Skip to main content

போலாம் ரைட்…

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

ss dmk

 

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் வந்திருக்கிறது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதி கூறி விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

 

தீவிர திராவிட இயக்க பற்றாளரும் கலைஞருக்கு பக்க பலமாக இருந்தவருமான மறைந்த எஸ். சிவசுப்ரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். 1996 – 2001 அரியலூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 2001-2006 அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், 2016 ல் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2021-ல் குன்னம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ss dmk

 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு, 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி செம்பருத்தி என்பவர், எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டும் என மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த மனு குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் நூலகமானது தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், அதனால் அடிக்கடி நூலகம் திறக்கப்படாததையும் அறிந்தார் எஸ்.எஸ்.சிவசங்கர். உடனே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை அமைத்தார். அந்த புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை, எங்கள் ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த மாணவி செம்பருத்தியை வைத்தே திறக்க வைத்தார். அந்த கட்டிட திறப்பு விழா கல்வெட்டிலும் அந்த மாணவி பெயர் இடம்பெறும்படி செய்தார். இதனை திமுகவினரை தாண்டி அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

 

தற்போது (2021) அமைச்சரான உடன், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் சென்று வரும் வகையில், கூடுதல் அரசு பேருந்தை தொடங்கிவைத்த  எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோ காட்சி அப்போது ட்ரெண்ட் ஆனது.

 

ss dmk

 

தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு குறித்து பேசிய ஒரு மாணவிக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் தேவை ஏன் ஏற்பட்டது? திராவிட கட்சிகள் இடஒதுக்கீடு விஷயத்தில் செய்ததெல்லாம் என்னவென்று மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தார்.

2011ல் எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரன் இதழில் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய தொகுதிகளில் அரியலூர் தொகுதி கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஜெயங்கொண்டம், குன்னம் தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இதில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.சிவசங்கர், தான் போட்டியிட்ட குன்னம் தொகுதியைப்போலவே மற்ற இரண்டு தொகுதிகளிலும் கடுமையாக வேலை பார்த்து வெற்றி பெற வைத்தார்.

 

ss dmk

 

2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் களத்தில் போட்டியிலிருந்த போது யார் முதல்வராக வருவார்கள் என்ற விவாதமும் கருத்துக்கணிப்புகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது பணி நிமித்தமாக கார்நாடகா போயிருந்த சிவசங்கரிடம் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  நக்கீரனில் கர்நாடக சட்டமன்ற தேர்தலைப் பற்றி கட்டுரையாக எழுதினார், அதில் உறுதியாக குமாரசாமி தான் முதல்வராக வருவார் என்றும் எழுதினார்.

 

அந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக கணிசமான ஓட்டு வாங்கியிருந்தது. ஆனால் குமாரசாமியோ குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தார். ஆட்சியமைக்கப் போன எடியூரப்பாவால் ஆட்சியமைக்க முடியாமல் போன போது, அடுத்தபடியாக கவர்னரை சந்திக்கப்போன குமாரசாமி தான் முதல்வராக ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அவரது வெற்றிக்கு அரும்பாடுபட்டார். தேர்தல் முடிவின் இழுபறியின் போது கடைசிவரை உடன் இருந்து வெற்றியை உறுதி செய்யும் வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தார்.

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக சமூகநீதி கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் பல இளைஞர்களைத் திராவிட சிந்தனைகளில் ஈர்த்தவர். சோழன் ராஜா ப்ராப்தி, மக்களோடு நான், தோழர். சோழன் ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.

 

ss dmk

 

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை ஒதுக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட அவர், தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இளைஞர்களுக்குத் தொடர்ச்சியாக திராவிட இயக்க கொள்கைகள் குறித்த வகுப்புகளை எடுத்து வந்தார். அமைச்சரான பின்னரும் அந்த வகுப்புகளை எடுத்து வந்தார். அந்த வகையில், 29 மார்ச் 2022 அன்றும், இளைஞர்களுக்கு வழக்கம்போல் திராவிட இயக்க கொள்கைகள், திராவிட மாடல் குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, இலாக்கா மாற்றப்பட்ட தகவல் அவருக்கு வந்தது.

 

கடந்த காலங்களில் அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாநில அளவில் பெரிய அமைச்சரவை பொறுப்பு யாருக்கும் கிடைத்ததில்லை, தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று பல்வேறு தரப்பினர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 

 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்