Skip to main content

குழந்தைகள் கையேந்தியது தான் கொடூரமானக் காட்சி... கஜா பாதிப்பு களத்தில் இருந்து சிவசங்கர் -3-

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
gaja storm



 

கோடியக்கரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஓர் முக்கிய சுற்றுலாத் தளம். சுற்றுலாத் தளம் என்பதை விட இயற்கையின் கொடை. அதானால் தான் அங்கு பறவைகள் சரணாலயமும், விலங்குகள் சரணாலயமும் ஒருங்கே அமைந்திருந்தன. 
 

ஆமாம், அமைந்திருந்தன. இப்போது இல்லை.
 

சதுப்பு நிலக்காடுகள் கொண்ட பகுதி. மரங்கள் நிறைந்து பசுமையாக திகழ்ந்தப் பகுதி. ஆமாம், திகழ்ந்தப் பகுதி. இப்போது நிலைமை தலைகீழ் சூழல். மரங்கள் எல்லாம் 'கஜா' புயலால் வேரோடி பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன. பசுமை பறிப் போயிருக்கிறது. சாய்ந்த மரங்கள் காய்ந்து போய் கிடக்கின்றன. விளைவு, இது வரை, அந்த மரங்களில் உலா வந்த குரங்குகள் சாலையோரத்தில் பாவமாய் அமர்ந்திருந்தன.

 

gaja storm



புயலுக்கு அடுத்த நாளே மான்கள் இறந்து கிடந்த படங்கள் நாளிதழ்களில் வந்தன.  பிறகான நாட்களில் மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளின் உடல்கள் காரைக்கால் பகுதியில் கடலால் கரை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கஜா புயலால் பெரும் இயற்கை சீரழிவு இது. 

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பொரு முறை கோடியக்கரை சென்றிருந்த போது, கண்டக் காட்சிகள் தான் மீண்டும் மனதில் நிழலாடியது. பெரும் மான்கள் கூட்டம். நாங்கள் சென்ற வாகன ஓசை கேட்டு துள்ளி ஓட ஆரம்பித்தன. ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டப்பந்தயம் ஓடுவது போல் இருந்தது. தொலைக்காட்சிகளில் காணும் காட்சியை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது. 

 

இனி அப்படியொருக் காட்சியை காண பல ஆண்டுகள் ஆகும் என்றார் உள்ளுர்வாசி ஒருவர். இயற்கை மீண்டும் தழைத்து, மிச்சம் இருக்கிற உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்து அப்பகுதி, பழைய நிலைக்கு திரும்ப பல்லாண்டுகளாகும். பறவைகள் சரணாலயமும், விலங்குகள் சரணாலயமும் மீண்டும் பழைய படிக்கு உருப்பெற்றால் தான் கோடியக்கரையின் அடையாளம் மீண்டும் கிடைக்கும். இன்னொரு புறம் இயற்கை சமநிலைக்கு அது அவசியமும் கூட.


 

gaja storm



மனிதர்களுக்கான இழப்பு எப்படியோ, அப்படியே இயறகையின் இழப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் அரசு கோடியக்கரையின் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

மனிதர்களின் இழப்பை ஈடு செய்யவே அரசு இன்னும் களம் இறங்காத போது, இயற்கையை எங்கே திரும்பிப் பார்க்கப் போகிறது ?

 

இயற்கை என்பது இங்கு மட்டும் பறிபோகவில்லை. ஒவ்வொரு ஊரிலும் இழப்புகள் தான். தென்னை மரங்கள் இழப்பை போலவே ஊரில் இருந்த எல்லா மரங்களும் சாய்ந்து போயிருக்கின்றன. இது பெரும் சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.


 

gaja storm



கோடியக்கரையில் இருந்து கிளம்பினோம்.  கோடியக்கரையில், ஆங்காங்கே கூட்டமாக மக்கள் திரண்டிருந்தார்கள். ஏதோ கலவரப் பகுதி போல் தோற்றமளித்தது.  அது குறித்து பின்னர் காண்போம்.

 

கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம் திரும்பினோம். நகரமே இருண்டு கிடந்தது. பல வீடுகளில் மெழுகுவர்த்திகள் தான் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள். ஒரு சில வீடுகளில் சோலார் விளக்குகள். ஒன்றிரண்டு வீடுகளில் மாத்திரம் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த வீடுகளில் ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருந்தன. டீசலில் இயங்கும் சிறு ஜெனரேட்டர்கள்.

 

மேலே கண்டது புயல் அடித்த பதினைந்தாம் நாள் நாங்கள் கண்ட காட்சி. இரவு பதினோரு மணிக்கு மேல், முக்கிய நகரப் பகுதியில் மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்கள். அது காலை 5 மணிக்கு நிறுத்தப்படும், காரணம் எல்லா இடத்திலும் சீரமைப்பு பணிகள் நடந்ததால், விபத்து நிகழ்ந்து விடாமல் தவிர்க்க.

 

வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டிணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியப் பகுதி, புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் உள்ளிட்ட ஊர்கள். அந்த சாலையில் ஆங்காங்கே வெளிச்சம். அவை பெட்ரோல் பங்க்குகள். மீதி எல்லா இடங்களிலும் கும்மிருட்டு. நாங்கள் சென்ற காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் கண்ட காட்சி தான் கொடுமை.


 

gaja storm



முக்கியச் சாலையில் இருந்து உள்ளடங்கி இருக்கும் கிராமத்து மக்கள், சாலைக்கு வந்து ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பெண்கள் காரை நிறுத்த சொல்லி கை அசைத்தார்கள், உதவிப் பொருட்கள் வந்த வாகனம் என நினைத்து. சில இடங்களில் டாடா ஏஸ்களை நிறுத்தி உதவிப் பொருட்கள் விநியோகமும் நடந்து கொண்டிருந்தது. 
 

சில இடங்களில் குழந்தைகள் கையேந்தியது தான் கொடூரமானக் காட்சி.
 

அத்தியாவசியத் தேவைகளை அரசு வழங்கி இருந்தால், இந்த அவலக் காட்சிகள் அரங்கேறி இருக்காது.
 

புயல் அடித்த 25வது நாளும் இன்னும் அரசு உதவவில்லை என்று மக்கள் சாலை மறியல் செய்யும் காட்சி தினம் தொலைக்காட்சிகளில், பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருப்பது தான் இந்த அரசிற்கு கிடைத்திருக்கும் நற்சான்று!
 

போர் நடக்கும் நாடுகளில் மக்கள் படும் அவதியை பத்திரிக்கைகள் வாயிலாகப் படித்ததை அங்கே கண் கூடாக கண்டோம்.
 

(தொடரும்...)
 

S. S. Sivasankar

 


 

 


 


 

 

 

 


 

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.