Skip to main content

அயோத்தி வேண்டாம், கடன் நிவாரணம் வேண்டும்! டெல்லியை கலங்கடித்த முழக்கம்

Published on 30/11/2018 | Edited on 01/12/2018

புழுக்கள் கூட மிதிபட்டவுடன் நிமிர்ந்தெழும். ஆனால், விவசாயத்தை அடித்தளமாகக் கொண்ட இந்தியாவில் விவசாயிகள் மட்டுமே நாதியற்றவர்களாக கருதப்படும் நிலை நீண்டகாலமாக நீடிக்கிறது.

விவசாயம் செய்யும்போது இருக்கும் விலை அறுவடை செய்யும்போது இருப்பதில்லை. செலவு செய்ததை மீட்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். பல சமயங்களில் மழை வெள்ளமும், வறட்சியும் நிலத்தில் பயிர் செய்ததை அறுவடையே செய்ய முடியாத நிலையையும் சந்தித்தார்கள்.

 

farmers



எப்படியாகினும் அந்த இழப்பைத் தாங்கி அவன் அடுத்த பருவத்தில் விவசாயத்தை நடத்த வேண்டும். அல்லது, கடனுக்கு பயந்து நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலைக்கு செல்லவேண்டும். அல்லது, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்கும்போது, அவர்களுடைய விவசாயத்தை நசியச்செய்யும் கார்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரிச்சலுகையும், கடன் தள்ளுபடியும் பெற்று கொழிக்கும் நிலையில் இந்த நாட்டில் சர்வசாதாரண நிகழ்வுகளாக தொடர்கின்றன.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று முழங்கிக்கொண்டே, பெருமுதலாளிகளின் காலடியில் கிடக்கும் அரசுகளின் அடக்குமுறைகளையும் ஆண்டுதோறும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

விதைகள், உரங்கள், மின்சாரம், பயிர்க்காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும். விளைபொருள் விலையை அரசே தீர்மானிக்கட்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நீண்டகாலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடன் தொல்லையால் நிகழும் தற்கொலைகளை தவிர்க்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அந்த மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால், மகாராஸ்டிராவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திய பிரமாண்டமான பேரணியைத் தொடர்ந்து அந்த மாநில அரசு கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. பஞ்சாபில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அங்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் போராடிய விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை அடக்கி ஒடுக்கிய மாநில அரசுகள் இப்போது தங்களுக்கு மீண்டும் வாக்களித்தால் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுக்கின்றன. விவசாயிகளின் இன்றைய இழிநிலையைப் போக்கவே டெல்லியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். இந்திய அளவில் 200க்கு மேற்பட்ட விவசாய சங்கங்களை அகில இந்திய விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

 

delhi farmers rally



1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதரக் கொள்கையால்தான் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகினர். நவீன விவசாய சாதனங்கள் அறிமுகமாக ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித்தது. அதேசமயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் கிராமப்புற வாழ்க்கையைச் சீரழித்து, நகரமயமாக்கியது. இந்த உண்மை 1996 ஆம் ஆண்டுதான் மக்களுக்கு புரியத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தொடங்கிஇன்றுவரை இந்தியா முழுவதும் மூன்று லட்சம் விவசாயிகள் கடன் சுமையாலும், விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காததாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நவம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் செங்கடல்போல் சங்கமித்த விவசாயிகளின் கூட்டம் மத்திய அரசாங்கத்தின் குரல்வளையை இறுக்கியிருக்கிறது. கார்பரேட்டுகளின் ஊதுகுழலாக, மோடிக்கு வக்காலத்து வாங்கும் மீடியாக்கள்கூட இந்தப் பேரணியின் வெற்றியை மறைக்க முடியவில்லை.  டெல்லியில் பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரும் விவசாயிகளுக்குஆதரவாக களம் இறங்கியிருப்பது மாற்றத்திற்கான அடையாளம்.  பேரணியில் வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் முகாம்களை நடத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு சோறு போடுகிறவர்களின் முக்கியத்துவத்தை இந்த நாடு உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் நாடாள்வோர் எப்போது உணர்வார்கள் என்பதே விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

உயரமான சிலைகளைக் காட்டி விவசாயிகளின் உயிருக்கு உலை வைக்க இனியும் விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். ராமர் சிலையை காட்டி விவசாயிகளின் நெற்றியில் பட்டைநாமம் சாத்த விடமாட்டார்கள். அயோத்தி பிரச்சனை எங்களுக்கு தேவையில்லை. கடன் நிவாரணமே எங்களுக்குத் தேவை என்று விவசாயிகள் எழுப்பிய முழக்கம் நாடாளுமன்றக் கட்டிடத்தை உலுக்கியிருக்கிறது.தூக்கு மாட்டிக்கொண்டு சாவதை விட போராடுவதே தங்களுக்கு பெருமை என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்திருக்கிறார்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது. 

 

 

 

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.