Skip to main content

அமெரிக்காவில் புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா!

Published on 21/04/2021 | Edited on 22/04/2021

 

Festival in the United States for the Revolutionary Poet bharathidasan

 


அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் ஏற்பாட்டில் அமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் சிறப்பை எடுத்துக்கூற வருகிறது 'புரட்சிக் கவிஞருக்கு பெருவிழா 2021'. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் பாரதிதாசனாரின் நினைவு நாளாம் 21 ஏப்ரல் 2021 முதல் அவரது பிறந்தநாளாம் 29 ஏப்ரல் 2021 வரை தொடர் நிகழ்ச்சிகளாக இப்பெருவிழா ஆரவாரமாகவும், கோலாகலமாகவும், கொண்டாட்டமாகவும் ஒருசேர அரங்கேறி பாரதிதாசனாரின் நேசர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவுள்ளது.

 

பாரதிதாசனாரை சுட்டெரிக்கும் கதிரவனாகக் கண்டுள்ளோம். ஆனால் தன் பிள்ளைகள் மற்றும் பேரன்களோடு விளையாடி மகிழ்ந்த அன்பான குடும்பத் தலைவராக வாழ்ந்த பாங்கை "பேரனின் பார்வையில் பாரதிதாசன்" என்ற தலைப்பில் முதல்நாள் சிறப்புச் சொற்பொழிவாக கலைமாமணி திருமிகு. கோ. பாரதி (பாரதிதாசனாரின் பெயரன்) பேசவுள்ளார். 

 

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கருத்தரங்கம், தமிழிசையரங்கம், சிறார்களுக்கான கட்டுரைப் போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவியரங்கம், பட்டிமன்றம், மு.வ பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு, குடும்பவிளக்கு - முதியோர் காதல் பற்றிய சொற்பொழிவு மற்றும் புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் சிறப்புச் சொற்பொழிவு என்று அணியணியாக நிகழ்சிகள் தொடர்ந்து நடக்கவுள்ளது.

 

'புரட்சிக்கவிஞர் ஓரு பார்வை' என்ற தலைப்பில் உலகத் தமிழர்கள் அவரது எழுத்தின் கருத்துச்சிறப்பை பைந்தமிழ்ச்செல்வி திருமிகு. புதுகை  ச. பாரதி தலைமையில் பேசவுள்ளனர். பாரதிதாசன் எளிய மக்களை தன் கவியில் உள்ளடக்கிய பாங்கு, பாரதி வழியில் புதுக்கவி பாடிய பாங்கு, உலகத்தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவரது திருக்குறள் உரையின் சிறப்பு மற்றும் அவரது திரையிசைப் பாடல்கள் பற்றி பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.

 

பாரதிதாசனாரின் பாடல்களை தமிழிசையால் மகிழ்விக்கப் பல பாடகர்கள் அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பாடவிருக்கிறார்கள். கேட்போருக்கு தமிழ் உணர்வு மற்றும் புரட்சிக்கருத்துகள் தெவிட்டா தேனிசையாகப் பொழியும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்று ஒருங்கினைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

 

அமெரிக்கக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்துக்கு இணையாக தமிழில் இயற்கையைப் பாடியவர் நம் பாவேந்தர். அவரது இயற்கை பற்றிய படைப்பகளின் சிறப்பை எடுத்துரைக்க வாழும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் தலைமையில் "அழகின் சிறப்பு" என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடக்கவுள்ளது. அதில் தமிழ், கடல், வானம், குன்றம், தென்றல் என்ற உட்தலைப்புகளில் பல அறிஞர் பெருமக்கள் தங்கள் கவித்திறனால் புரட்சிக்கவிஞர் படைப்பின் புகழ் பாடவுள்ளனர்.

 

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று காதல் சொற்களை வடித்தவர் பாவேந்தர். மற்றொரு பக்கம் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!" என்று தமிழருக்கு உணர்ச்சியூட்டி வீரத்தை விதைத்த புரட்சிக்கவிஞரும் அவரே. இதில் எக்கருத்து விஞ்சி நிற்கிறது. அதனை நயத்துடுனும், நகைச்சுகையுடனும் எடுத்துரைக்கும் "பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?" என்ற சிறப்புப் பட்டிமன்றம் இலக்கியச் சிம்மம் திருமிகு. கங்கை மணிவண்ணன் அவர்களது தலைமையில் நடக்கவுள்ளது.

 

Festival in the United States for the Revolutionary Poet bharathidasan

 

8 அகவை முதல் 15 அகவை வரை சிறார்கள் பங்கு கொள்ளும் "பாவேந்தரின் பார்வையில் இயற்கை" என்ற பேச்சுப்போட்டி நடக்கவுள்ளது. மேலும் 16 அகவைக்கு மேல் உள்ள பெரியவர்கள் பங்கு கொள்ளும் "புரட்சிக்கவிஞரின் மொழி வளர்ச்சி சிந்தனைகளின் இன்றைய தேவை" என்ற கட்டுரைப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

 

புரட்சிக் கவிஞரின் இளையோர் காதல் பாடல்கள் மட்டுமா சிறப்பு, இல்லை.. இல்லை அவரது முதியோர் காதல் கவிகள் இன்னும் சிறப்பு என்று எடுத்துரைக்க "குடும்பவிளக்கு - முதியோர் காதல்" என்ற தலைப்பில் பேசவுள்ளார் எழு்ச்சிப் பேச்சாளர் திருமிகு. துரை. எழில்விழியன்.

 

பாரதிதாசன் கை வரையா கவிகள் உள்ளனவோ? அவை கூறா கருத்துகள் உள்ளனவோ? அனைத்தும் உண்டு! அனைத்துத் தேனிலும் ஒரு துளி எடுத்து கேட்போரை செவிச்சுவைக்க வைக்க ஒரு கருத்தரங்கம் "பாரதிதாசன் படைப்புகள்" என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் தலைமையில் நடக்கவுள்ளது.

 

புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் நிகழ்வாக "பாரதிதாசன்-மெய்யெழுத்து" என்ற தலைப்பில் கவிஞர் திருமிகு. அறிவுமதி உரையாற்றவுள்ளார்.

 

புரட்சிக்கவிஞரைப் போற்றும் அதே நேரத்தில், தமிழுக்குப் பெரும் பங்காற்றிய மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் மு. வரதராசன் அவர்களையும் போற்றிட அவர்களது பிறந்தநாள் நிகச்சி நடக்கவுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராகப் பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் திருமிகு. ப. இரா. அரங்கசாமி அவர்கள் சொற்பொழிவாற்றவுள்ளார்.

 

இப்பேரிடர் காலத்தில் அனைத்து நிகழ்வுகள் இணையவழி சூம் மூலமாக நடக்கவுள்ளது. சூம் எண்ணிற்கு (Zoom Meeting ID) இணைக்கப்பட்ட துண்டறிக்கையைப் பார்க்கவும். அனுமதி இலவசம். இவ்விழா சிறப்பாக நடைபெற உலகத்தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று விழா ஒருங்கினைப்பாளர்கள் கூறினர்.

 

-பிரசாத் பாண்டியன்

 

 

 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.