Skip to main content

75 ஆண்டுகளாக அணையாத தீ!

Published on 04/07/2018 | Edited on 05/07/2018

 

 

பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள். 

“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பானை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என அந்த மாணவரை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்! ஆண்டு, 1943.

 

 


காவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. 

அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம்பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ. 

 

 

periyar_anna


ஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.

75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர். 

 

 


ஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார்,  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)

குடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள். 

 

 

K. A. Mathiazhagan R. Nedunchezhiyan evk sampath Era Sezhiyan

 
திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது. 

குடி அரசு இதழில் எழுதிய அறிக்கையில், “அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுருவாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.

 

veeramani


குடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த  மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப்பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.

 

 


ஒரு சில மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும் வெற்று ஆடம்பரத்துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்றைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும். 

மாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது. சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை? 



 

 

 

 


 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.