Skip to main content

அழிமீன் திருவிழா அமெரிக்காவிலும் நடக்கிறது! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Fish Festival is happening in the United States too!

 

புதுக்கோட்டை மாவட்டம், ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல அழிமீன் திருவிழாவிலும் மாநிலத்திலேயே முதலிடம் தான். பாசன கண்மாய், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய தண்ணீர் வற்றும் நேரத்தில் அரசாங்கமே மீன் பாசி ஏலம் விடுவது வழக்கம். பல கிராமங்களில் கண்மாய்களில் தண்ணீர் நிறைந்ததுமே ஏலம் எடுத்து மீன் வளர்ப்பதும் வழக்கமாக உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, விராலிமலை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏரி, கண்மாய்களில் மழைத் தண்ணீர் நிரம்பியதும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பாசனதாரர்கள் தங்கள் பாசன கண்மாய்களில் மீன் உள்ளதா என்பதை பார்த்து மீன் இல்லை என்றால் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுவதும் பல ஊர்த் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுவதும் உண்டு.

 

Fish Festival is happening in the United States too!

 

மழைத்தண்ணீரால் ஒரு கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறி அதிலிருந்து மற்றொரு கண்மாய்க்கு தண்ணீர் போகும் போது மீன்களும் அடுத்தடுத்த கண்மாய்களுக்கு போகிறது. இப்படி வளரும் மீன்களை பொன்னமராவதி, திருமயம், விராலிமலை, சிவகங்கை மாவட்ட கிராம மக்கள் ஏலம் விடுவதில்லை. மாறாக அந்த மீன்களை கிராம மக்களே பிடித்து செல்ல மீன்பிடி திருவிழாவை நடத்துகிறார்கள்.


ஒரு கிராமத்தில் மீன் பிடி திருவிழாவுக்காக நாள் குறித்துவிட்டால் அந்த கிராம மக்கள் பக்கத்து ஊரில் உள்ள உறவுகளுக்கெல்லாம் அழைப்பு கொடுத்து வரவழைப்பார்கள். பிடிக்கப்படும் மீன்களை சமைத்து உறவுகளுக்கு விருந்து படைக்கின்றனர். 


இது குறித்து பொன்னமராவதி பகுதி இளைஞர்கள் கூறும் போது, “தமிழ்நாட்டிலேயே பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்களில் தான் காலங்காலமாக அதிகமான கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடக்கும். இப்ப பல மாவட்டங்களுக்கும் பரவியதோடு அமெரிக்காவில் ஒரு நகரில் பொன்னமராவதி நகரத்தார்கள் இணைந்து ஒரு குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்தி இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

 

Fish Festival is happening in the United States too!

 

அழிமீன் திருவிழா என்பது தான் மீன்பிடி திருவிழா என்று சொல்கிறோம். அதாவது மழை பெய்யும் போது கண்மாய்களை சுத்தமா வைத்திருந்தால் தான் தண்ணீரை நிரப்பி விவசாயம் செய்யலாம். அதுக்கு ஒவ்வொரு வருசமும் கண்மாய்களை சுத்தம் செய்யணும். பாசனம் முடிஞ்ச பிறகு கண்மாயில் தண்ணீர் வற்றத் தொடங்கும் போது கண்மாயில் உள்ள இந்த பாசி, செடி, கொடிகளை அழிக்கணும். அதுக்காகத் தான் அழிமீன் திருவிழா நடத்துறது. மீன் பிடிக்கும் போது இடையூறாக உள்ள பாசி, செடி, கொடிகளை அப்படியே வெளியேற்றி கரையில கொண்டு வந்து குவியலா போடுவாங்க. மீன் பிடிச்சு தண்ணீர் வற்றிய பிறகு குளம் சுத்தமா இருக்கும். இது தான் அழி மீன் திருவிழா.


இந்த திருவிழா எப்படி நடக்கும் என்றால், பல கண்மாய்கள் தண்ணீர் நிரம்பி அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தால் அதில் மீன்களும் வரும். தண்ணீர் நிரம்பிய பிறகு கண்மாயில் மீன் உள்ளதா என்று பார்ப்பார்கள். மீன் இல்லை என்றால் பாசனதாரர்களோ, ஊரில் இருந்தோ மீன்குஞ்சு வாங்கி கண்மாயில் விடுவாங்க. விவசாயம் முடிந்து தண்ணீர் வற்றும் நேரத்தில் மீன்கள் செத்துமடியவிடாமல் பாசனதாரர்கள், ஊர் சேர்ந்து ஒரு தேதியை குறிப்பிட்டு அழிமீன் திருவிழா நடத்த அறிவிப்பார்கள். அந்த கிராமத்தினர் உறவினர்களுக்கு சொல்லி அழைத்து வருவார்கள்.


காலை 6 மணிக்கு கண்மாய் கரையில் கோயில் இருந்தால் அங்கேயோ அல்லது பாசன மடையிலேயோ ஊர்த் தலைவர், ஊராட்சித்தலைவர், பாசன தாரர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சாம்பிராணி புகை போட்ட பிறகு தங்கள் தோளில் கிடக்கும் வெள்ளை துண்டு எடுத்து அசைப்பார்கள் இதுக்கு பேரு 'வெள்ளை வீசுவது' வெள்ளை வீசிய பிறகு தான் கரையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை போன்ற மீன்பிடி சாதனங்களுடன் ஜாதி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன் பிடிப்பார்கள். செடி, கொடி, பாசிகள் இல்லாத கண்மாய்களாக இருந்தால் அதிகபட்சம் அரை மணி நேரமும் செடி, கொடி, பாசி இருந்தால் ஒரு மணி முதல் 2 மணி நேரமும் மீன்பிடித்து மகிழ்வார்கள். பலரது வலையில் ஏராளம் பெரிய மீன்களும் சிலர் வலைகளில் சிறிய மீன்கள் கூட சிக்காமல் போகும். மீன் சிக்கவில்லை என்றால் நிறைய மீன் பிடித்தவர்கள் மீன் பிடிக்காதவர்களுக்கு கொடுப்பார்கள். சிலரது வலைகளில் மீன்களோடு பாம்புகளும் சிக்கும். 

 

Fish Festival is happening in the United States too!

 

பிடித்த மீனை வீடுகளுக்கு கொண்டு போய் சமைத்து உறவினர்களுக்கு விருந்து படைப்பார்கள். ஒரு சில ஊர்களில் பாசனதாரர்களே மீன்களை பிடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் பங்கு வைத்து கொடுப்பதும் உண்டு. பெரிய கண்மாய்களில் 10 ஆயிரம் பேர்கள் வரை ஒரே நேரத்தில் இறங்கி மீன் பிடிப்பார்கள். சில நாள் முன்பு பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பொன்னமராவதியை சுற்றி உள்ள மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, தொட்டியம்பட்டி, வார்ப்பட்டு, கட்டையாண்டிபட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி அழி மீன் பிடித்தனர்.


அழிமீன் திருவிழா முடிந்த பிறகு கண்மாயில் தண்ணீர் முழுமையாக வற்றும் போது மூதாட்டிகள் மண் பானைகளை வைத்துக் கொண்டு அயிரை மீன் பிடிப்பார்கள். இது தான் கடைசி அழி மீன் பிடிப்பாக இருக்கும் என்றனர்.


தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு அர்த்தமுள்ளது தான் என்பதற்கு இந்த அழிமீன் திருவிழாவும் ஒரு சான்று. கண்மாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அழிமீன் திருவிழா நடத்துகிறார்கள்.

 

 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.