Skip to main content

தளர்வில்லா முழு ஊரடங்கு தேவை! -எச்சரிக்கும் டாக்டர் மோதிலால்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

Doctor

 

கரோனா தொற்று மின்னல் வேகம் எடுத்திருப்பதோடு, அதன் உயிர்குடிக்கும் வேகமும் அதிகரித்திருக்கிறது. 28-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கரோனா உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 1,079-ஐ எட்டியிருக்கிறது. 28 ஆம்  தேதி ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 940-ஆக எகிறி பயமுறுத்த, அன்று மட்டும் 54 பேரின் உயிரைக்  குடித்து பகீரை ஏற்படுத்திருக்கிறது கரோனா.

 

இந்தத் திகில் நிலவரம், மக்களின்  நிம்மதியைத் தொலைத்து அவர்களிடையே மரண பீதியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கொடிய கரோனாவுக்கு முடிவே இல்லையா? அதைக் கட்டுபடுத்த என்னதான் தீர்வு? என்ற கேள்விகளை வாழப்பாடி உதயா மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரான  டாக்டர் சி.மோதிலாலிடம் வைத்தோம்.

 

மிகவும்  நிதானத்தோடு பேசிய அவர், “இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியாதாக இருக்கிறது. அதேசமயம் ஆங்கில மருத்துவத்தோடு, நம் சித்த மருந்துகளையும், ஆயுர்வேத, ஹோமியோ மருந்துகளையும் கொடுத்தால் கரோனா நோயாளிகளை பாதிப்பிலிருந்து மீட்கமுடியும் என்பதை நாம் அனுபவப் பூர்வமாகவே கண்டறிந்திருக்கிறோம். அதனால்தான், அரசு இதில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மருத்துவ முறைகளையும் கையிலெடுத்து கரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் கரோனா நோயாளிகள் வெற்றிகரமாகப் பெருமளவில் குணம்பெற்று வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் 50 ஆயிரம் பேர்வரை கரோனாவிடம் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.  

 

இப்படிக் கரோனா நோயாளிகளை மீட்கக் கூட்டு மருத்துவ டெக்னிக் நம் கையில் இருக்கும்போது, நாம் நினைத்தால் கரோனாவை எளிதாகக் கையாண்டு, அதைக் கடந்துவிடலாம். ஆனால் இப்படிப்பட்ட வலிமையான மருத்துவம் நம்மிடம் இருந்தும், ஒரு பக்கம் நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையிலும், கரோனாத் தொற்றின் பரவல், கட்டுமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?  

 

இதுவரை 5 ஊரடங்குகளைப் பிரகடனப்படுத்தியும் தொற்றின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் ஊரடங்கில் தொடர்ந்து ஏற்படுத்தப்படும்  தளர்வுகள்தான்  என்பது என் தனிபட்ட கருத்து.

 

கரோனாவை நாம் கட்டுக்குள் கொண்டுவந்து, முழுமையாக அதை ஒடுக்கவேண்டும் என்றால் தமிழகம் முழுதிற்கும் தளர்வில்லா முழுமையான ஊரடங்கைக் குறைந்த பட்சம் 20 நாட்களுக்காவது கடுமையாகப் பிரகடனம் செய்யவேண்டும்.

 

அதற்கு முன்பாக, தளர்வில்லா முழு ஊரடங்கிற்கு மக்கள் தயாராக, சிறிது அவகாசம் கொடுக்கலாம். பின்னர் தெருவிற்கு ஒருகடை வீதம் திறக்கச் செய்து, அத்தியாவசியப் பொருள் தேவைப்படுவோருக்கு, அவற்றை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு போய் விநியோகிக்கச் செய்யலாம். இதையெல்லாம் செய்தால் மக்கள் தாமாக வீடடங்கி இருப்பார்கள்.

 

இப்படி முழுமையான தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்துவதோடு, அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் கரோனாவை எதிர்கொள்வதற்கான கூட்டு மருந்துகளை, அதன் விவரக் குறிப்போடு விநியோகிக்க வேண்டும். இதற்குப் பெரிதாக செலவாகாது. ஒரு குடும்பத்திற்கு அதிகப்படியாக 100 ரூபாய் அளவிற்கே இதற்குச் செலவாகலாம். கூடவே சத்தான உணவு முறைகளையும் மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும். இப்படியாக தமிழகம் முழுக்க அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசின் கூட்டுமருந்துகள் போய்ச் சேர்ந்துவிட்டால், முழுமையான தளர்வில்லா ஊரடங்குக் காலத்திலேயே, கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

 

இதன்பின் மெல்ல மெல்ல தளர்வை ஏற்படுத்தி, இயல்பு நிலைக்கு நாம் விரைவில் வந்துவிட முடியும்.  கரோனாவால் பெரும் அழிவைச் சந்தித்த சீனா உள்ளிட்ட நாடுகள், இப்படிப்பட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு மூலம்தான், விரைந்து இயல்பு நிலையை மீட்டெத்திருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

அரசு மட்டும் இப்படியொரு பெரும் முயற்சியில் இறங்கினால் போதாது. பொது மக்களும், அரசின் முயற்சிக்கு நூறு சதவீத ஒத்துழைப்பைத் தரவேண்டும். இன்று இன்னமும் பெரும்பாலானோருக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே பொதுமக்கள் முதலில் விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் ’பாதிப்பு மக்களுக்கு; கெட்ட பெயர் அரசுக்கு’ என்ற நிலைதான் ஏற்படும்.

 

எனவே இப்போதைய தேவை, தளர்வில்லாத முழுமையான ஊரடங்கும், வீடு வாரியாகக் கூட்டு மருந்துகளின் விநியோகமும்தான்” என்கிறார் விரிவாகவே.

 

டாக்டர் மோதிலாலின் கருத்துகள், அதிக கவனத்துக்குரியவை.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.