Skip to main content

கஜாவை துல்லியமாக கணித்த டெல்டா வெதர்மேன்! 

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

"வணக்கம் நான் செல்வக்குமார் பேசுறேன். இது செல்வக்குமார் வானிலை அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை   அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையைப் பார்க்கவும்" 
 


இப்படி சற்று கனத்த குரலில் வாட்சப்பில் வலம் வரும் வானிலை அறிக்கை டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
 


இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மன்னார்குடி மேலவாசலில் வசிக்கும் ஆசிரியர் செல்வக்குமார். வேதாரண்யம் வட்டம் தகட்டூரைச் சேர்ந்த வானிலை ஆர்வலரான இவர் கஜா புயலை பதினைந்து தினங்களுக்கு முன்னதாகவே துல்லியமாக கணித்து நாகை வேதாரண்யம் இடையே 160 கிமீ வேகத்தில் காற்றுடன் கரையைக் கடக்கும் என்று அறிவித்திருந்தார். 

 

gaja storm - Delta Weather Man



அதன்படியே கஜா டெல்டாவை சின்னாபின்னமாக்கியது. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையோ ஒரு வாரத்திற்கு முன்புவரை கஜா புயல் கடலூரில் கரையைக் கடக்கும் எனக் கூறிவந்த நிலையில் பதினைந்து தினங்களுக்கு முன்பே மிகத் துல்லியமாக வானிலையை கணித்த ஆசிரியர் செல்வக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

 

இவர் கஜாவை மட்டுமில்லாமல் 2008ல் டெல்டாவைத் தாக்கிய நிஷா புயலையும் வர்தா மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒக்கி‌ புயலையும் இதே போன்று முன்கூட்டியே கணித்து விவசாயிகளிடமும் மீனவர்களிடமும் விழிப்புணர்வை   ஏற்படுத்தியதாக டெல்டா மக்கள் தெரிவிக்கின்றனர். 
 

 
சிறு வயது முதலே வானிலையில் ஆர்வம் கொண்ட செல்வக்குமார். பனிரெண்டாம் வகுப்பு முதல் வானிலையைத் தொடர்ந்து கண்காணித்தும் கணித்தும் வருகிறார். ஆங்கில நாளிதழ்களில் வெளியாகும் வானிலை குறித்த  செயற்கைக் கோள் வரைபடங்களைத் தொடர்ச்சியாக சேகரித்தும் அதைக் கொண்டு கணித்தும் வந்த செல்வக்குமார் அதை அவரே உறுதிபடுத்தியும் வந்துள்ளார்.
 

gaja storm - Delta Weather Man



பல நேரங்களில் அவரின் கணிப்பு சரியாக அமைந்ததால் மேலும் காற்றின் வேகம், திசை மற்றும் நகர்வுகளை  துல்லியமாக கணக்கிடுவதில் பயிற்சியும் வல்லமையும்  பெற்றிருக்கிறார். இதற்கு எந்தவிதமான பட்டப்படிப்பும் அவர் படித்தது இல்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வானிலை அறிவியல் கற்க ஆர்வம் இருந்தும்,   குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் ஆசிரியர் பயிற்சிக்கு சென்ற இவர் தொடர்ந்து வானிலை குறித்து ஆராய்ந்த வண்ணமே இருந்திருக்கிறார். 
 

ஆசிரியர் பயிற்சி முடிந்தபிறகு ஆந்திராவில் தனியார் இறால் குஞ்சு பொறிப்பகத்தில் பணியாற்றியபோது அங்கும் அந்த நிறுவனத்திற்கு தேவையான சமயத்தில் கடல் மற்றும் வானிலையை ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளார்.   அந்த சமயத்தில் 1995ல் ஒடிசாவைத் தாக்கிய சூப்பர் சைக்ளோன், ஆந்திர கடல்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என   அங்கிருந்த மீனவர்களை எச்சரித்துளார். அவர் கூறியது போலவே கடல் சீற்றம் மீனவர்களை இழுத்துச் சென்றுள்ளது   அதனால் அந்தப் பகுதியில் இருந்த மீனவர்கள் இவரிடம் தொடர்ந்து வானிலையைக் கேட்டு வந்துள்ளனர். 

 

Delta Weather Man


பின்னர் ஆசிரியர் பணி கிடைத்து மன்னார்குடி வந்த செல்வக்குமார் விவசாயிகள் அதிகம் கூடும் இடமான தேநீர்   கடையில் வானிலை வரைபடம் வரைந்து, மழை குறித்த முன்னறிவிப்பை வழங்கி வந்துள்ளார். கடந்த 2000ம் ஆம் ஆண்டு தொடங்கிய தேனீர் கடைகளில் வானிலை அறிவிப்பு ஒட்டும் பணியை தன் பகுதி விவசாயிகளுக்கு செய்யும் கடமையாக நினைத்து இன்று வரை தான் வசிக்கும் மன்னார்குடி, மேலவாசல், வேதாரண்யம், தகட்டூர் போன்ற இடங்களில் உள்ள தேநீர் கடைகளில் பிரதி எடுத்து ஒட்டி வருகிறார்.

 

2010க்கு பிறகு குறுஞ்செய்தியாக வானிலை அறிக்கையை 300பேருக்கு அனுப்பி வந்த இவர், பின்னர் வாட்ஸ் ஆப்பில்   பேசி ஆடியோ வடிவில் அனுப்பி வந்தார். 180   வாட்ஸ்   அப்   குழுக்களில்   வானிலை   அறிவிப்பு   செய்து   வந்த   இவர்   ஒரு கட்டத்தில் அதிகப்படியான உபயோகத்தால் வாட்ஸ்ஆப் செயலிழக்கவே தற்போது 'நம்ம உழவன்' என்னும்   செல்போன் செயலியை உருவாக்கி அதில் வானிலை அறிக்கையை கூறி வருகிறார். இவரது வானிலை அறிக்கையை   திடமாக நம்பும் டெல்டா விவசாயிகள் அதைப் பின்பற்றியே அறுவடை உள்ளிட்ட  விவசாயப் பணிகளை   மேற்கொள்வதாக தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்த சிவசாமி என்ற விவசாயி தெரிவித்தார்.
 

 

மேலும் ஆசிரியரான இவர் தனது மாணவர்களுக்கும் வானிலை அறிவியலை சுய ஆர்வத்தால் ஒரு பாடமாக எடுத்து   வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆங்கிலத்தில் ஃபேஸ்புக்கில் வெளியிடும் வானிலை அறிக்கையை படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே  புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் முடிகிறது. அதுபோல்   செய்திகளில் இடம்பெறும்  இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை அறிக்கையும் விரிவானதாக இல்லை.ஆனால் செல்வக்குமாரின்‌ பத்து நிமிடங்களுக்கு மிகாமல் உள்ள பதிவு செய்யப்பட்ட ஆடியோ தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும் இவர் வானிலை அறிக்கையை தினமும் இரண்டு முறை ஆய்வு  செய்து அளித்து வருகிறார்.
 

 

 இப்படி வானிலை குறித்த தனது அறிவை கடுமையான பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி எளிய   விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச சேவையாக வழங்கி வரும் ஆசிரியர் செல்வக்குமாருக்கு அந்த வானம்   வசப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். தான் வெளியூருக்கு செல்லும் போதுகூட எப்போது குடை எடுத்துச் செல்ல   வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துசெய்து விடுவேன் என தன் வானிலை அறிவை குறுநகையுடன் கூறும் செல்வக்குமார்  நிஜமாகவே டெல்டா வெதர்மேன் தான்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 17/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப்படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார். இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

கர்நாடக அரசைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 

struggle front of BSNL office condemning Karnataka Govt

 

கர்நாடகா அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றிக் கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.    

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.