Skip to main content

டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
P.r.pandian

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

 

அப்போது அவர், ''மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், உரிய அவகாசம் அளிக்காமல், அவசரம் அவசரமாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. 

 

குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, மத்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதை அனுமதிக்க மாட்டோம். பெரும் கார்ப்பரேட்டுகள் சந்தைகளில் அனுமதிப்படுவதை ஏற்க மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துதான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

 

பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிய அன்றைய தினமே பஞ்சாப்பில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. மத்திய அரசு அம்மாநில அரசையும், விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் கொள்கை முடிவு என்பதில் இடம்பெற செய்ய மாட்டோம், வாய்மொழி உத்தரவு தருவதாக சொன்னார்கள். அதனை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். இதனால்தான் போராட்டம் தீவிரமானது. 

 

ddd
டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் 

 

 

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. இப்போது போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சொல்வது, போராட்டத்தை திசை திருப்ப முயற்சிதானேயொழிய, விவசாயிகளக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. 

 

விவசாயிகள் தங்கள் அமைதி வழிப் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். விரைவில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பது முக்கியமில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம். 

 

விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கக்கூடிய அம்சங்களை திரும்பப்பெற்றோம் என்ற நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்தும் வடநாட்டு போராட்டக் குழுவோடு இணைந்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக போராடும் விவசாயிகள் மீது போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானம் அற்ற செயல். அதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை திருவாரூரில் எங்கள் சங்கத்தின் சார்பாக அடையாளப்பூர்வமான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து காவிரி டெல்டா உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆதரவு தரும் வகையில் போராட்டம் நடத்துவோம். வரும் 3ஆம் தேதி நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல தீர்வு வராத பட்சத்தில் நாங்களும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்'' என்றார் உறுதியாக.

 

 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.