Skip to main content

குரங்குக்கு இறுதிச்சடங்கு! ஒப்பாரி வைத்த பெண்கள்; மனிதநேய மலை கிராமவாசிகள்!!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் பரிணாமக் கோட்பாடு; குரங்குகளை கடவுளின் வடிவமாகக் கருதுவது ஹிந்து மத கோட்பாடு; என்றாலும், குரங்குகளை நாம் ஒருபோதும் வீட்டு விலங்காகவோ, வளர்ப்புப் பிராணிகளாகவோ கருதுவதில்லை. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் படங்களில் குரங்குகளின்  சேட்டைகளை நாம் ரசித்துப் பார்த்திருந்தாலும்கூட, அவற்றை நெருங்கிச் செல்வதில்லை.


 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

ஆனால், கிருஷ்ணகிரி அருகே ஒரு மலைக்கிராம மக்கள், குரங்குகளை தங்கள் குடும்பங்களில் ஓர் அங்கத்தினராகவே கருதி வருகின்றனர். அதாவது, இறந்த குரங்குக்கு மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து, சவ அடக்கம் செய்திருக்கின்றனர். கிராமவாசிகளின் இந்த மனிதநேய செயல்தான் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரு நாள்களாக வியப்பான பேச்சாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வனப்பகுதி அருகே, ஜீஞ்சம்பட்டி மலைக்கிராமம் உள்ளது. அடர்த்தியான காப்புக்காடு பகுதி என்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகம். அடிக்கடி ஊருக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குரங்குகள், பலருடைய வீடுகளின் சமையல்கட்டு வரைக்கும் அழையா விருந்தாளியாக நுழைந்து கைவரிசை காட்டி விடுகின்றன.
 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

யாராவது வீட்டை திறந்து போட்டுவிட்டு அரட்டை அடிக்க அக்கம்பக்கம் சென்றுவிட்டால் அவ்வளவுதான்... வந்து பார்த்தால் சமையலறையில் அண்டா குண்டாக்களில் இருந்த சோறு முதல் குழம்பு, பொரியல் வரை எல்லாமே சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டதுபோல் காலியாகியிருக்கும். பல நேரங்களில் குரங்குகள் சமையல் பாத்திரங்களையே களவாடி காப்புக்காட்டுக்குள் ஓடிவிடுவதும், அவை தின்ற பிறகு தூக்கி எறியும் பாத்திரங்களை எடுத்து வருவதும் மலைக்கிராம மக்களிடையே அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான். என்றாலும், வனக்கிராம மக்கள் குரங்குகளின் சேட்டைகளை ரசிக்கவே செய்கின்றனர்.

அவர்கள் குரங்குகளை துன்புறுத்துவதில்லை. சிறுவர்களும் குரங்குகளுக்கு பழங்கள், தண்ணீர் கொடுத்து அவற்றை தங்கள் சினேகிதர்களாக்கிக் கொள்வது உண்டு. பழக்கமான குரங்குகளுக்கு பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான், செவ்வாய்க்கிழமை (பிப். 4) மாலை, சில குரங்குகள் வழக்கத்தை விட அபாயகரமான தொனியில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தன. இடைவிடாத கூச்சல். அந்த கூச்சல், மரண ஓலத்தைப் போலவே இருந்ததால், என்னவோ ஏதோ என்று பதறிப்போன மலைக்கிராம மக்கள், குரங்குகளின் ஓசை வந்த திசையை நோக்கி ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே குரங்கு ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. சக குரங்கு இறந்ததால், அதன் வலியைத் தாங்க முடியாமல் மனிதர்களைப் போலவே குரங்குகளும் தங்கள் சோகத்தை வித்தியாசமான ஒலிகளை எழுப்பி தெரியப்படுத்தி இருப்பதாக கிராம மக்கள் புரிந்து கொண்டனர்.

 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

இதையடுத்து வனக்கிராம மக்கள், இறந்து கிடந்த குரங்கின் சடலத்தை மீட்டனர். மனிதர்கள் இறந்துவிட்டால் சடலத்தைக் எப்படி குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, இறுதிச்சடங்குகளை செய்வார்களோ அதைப்போலவே அந்த குரங்கின் சடலத்தையும் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் வைத்தனர். வாசனை திரவியங்களைப் பூசினர். குரங்குகள் விரும்பி சாப்பிடும் பழங்கள், தண்ணீர் வைத்து படைத்தனர். குரங்கின் உடலுக்கு கிராமத்தினர் சாமந்திப்பூமாலை அணிவித்தனர்.

பின்னர், தென்னை ஓலை, மூங்கில் பிரம்புகளால் பாடை கட்டி, அதில் குரங்கின் சடலத்தைக் கிடத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்று வனப்பகுதிக்குள் குழி தோண்டி அடக்கம் செய்தனர். அதற்கு முன்பாக, வனக்கிராம பெண்கள் குரங்கின் பிரிவைத் தாள முடியாமல் ஒப்பாரி வைத்தும், மார்பில் அடித்துக்கொண்டும் பாடினர். சவ ஊர்வலத்தின்போது பட்டாசுகளும் வெடித்தனர்.


வழக்கமாக நாய், பூனைகளை மட்டுமே செல்லப் பிராணிகளாக கருதி, நெருங்கிப் பழகும் மனிதர்கள் மத்தியில், மலைக்கிராம மக்கள், தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கலந்து விட்ட குரங்குகளையும் சக மனிதர்களைப்போலவே பாவித்து, நல்லடக்கம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மலைக்கிராம வாசிகளிடமும் பெரும் சோகத்தையும், அதேநேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.