையால் இந்தியா மட்டுமல்ல  உலகமே  அதிர்ந்தது.

இரயிலுக்கு வைக்கப்பட்ட இந்த 'தீ'க்கு காரணம் இஸ்லாமியர்கள் என்கிற தகவல் வேக வேகமாக குஜராத்துக்குள் பரப்பப்பட்டது. இந்தத் தகவல் தெரிந்தும் குஜராத் காவல்துறையின் கண்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடச்சொன்னார்கள். அவர்களும் மூடிக்கொண்டார்கள். வன்முறை வெறியாட்டம் கோத்ராவில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது.
 

godhra train burning

அன்றிருந்து அடுத்த மூன்று மாதம் குஜராத் முழுவதும் ரத்தவாடை வீசியது. மே மாதம் இறுதியில் கலவரம் அடங்கிய பின் அரசு அறிவிப்பின்படி 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த கலவரம் முடிந்தபின்பு, நூற்றுக்கணக்கான உண்மை அறிக்கைகள், விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களின் நேரடி காட்சிகள் செய்திகளாகவும், ஆவணப்படங்களாகவும், சினிமாவாகவும், புத்தகமாகவும், நாவலாகவும் வெளிவந்தன.

கர்ப்பினி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். தங்களது பாலியல் வெறியை தீர்த்துக்கொண்டபின் பெண்களை கொலை செய்து வீசினார்கள். தடுக்க வந்த இஸ்லாமிய ஆண்கள் வெட்டி வீசப்பட்டார்கள். இப்படி எண்ணற்ற குரூரங்கள் இந்த கலவரங்களின் போது நிகழ்த்தி முடிக்கப்பட்டன.

இவை அனைத்துக்கும்  அப்போது ஆட்சியில் இருந்த குஜராத் முதல்வரான நரேந்திரமோடி குற்றம்சாட்டப்பட்டார். அதோடு, இந்த கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கியது இந்துத்துவா அமைப்புகள் தான் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில்  குஜராத் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்ட பல உயர் அதிகாரிகள் இதனை  வெளிப்படையாக கூறினார்கள்.
 

kodhari


ரயில்வே துறை அமைத்த விசாரணை கமிஷன், கோத்ரா ரயில் எரிந்தது ஒரு விபத்து என்றது. காவல்துறையின் சிறப்பு புலனாய்வுத்துறை இது  இஸ்லாமியர்களின் திட்டமிட்ட வன்முறை என்றது. நானாவதி கமிஷன், பானர்ஜி கமிஷன் போன்றவை வெவ்வேறு முடிவுகளைக் கூறின. இப்படி ஆளாளுக்கு ஒரு முடிவை அறிவித்து மக்களை குழப்பின.

வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணையின் முடிவில் 2011 பிப்வரி 22ந்தேதி இந்த கோத்ரா கலவரத்துக்கு காரணமென 31 நபர்களை குற்றவாளிகளாக்கியது நீதிமன்றம். இவர்கள் சிறையில் சொகுசாக வாழ்ந்தார்கள். கலவரத்தைத் தடுக்காத அரசையும், அதன் நிர்வாகத்தையும் நீதிமன்றம் புனிதமாக்கியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதனைத்  தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கமும் 15 ஆண்டுகளைக்  கடந்து இன்றும் சிறுபான்மையின மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்லாது பெரும்பான்மை மக்களின் மனசாட்சியையும் உலுக்கிக்கொண்டே இருக்கின்றன.

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.