Skip to main content

அ.தி.மு.க.வில் இருந்து வந்த ஐந்துமுனை அழுத்தங்கள்..! டெல்லி போட்ட அதிரடி உத்தரவு!!!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

eps

 

அ.தி.மு.க சண்டை உச்சத்தை அடைந்தபோது சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி என மூன்று தரப்பினரும் பா.ஜ.க.வின் கதவைத் தட்டினார்கள். அதனுடன் ஆன்மீக குருவான ஜக்கிவாசுதேவும் தொழிலதிபருமான அதானியும் அ.தி.மு.க. சண்டையில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். சசிகலா, ராஜ்நாத் சிங்கை வைத்துக்கொண்டு காய் நகர்த்தினார். எடப்பாடி பியூஷ் கோயல் மூலமாக காய் நகர்த்தினார். நரேந்திர மோடியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், மோடியை இருமுறை சந்தித்துப் பேசினார். அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் ஜக்கிவாசுதேவ், அவர் மூலமாக காய் நகர்த்தினார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. சண்டையில் தொழிலதிபர் அதானியும் தலையிட்டார். சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் தங்களை பா.ஜ.க. ஆதரிக்க வேண்டும் எனக் கூற ஜக்கிவாசுதேவ், அமித்ஷா மூலமாக, தமிழக உள்ளாட்சித்துறை வேலுமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீரும் என்று புது வியூகம் வகுத்து காய் நகர்த்தினார். அதானி தங்கமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார். இப்படி ஐந்து முனைகளில் ஐந்து விதமான கோரிக்கைகள் வந்தன.

 

ops

 

சசிகலாவை ஆதரிக்கக்கூடாது என எடப்பாடியும், எடப்பாடியை ஆதரிக்கக் கூடாது என ஓ.பி.எஸ்.சும் அழுத்தம் கொடுத்தனர். எடப்பாடியை நீக்கிவிட்டு எஸ்.பி. வேலுமணியை முதல்வராக்க வேண்டுமென ஜக்கிவாசுதேவ் அழுத்தம் கொடுத்தார். எடப்பாடியை நீக்கினால், வேலுமணியைவிட, தங்கமணி பெட்டர் சாய்ஸ். அவரை முதல்வராக்க வேண்டும் என்று அதானி அழுத்தம் கொடுத்தார். எடப்பாடி, வேலுமணி, தங்கமணி மூவருமே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமுதாய பேலன்ஸ் என்பது சரியாக இருக்கும் என்றும், பா.ஜ.க. மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. விவகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமித்ஷா, ராஜ்நாத்சிங், பியூஷ்கோயல் ஆகிய பா.ஜ.க. பிரமுகர்களுடன் தொழிலதிபர் அதானி, சாமியார் ஜக்கிவாசுதேவ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவுத் தரப்பிலிருந்தும் ஒவ்வொரு விதமான அழுத்தம் பா.ஜ.க.வுக்கு வந்ததால் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் நரேந்திரமோடியின் கைக்குப் போய்விட்டது.

 

ஐந்து முனைகளில் இருந்து வந்த அழுத்தங்களை பரிசீலித்த நரேந்திர மோடி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் அவர் நம் நம்பிக்கைக்கு உரியவராக தொடர்வாரா என்பதில் சந்தேகம் அடைந்தார். அதே நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக பிரிந்து நிற்பது சரியல்ல என அவர் நினைத்தார். இதைப்பற்றிய விவாதங்களில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான புபேந்திரயாதவ் ஒரு நிலையை எடுத்து மோடியிடம் தெரிவித்தார்.

 

sasikala

 

"தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நிறைய ஊழல்கள் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வின் ஆதரவுதான் என்கிற கெட்டப்பெயர் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது. அதை தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசுகின்றன. ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி சாதாரண மக்களிடமும் இருக்கிறது. அதனால், இந்த ஐந்து பேரில் யாரை நாம் ஆதரித்தாலும் அது அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் இலக்கையும் பலவீனப்படுத்திவிடும். எனவே நாம் இந்த மோதலில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளட்டும். அடிச்சி... முடிச்சி... வரட்டும். அதில் யார் பலம்பெற்று வருகிறார்களோ அவர்கள் அ.தி.மு.க.வைக் கைப்பற்றட்டும். இனி பா.ஜ.க.வுடன் பேசும் அ.தி.மு.க.வினரிடம், முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் எனச் சொல்லுவோம். அதுதான் இப்பொழுது பா.ஜ.க.வுக்கு நல்லது'' என்றார்.

 

spv

 

அவரது நிலையைச் சரியென ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி அ.தி.மு.க.வில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ஐந்து பேரிடமும் முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் என பொத்தம் பொதுவான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இப்படி, பா.ஜ.க.வின் ஆதரவு இப்போதைக்கு யாருக்கும் இல்லை எனத் தெளிவான உத்தரவு மோடியிடமிருந்து வந்ததும் அ.தி.மு.க.வில் யார் பெரியவர் என்கிற சண்டை பலம்பெற ஆரம்பித்தது.

 

சசிகலா நம்பத்தகுந்தவர் அல்ல என டெல்லியிடம் பேசிய எடப்பாடி மேல் அவர் கடும் கோபம் கொண்டார். கூவத்தூர் முகாம் நடந்தபோது, எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்த சசிகலா, ஓ.பி.எஸ். பக்கம் யாரும் போய்விடாமல் எடப்பாடியை ஆதரிப்பதற்காக அ.தி.மு.க.வின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4 கோடி ரூபாய் கொடுத்தார். அதை இப்போது சுட்டிக்காட்டி, ""எடப்பாடியை முதலமைச்சராக்க நான் செலவு செய்தேன். அனைத்து முக்கியத்துறைகளையும் கைப்பற்றி ஏகப்பட்ட பணம் சேர்த்தார். இப்போது அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்னை எதிர்க்க துணிந்துவிட்டார்'' என தன்னிடம் பேசவந்த ஓ.பி.எஸ். ஆட்களிடம், "எடப்பாடியை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். நமது வலு என்னவென்று எடப்பாடிக்கு காட்டுவோம்'' என உத்தரவிட்டார்.

 

THANGAMANI

 

இதனால் சசிகலாவும் ஓ.பி.எஸ்.சும் அரசியல் களத்தில் இணைந்துள்ளனர். இந்த முடிவு ஓ.பி.எஸ். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவாக மாறியது. சென்னையில் இருந்து கிளம்பி தனது பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில், திண்டுக்கல் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவில் என மூன்று கோவில்களுக்கு ஓ.பி.எஸ். விஜயம் செய்தார்.

 

ஓ.பி.எஸ். தனது அரசியல் வாழ்வில் எந்த முடிவு எடுத்தாலும் இந்த மூன்று கோவில்களுக்கு விஜயம் செய்துவிட்டுத்தான் எடுப்பார். சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது என்கிற முடிவை ஓ.பி.எஸ். எடுத்ததன் பின்னணியில்தான் இந்த கோவில் விசிட்டுக்கள் நடந்தது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.


கலந்தம் என்கிற ஊரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது ஓ.பி.எஸ்.ஸை. ஆர்.பி.உதயக்குமார் 3 எம்எல்ஏக்களுடன் சந்தித்தார். இதுதவிர நத்தம் விஸ்வநாதன் ஓ.பி.எஸ்.சுடன் ஒருநாள் முழுவதும் இருந்து அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த சமூகமான மறவர் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர்களும் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

 

Ad

 

சசிகலா, முக்குலத்தோர் சமுதாயத்தில் மற்ற பிரிவுகளான கள்ளர், அகமுடையார் ஆகிய சமூகத்தினரின் ஆதரவை ஒன்றாக திரட்டி வைத்துள்ளார். நாடார் இனமக்களின் ஆதரவை மனோஜ்பாண்டியன் மூலம் ஓ.பி.எஸ். திரட்ட ஆரம்பித்துள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். வன்னியர்களின் ஆதரவை திரட்ட எடப்பாடி சி.வி.சண்முகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

அ.தி.மு.க. எல்ஏக்களுடன் சசிகலா பேசத் தொடங்கியதை அறிந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 50 லட்ச ரூபாய் தர எடப்பாடி முடிவு எடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ளார். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அ.தி.மு.க.வில் நடைபெறும் மோதல் நீயா? நானா? என உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைவிட விறுவிறுப்பான இந்த ஆளுந்தரப்பு அரசியல் கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என ஒவ்வொரு பந்தையும் உற்றுக்கவனிக்கும் அம்பயர் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.
 

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.