Skip to main content

அயோத்தி வேண்டாம், கடன் நிவாரணம் வேண்டும்! டெல்லியை கலங்கடித்த முழக்கம்

Published on 30/11/2018 | Edited on 01/12/2018

புழுக்கள் கூட மிதிபட்டவுடன் நிமிர்ந்தெழும். ஆனால், விவசாயத்தை அடித்தளமாகக் கொண்ட இந்தியாவில் விவசாயிகள் மட்டுமே நாதியற்றவர்களாக கருதப்படும் நிலை நீண்டகாலமாக நீடிக்கிறது.

விவசாயம் செய்யும்போது இருக்கும் விலை அறுவடை செய்யும்போது இருப்பதில்லை. செலவு செய்ததை மீட்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். பல சமயங்களில் மழை வெள்ளமும், வறட்சியும் நிலத்தில் பயிர் செய்ததை அறுவடையே செய்ய முடியாத நிலையையும் சந்தித்தார்கள்.

 

farmers



எப்படியாகினும் அந்த இழப்பைத் தாங்கி அவன் அடுத்த பருவத்தில் விவசாயத்தை நடத்த வேண்டும். அல்லது, கடனுக்கு பயந்து நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலைக்கு செல்லவேண்டும். அல்லது, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்கும்போது, அவர்களுடைய விவசாயத்தை நசியச்செய்யும் கார்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரிச்சலுகையும், கடன் தள்ளுபடியும் பெற்று கொழிக்கும் நிலையில் இந்த நாட்டில் சர்வசாதாரண நிகழ்வுகளாக தொடர்கின்றன.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று முழங்கிக்கொண்டே, பெருமுதலாளிகளின் காலடியில் கிடக்கும் அரசுகளின் அடக்குமுறைகளையும் ஆண்டுதோறும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

விதைகள், உரங்கள், மின்சாரம், பயிர்க்காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும். விளைபொருள் விலையை அரசே தீர்மானிக்கட்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நீண்டகாலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடன் தொல்லையால் நிகழும் தற்கொலைகளை தவிர்க்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அந்த மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால், மகாராஸ்டிராவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திய பிரமாண்டமான பேரணியைத் தொடர்ந்து அந்த மாநில அரசு கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. பஞ்சாபில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அங்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் போராடிய விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை அடக்கி ஒடுக்கிய மாநில அரசுகள் இப்போது தங்களுக்கு மீண்டும் வாக்களித்தால் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுக்கின்றன. விவசாயிகளின் இன்றைய இழிநிலையைப் போக்கவே டெல்லியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். இந்திய அளவில் 200க்கு மேற்பட்ட விவசாய சங்கங்களை அகில இந்திய விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

 

delhi farmers rally



1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதரக் கொள்கையால்தான் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகினர். நவீன விவசாய சாதனங்கள் அறிமுகமாக ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித்தது. அதேசமயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் கிராமப்புற வாழ்க்கையைச் சீரழித்து, நகரமயமாக்கியது. இந்த உண்மை 1996 ஆம் ஆண்டுதான் மக்களுக்கு புரியத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தொடங்கிஇன்றுவரை இந்தியா முழுவதும் மூன்று லட்சம் விவசாயிகள் கடன் சுமையாலும், விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காததாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நவம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் செங்கடல்போல் சங்கமித்த விவசாயிகளின் கூட்டம் மத்திய அரசாங்கத்தின் குரல்வளையை இறுக்கியிருக்கிறது. கார்பரேட்டுகளின் ஊதுகுழலாக, மோடிக்கு வக்காலத்து வாங்கும் மீடியாக்கள்கூட இந்தப் பேரணியின் வெற்றியை மறைக்க முடியவில்லை.  டெல்லியில் பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரும் விவசாயிகளுக்குஆதரவாக களம் இறங்கியிருப்பது மாற்றத்திற்கான அடையாளம்.  பேரணியில் வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் முகாம்களை நடத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு சோறு போடுகிறவர்களின் முக்கியத்துவத்தை இந்த நாடு உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் நாடாள்வோர் எப்போது உணர்வார்கள் என்பதே விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

உயரமான சிலைகளைக் காட்டி விவசாயிகளின் உயிருக்கு உலை வைக்க இனியும் விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். ராமர் சிலையை காட்டி விவசாயிகளின் நெற்றியில் பட்டைநாமம் சாத்த விடமாட்டார்கள். அயோத்தி பிரச்சனை எங்களுக்கு தேவையில்லை. கடன் நிவாரணமே எங்களுக்குத் தேவை என்று விவசாயிகள் எழுப்பிய முழக்கம் நாடாளுமன்றக் கட்டிடத்தை உலுக்கியிருக்கிறது.தூக்கு மாட்டிக்கொண்டு சாவதை விட போராடுவதே தங்களுக்கு பெருமை என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்திருக்கிறார்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது. 

 

 

 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.