Skip to main content

மரங்கள் விழுந்து அழுகி நாற்றமடிக்கும் நீர்நிலைகள், சுகாதாரமற்ற குடிநீர், விஷ பூச்சிகள்- டெல்டாவின் இன்றைய நிலை

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

 

கஜா புயல் கரையை கடந்து 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதன் பாதிப்பிலிருந்து டெல்டா இன்னும் முழுமையாக விடுபட தத்தளித்துக் கொண்டுள்ளது. கஜா புயலின் மையம் மட்டுமே 20 கிலோமீட்டர் விட்டம் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது. வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இந்த கண் பகுதி கடக்கும் இடமே மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடிய பகுதி. அந்த பகுதிகளில் தான் காற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். அப்படி கஜாவின் கண் பகுதி கடந்த இடம்தான் வேதாரணியமும் அதன் சுற்று வட்டார கிராமங்களும்.

 

vdm

 

நாகைக்கு தெற்கே வேட்டைக்காரனிருப்பு, அவரிக்காடு, புஷ்பவனம் கிராமங்களில் ஆரம்பித்து கோடியக்கரை முனை வரையிலான கடற்கரை கிராமங்கள் மற்றும் செம்போடை, கத்தரிப்புலம், தென்னம்புலம், செட்டிப்புலம், வடமழை என அதிக மரங்கள் கொண்ட அதன் சுற்றுவட்டார கிராமங்கள் அதிக அளவில் பாதிப்பை பெற்றுள்ளன. இந்த பாதிப்பு மருதூர், தகட்டூர், பாமினி வரை நீள்கிறது. அதிக அளவிலான மா, சவுக்கு மற்றும் தென்னை மரங்களை கொண்டிருந்த இந்த பகுதிகளில் தற்பொழுது மிஞ்சி இருப்பது காற்றால் உடைத்து பாழாக்கப்பட்ட மரத்துண்டுகள் மட்டுமே. இருபது, முப்பது ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டு அன்றாட வாழ்வின் வருமானத்திற்கான ஆதாரமாக இருந்த இந்த மரங்கள் விறகுக்கு கூட பயன்படாதா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மீண்டும் இது போன்ற மரங்களை வளர்த்து கொண்டு வர இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும் என்பதே அங்கு நிலவும் உண்மையான கள சூழல். 

 

நிரந்தர வருமானத்திற்கான சூழலை  இழந்து நிற்கும் இந்த விவசாயிகள் 12 நாட்களாக பல்வேறு விஷயங்களுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். மரங்கள் விழுந்து அழுகி நாற்றமடிக்கும் நீர்நிலைகள், சுகாதாரமற்ற குடிநீர், உணவின்மை, மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கும் வீடுகள், நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் குடியேறும் விஷ பூச்சிகள். இது போல அன்றாட வாழ்விற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் எந்த வித நிவாரணங்களும் இன்னும் இந்த பகுதிகளை சரியாக சென்றடையவில்லை என்பதே உண்மை.

 

vdm

 

பொதுவாகவே விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களை கொண்ட பகுதி தான் டெல்டா. அந்த மாதிரியான ஒரு பகுதியில் அவர்கள் வாழ்வில் மூலதனமாக கருதும் இயற்கை அழிக்கப்பட்டுள்ளது என்பது அவர்கள் வாழ்வே அழிக்கப்பட்டிருக்கிறது  என்பதற்கு சற்றும் குறைவில்லாத கூற்றாகவே அமைகிறது. இப்படி அழிந்த மூலதனங்களை கொண்டே அதன் மீது அவர்களது எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டிய சூழல் அங்கு நிலவுகிறது. இவ்வாறான அவர்கள் எதிர்காலத்திற்கு அரசாங்கங்கள் கண்டிப்பாக மிக பெரிய உதவியாக இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் மட்டுமல்ல, அதுவே ஜனநாயகத்தின் நியதீயாகவும் பார்க்கப்படுகிறது.

 

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.