Skip to main content

காந்தி மேஜிக்! - கனிந்த சுதந்திரம்!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
Gandhi Magic!



தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையிலிருந்து விலகி,  மக்களின் அதிமுக்கியப் பிரச்சனைகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே,  மகாத்மா என்று அடையாளம் காணப்பட்டார் காந்தி.  
 

மனவலியை ஏற்படுத்திய மகாத்மா பட்டம்! 
 

1915-ல் சாந்திநிகேதன் சென்றார் காந்தி. அங்கு ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்ததும் ‘நமஸ்தே குருதேவ்’ என்று கைகூப்பி வணங்கினார். உடனே தாகூர், ‘நான் குருதேவ் என்றால், நீங்கள் மகாத்மா’ என்றார். அதற்குமுன்பே, கோண்டுகள் என்று சொல்லப்படும் மத்தியப்பிரதேச பழங்குடிகள், காந்தியை மகாத்மா என்றார்கள். அந்த மக்கள் தன்னை இவ்விதம் உயர்த்திச் சொல்வதை காந்தி விரும்பவில்லை. ‘வெறுப்புக்கும் கண்டனத்துக்கும் உரியது’ என்றார். காரணம் – மகாத்மா பட்டம் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், மகாத்மா என்ற சொல்லை வைத்து மென்மையாகக் கிண்டல் செய்தார். தன்னைத்தானே நக்கலடித்து வாய்விட்டுச் சிரிப்பது அவருடைய இயல்பாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய புகைப்படத்தை வைத்திருந்த ஒருவரைக் கட்டாயப்படுத்தி தூக்கிப்போடச் செய்தார்.  ‘தங்களைப் பார்த்த மாத்திரத்தில் நோய் குணமானது’ என்று ஒருவர் சொன்னபோது, அவமானமும் வருத்தமும் அடைந்தார் காந்தி.  

 

Gandhi Magic!




‘மகாத்மா என்று உங்களை ஏன் அழைக்கின்றார்கள்?’ என்ற கேள்விக்கு காந்தி “மகாத்மா என்ற பட்டம் பலமுறை என்னைக் கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. இந்த உலகத்துக்குப் புதிதாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. உண்மையும் அஹிம்சையும் புராதன மலைகளைப் போன்றவை. என்னுடைய சொந்த வாழ்க்கையில், என்னால் முடிந்தவரை, இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறேன். இதைத்தான் என்னால் சொல்ல முடியும். என்னைப் பலரும் மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், மற்றவர்களைக் காட்டிலும் அவர்களை நான் புரிந்து வைத்திருந்ததுதான்.” என்று விளக்கம் தந்தார்.  
 

கண்ணெதிரே சிதைந்த நம்பிக்கை!
 

ஒருபக்கம் மகாத்மா என்று தேசமே புகழ்ந்தாலும், தான் வாழ்ந்த காலத்திலேயே கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் காந்தி. 


 

Gandhi Magic!




சட்ட மறுப்பு இயக்கத்தை ரகசியம் சூழ்ந்துவிட்டதாகக் கூறி, இர்வினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் காந்தி. அப்போது நேதாஜியும், விட்டல்பாய் படேலும் வியன்னாவில் இருந்து ‘ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டார். இதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை. தன்னுடைய வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி இன்னும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது.’ என்று அறிக்கை விட்டனர். அந்தக் காலக்கட்டத்தில் சிலர், அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக உண்ணாவிரதத்தைப் பயன்படுத்தினார் என்று விமர்சித்தார்கள்.    ‘செத்து ஒழியுங்கள்’ என்றார்கள். ‘அரசியலைவிட்டு சன்னியாசம் செல்லுங்கள்’ என்று குரல் எழுப்பினார்கள். 
 

காந்தி லண்டன் சென்றபோது ஒரு ஆங்கிலேயச் சிறுவன்  “ஏய் காந்தி! எங்கே உன் டிரவுசர்?” என்று கேட்டபோது உற்சாகமாகச் சிரித்தவர் காந்தி. தன் மீதான விமர்சனம் குறித்த விவாதத்தின்போது காந்தி “எனது முரண்பட்ட நிலைகள் குறித்த ஏராளமான குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம், நான் பதிலளிப்பதில்லை. ஏனென்றால், அந்த விமர்சனங்கள் வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிப்பவை.” என்றார். ஆனாலும், தன்னுடைய இறுதிக்காலத்தில்,  மதப்பிரிவினையால் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதும், இந்துக்களில் சிலர் தன்னை மதத்துரோகி என்று வெறுத்ததும், மனிதர்கள் மீதான  தன்னுடைய நம்பிக்கைகள், தன் கண்ணெதிரே சிதைவதையும் கண்டு மனம் உடைந்தார். இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்திருந்தது. இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார். 


 

Gandhi Magic!



இவரளவுக்கு எவரும் இல்லை!
 

இருபதாம் நூற்றாண்டில், காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவுக்கு, வேறெந்த மனிதரின் வாழ்க்கையும் பதிவு செய்யப்படவில்லை. காரணம் – அவரளவுக்கு இந்த உலகத்தில்,  மிக எளிய வழிகளில்,  இவ்வளவு மனிதர்களை வழிநடத்திய தலைவர்கள் யாரும் இல்லை. இந்த தேசத்தில் கோடானுகோடி மக்களை அவர் ஆழமாகப் பாதித்திருக்கிறார். அதனால்தான், நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. வீட்டைவிட்டு வெளியில் வராத பெண்களும்கூட போராடி சிறை சென்றார்கள். 
 

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் பிரிவு இருப்பதையும், மற்ற இந்துக்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தி வந்ததையும் கடுமையாக எதிர்த்தார். தீண்டாமையை இந்து மதத்தின் சாபக்கேடு என்றார். அதனாலேயே, அம்மக்களுக்கு  ‘கடவுளின் குழந்தைகள்’ என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தினார். 


 

Gandhi Magic!




அவரே மிகவும் வருத்தப்பட்ட விஷயங்கள் என்றால், எளிதில் புரியாத தன்னுடைய கிறுக்கலான கையெழுத்தும், யாரையாவது தனக்கு மசாஜ் செய்துவிடச் சொல்வதும்தான். அடிப்படையில், அவர் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடந்தார்.  தன்னுடைய வாழ்வை, முழுமையாக, பிறர் இழிவாகக் கருதும் விஷயங்களைக்கூட, வெளிப்படுத்திய துணிவு அவருக்கு இருந்தது. துப்புரவுப் பணியிலிருந்து சகல வேலைகளையும் அவரே செய்தார். ஆனாலும், அந்த எளிமை யாருக்கும் உறுத்தலாகத் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அவரை ஒரு மகானாகவே பார்த்தார்கள். அதனால்தான், எங்கு சென்றாலும், மக்களை அமைதிப்படுத்த அவரால் முடிந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வன்முறையைக் கைவிட்டனர். சகோதரத்துவ உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். 
 

காந்தியை தீவிரமாக விமர்சித்துவந்த அன்றைய ஆங்கிலேய ஆதரவுப் பத்திரிக்கைகள், அவருடைய உன்னதக் கொள்கைகளையும், இந்திய மக்கள் அனைவரும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டதையும் பார்த்து ‘காந்தி மேஜிக்’ என்று வியந்து எழுதின. அதனால்தான், தேசப்பிதாவாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். 
 

இந்தியர்கள் நாம் காந்தி தேசத்தில் வாழ்வதில் பெருமிதம் கொள்வோம்!



 



 

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

'மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள்;மதவெறியை மாய்ப்போம்'-ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Gandhi feet are living in people's minds. Let's eradicate sectarianism'- Chief Minister condemns Governor


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநரின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், 'காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ரவி கூறியது வன்மம் கலந்த நோக்கம் கொண்டது. தேசத் தந்தை எனப் போற்றப்படும் காந்தியை பொய்கள், அவதூறுகளால் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டுள்ளனர். காந்தியின் கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கியுள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு .இதை உடனே தடுக்க வேண்டும். காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம். இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில் தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகம் இருக்கிறது. ஒற்றுமையின் அடையாளமாக உள்ள காந்தியின் புகழை சிதைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். காந்தி பிறந்தநாளை 'ஸ்வச் பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களின் அழித்தல் வேலைகள். 'ஸ்வச் பாரத்' என மாற்றியது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதேபோன்ற காரியத்தை அக்டோபர் இரண்டில் பேரணி நடத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் திசை திருப்ப பார்த்தது. அதை அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும் மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள். மதவெறியை மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்; வாழ்க காந்தியின் புகழ்' என தெரிவித்துள்ளார்.