Skip to main content

"யாரெல்லாம் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் தான் குரல் கொடுத்தார்கள்" - காயத்ரி ரகுராம்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

gayathri raghuram interview talks about thirumavalavan meet 

 

முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "எங்க அப்பா இறந்த போது எனக்கு 29 வயது. அப்போது சினிமா துறையில் தீவிரமாக இருந்து வந்தேன். 30 வயதில் பாஜகவுக்கு வந்தேன். எங்க அப்பா ஜெயலலிதாவுடன், கலைஞருடன் பயணம் செய்திருக்கிறார்கள். என்னுடைய அப்பா பாஜகவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். என்னுடைய அம்மா பாஜக உறுப்பினராகவும், மகளிர் அணி பொறுப்பிலும் இருந்துள்ளார்கள். மோடியைப் பார்த்து தான் பாஜகவில் இணைந்தேன். அரசியலில் 30 வயது என்பது இளமையான வயது என்பேன். 35 வயதில் இருந்து பாஜகவுக்கு நிறைய பணிகள் செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் சினிமா துறையை மறக்க ஆரம்பித்தேன். சேவை செய்வது எனக்கு மன நிம்மதி தரும். யாரும் கஷ்டப்படக் கூடாது என்பது எங்க அப்பாவின் எண்ணம். அந்த எண்ணம் எனக்கும் உள்ளது. நான் சினிமா துறையிலும் நிறைய வெறுப்புகளைச் சம்பாதித்தேன்.

 

நாம் கட்சியில் பயணம் செய்யும் போது கட்சியும் நம்முடன் தான் பயணம் செய்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது அண்ணாமலை களை எடுக்கணும்னு பேசி வந்தார். அதில் மட்டும் தான் நம்பர் ஒன்னாக இருந்தார். இதைப் பற்றிய புரிதல் என்பது கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஏற்பட்டது. இதைத் தவிர கட்சிக்கு எத்தனை பேரை கொண்டுவரப் போகிறோம், கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்கிறோம் என்பதில் அண்ணாமலை கவனம் செலுத்துவதில்லை. அந்த வகையில் என் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் நான் என்ன எழுதினாலும் தவறாக கமெண்ட் செய்தார்கள். தெலங்கானாவில் நாய் ஒன்று நான்கு வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற சம்பவத்தை பற்றி எழுதிய போதும் இவ்வாறே கமெண்ட் செய்தார்கள். இந்த கமெண்டுகள் எல்லாம் என்னை எதிர்த்த கட்சிகளிடம் இருந்து வரவில்லை. நான் பயணித்த கட்சியிடம் இருந்தே வருகிறது. இது ஒரு வெறுப்பு அரசியல்.

 

கட்சியில் இருந்து வெளியில்  வந்த பிறகு என்னை விமர்சித்து கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை தவறாக இருக்கிறது. பெண்களுக்கு அனைத்து கட்சிகளிலும் சில கசப்பான விஷயங்கள் இருக்கும் பாஜகவில் தலைவரே அப்படி செய்கிறார்கள் என்பதில் தான் வருத்தம். பெண்களை கட்சி பாதுகாக்கும். ஆனால், இப்போது உள்ள தலைவர் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். தலைவர் என்ன செய்தாலும் சரி என்று சொல்ல ஒரு குழுவினர் இருப்பார்கள். எனக்காக இரண்டு, மூன்று பேர் கேள்வி கேட்டதாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பெண்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அண்ணாமலை நினைக்கிறார்.

 

ஈரோடு தேர்தலில் அண்ணாமலையும் நிற்கட்டும், நானும் நிற்கிறேன் என்றேன். பாஜகவுக்கு தனித்து  நிற்கும் வலிமை இருக்கிறது என்றால் அண்ணாமலையை தேர்தலில் நில்லுங்கள் என்று சொல்லுகிறேன். உண்மையில் பாஜகவுக்கு வலிமை இருக்கிறது என்று பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அதனை நிரூபியுங்கள் என்று தான் சொல்கிறேன். இன்னைக்கு ராணுவ வீரருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிற அண்ணாமலை, விமானத்தில் அவசரகால கதவை திறக்கும்போது பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை யோசிச்சாரா.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். மன்னிப்பு கேட்பது மனிதத் தன்மை. மன்னிப்பது என்பது தெய்வத் தன்மை. யாரெல்லாம் எனக்கு குரல் கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் தான் குரல் கொடுத்தார்கள். திருமாவளவன் மீது எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. திருமாவளவன் பற்றி முன்பு பேசியது தவறு என்பதை இந்த சந்திப்புக்கு முன்பே நான் உணர்ந்துவிட்டேன். உலகத்தில் உள்ள பெண் ஆளுமைகள் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். சாவித்திரி பாய் பூலே, ஜெயலலிதா போன்றவர்களை முன் உதாரணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். என்னுடைய முந்தைய பேச்சுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அந்த பெண்மணி மேல் எந்த கீறலும் ஏற்படக் கூடாது என்பதில் திருமாவளவன் கவனமாக இருந்தார்கள். இது தான் சரியான அரசியல். திருமாவளவன் மட்டும் ஆதரவு தரவில்லை. சீமானும் ஆதரவு தெரிவித்து ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்கள். கிருஷ்ணசாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்கள்" என தெரிவித்து உள்ளார்.  

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.