Skip to main content

காந்தி மேஜிக்! - கனிந்த சுதந்திரம்!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையிலிருந்து விலகி,  மக்களின் அதிமுக்கியப் பிரச்சனைகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே,  மகாத்மா என்று அடையாளம் காணப்பட்டார் காந்தி.  
 

gandhi

 

 

மனவலியை ஏற்படுத்திய மகாத்மா பட்டம்! 

1915-ல் சாந்திநிகேதன் சென்றார் காந்தி. அங்கு ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்ததும் ‘நமஸ்தே குருதேவ்’ என்று கைகூப்பி வணங்கினார். உடனே தாகூர், ‘நான் குருதேவ் என்றால், நீங்கள் மகாத்மா’ என்றார். அதற்குமுன்பே, கோண்டுகள் என்று சொல்லப்படும் மத்தியப்பிரதேச பழங்குடிகள், காந்தியை மகாத்மா என்றார்கள். அந்த மக்கள் தன்னை இவ்விதம் உயர்த்திச் சொல்வதை காந்தி விரும்பவில்லை. ‘வெறுப்புக்கும் கண்டனத்துக்கும் உரியது’ என்றார். காரணம் – மகாத்மா பட்டம் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், மகாத்மா என்ற சொல்லை வைத்து மென்மையாகக் கிண்டல் செய்தார். தன்னைத்தானே நக்கலடித்து வாய்விட்டுச் சிரிப்பது அவருடைய இயல்பாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய புகைப்படத்தை வைத்திருந்த ஒருவரைக் கட்டாயப்படுத்தி தூக்கிப்போடச் செய்தார்.  ‘தங்களைப் பார்த்த மாத்திரத்தில் நோய் குணமானது’ என்று ஒருவர் சொன்னபோது, அவமானமும் வருத்தமும் அடைந்தார் காந்தி.  

‘மகாத்மா என்று உங்களை ஏன் அழைக்கின்றார்கள்?’ என்ற கேள்விக்கு காந்தி “மகாத்மா என்ற பட்டம் பலமுறை என்னைக் கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. இந்த உலகத்துக்குப் புதிதாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. உண்மையும் அஹிம்சையும் புராதன மலைகளைப் போன்றவை. என்னுடைய சொந்த வாழ்க்கையில், என்னால் முடிந்தவரை, இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறேன். இதைத்தான் என்னால் சொல்ல முடியும். என்னைப் பலரும் மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், மற்றவர்களைக் காட்டிலும் அவர்களை நான் புரிந்து வைத்திருந்ததுதான்.” என்று விளக்கம் தந்தார்.  

கண்ணெதிரே சிதைந்த நம்பிக்கை!

ஒருபக்கம் மகாத்மா என்று தேசமே புகழ்ந்தாலும், தான் வாழ்ந்த காலத்திலேயே கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் காந்தி.  

சட்ட மறுப்பு இயக்கத்தை ரகசியம் சூழ்ந்துவிட்டதாகக் கூறி, இர்வினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் காந்தி. அப்போது நேதாஜியும், விட்டல்பாய் படேலும் வியன்னாவில் இருந்து ‘ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டார். இதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை. தன்னுடைய வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி இன்னும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது.’ என்று அறிக்கை விட்டனர். அந்தக் காலக்கட்டத்தில் சிலர், அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக உண்ணாவிரதத்தைப் பயன்படுத்தினார் என்று விமர்சித்தார்கள்.    ‘செத்து ஒழியுங்கள்’ என்றார்கள். ‘அரசியலைவிட்டு சன்னியாசம் செல்லுங்கள்’ என்று குரல் எழுப்பினார்கள். 

காந்தி லண்டன் சென்றபோது ஒரு ஆங்கிலேயச் சிறுவன்  “ஏய் காந்தி! எங்கே உன் டிரவுசர்?” என்று கேட்டபோது உற்சாகமாகச் சிரித்தவர் காந்தி. தன் மீதான விமர்சனம் குறித்த விவாதத்தின்போது காந்தி “எனது முரண்பட்ட நிலைகள் குறித்த ஏராளமான குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம், நான் பதிலளிப்பதில்லை. ஏனென்றால், அந்த விமர்சனங்கள் வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிப்பவை.” என்றார். ஆனாலும், தன்னுடைய இறுதிக்காலத்தில்,  மதப்பிரிவினையால் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதும், இந்துக்களில் சிலர் தன்னை மதத்துரோகி என்று வெறுத்ததும், மனிதர்கள் மீதான  தன்னுடைய நம்பிக்கைகள், தன் கண்ணெதிரே சிதைவதையும் கண்டு மனம் உடைந்தார். இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்திருந்தது. இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார். 

இவரளவுக்கு எவரும் இல்லை!
 

gandhi 2

 

 

இருபதாம் நூற்றாண்டில், காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவுக்கு, வேறெந்த மனிதரின் வாழ்க்கையும் பதிவு செய்யப்படவில்லை. காரணம் – அவரளவுக்கு இந்த உலகத்தில்,  மிக எளிய வழிகளில், இவ்வளவு மனிதர்களை வழிநடத்திய தலைவர்கள் யாரும் இல்லை. இந்த தேசத்தில் கோடானுகோடி மக்களை அவர் ஆழமாகப் பாதித்திருக்கிறார். அதனால்தான், நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. வீட்டைவிட்டு வெளியில் வராத பெண்களும்கூட போராடி சிறை சென்றார்கள். 

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் பிரிவு இருப்பதையும், மற்ற இந்துக்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தி வந்ததையும் கடுமையாக எதிர்த்தார். தீண்டாமையை இந்து மதத்தின் சாபக்கேடு என்றார். அதனாலேயே, அம்மக்களுக்கு  ‘கடவுளின் குழந்தைகள்’ என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தினார். 

அவரே மிகவும் வருத்தப்பட்ட விஷயங்கள் என்றால், எளிதில் புரியாத தன்னுடைய கிறுக்கலான கையெழுத்தும், யாரையாவது தனக்கு மசாஜ் செய்துவிடச் சொல்வதும்தான். அடிப்படையில், அவர் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடந்தார்.  தன்னுடைய வாழ்வை, முழுமையாக, பிறர் இழிவாகக் கருதும் விஷயங்களைக்கூட, வெளிப்படுத்திய துணிவு அவருக்கு இருந்தது. துப்புரவுப் பணியிலிருந்து சகல வேலைகளையும் அவரே செய்தார். ஆனாலும், அந்த எளிமை யாருக்கும் உறுத்தலாகத் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அவரை ஒரு மகானாகவே பார்த்தார்கள். அதனால்தான், எங்கு சென்றாலும், மக்களை அமைதிப்படுத்த அவரால் முடிந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வன்முறையைக் கைவிட்டனர். சகோதரத்துவ உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். 

காந்தியை தீவிரமாக விமர்சித்துவந்த அன்றைய ஆங்கிலேய ஆதரவுப் பத்திரிக்கைகள், அவருடைய உன்னதக் கொள்கைகளையும், இந்திய மக்கள் அனைவரும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டதையும் பார்த்து ‘காந்தி மேஜிக்’ என்று வியந்து எழுதின. அதனால்தான், தேசப்பிதாவாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். 
 
இந்தியர்கள் நாம் காந்தி தேசத்தில் வாழ்வதில் பெருமிதம் கொள்வோம்!

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.