Skip to main content

கொப்பளிக்கும் அணை! காப்பாற்றாத அதிகாரிகள்! கொந்தளிக்கும் விவசாயிகள்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

தென் மாவட்டத்தின் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் அடிப்படையாக இருந்த மூன்று பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் மார்ச் மாதக் கோடையின்போது சுறு சுறுவென்று வற்றி 22 அடிக்கும் கீழே சென்றது. நூற்றுக்கும் மேற்பட்ட அடிகள் கொள்ளவு கொண்ட இந்த அணைகளின் நீர் வற்றிப் போனது மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரம் விவசாயம் பற்றிய கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. கோடை தப்பிக்குமா என்றெல்லாம் வேண்டினர்.
 

நல்ல வேளையாக தென் மேற்குப் பருவமழையின் வருண பகவான் தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் சப்பணமிட்டு அமர்ந்ததால் அதன் தாக்கம், தொடர்ந்து மூன்று வாரங்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக வற்றாத தாமிரபரணி ஊற்றெடுத்தது. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஒடியது. வற்றிய அணைகளின் நீர் மட்டங்கள் விர்ர்ர்ரென்று எகிறின. அணைகளின் நீர், பத்தே நாட்களில் பாபநாசம் அணை 107.30 அடியாகவும், மிகப் பெரிய அணையான 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 79.45 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர் மட்டம 128.67 என்று தண்ணீரின் அளவை இயற்கையின் கொடை உயர்த்தியதை வரப்பிரசாதமாக மக்களும், விவசாயிகளும் கொண்டாடுமளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. மட்டுமல்ல இந்த மலையை ஒட்டியுள்ள கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைகள் நிரப்பியதோடு பச்சையாறு, நம்பியாறு போன்றவைகளும் பெருக்கெடுத்து ஒடுகின்றன.
 

இவைகளில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் கடையம் பகுதியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ராமநதி கொள்ளளவான 84 அடியைத் தாண்டி விட்டது. இதன் மூலம், கடையம், ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல், புதூர், மந்தியூர், ராஜாங்கபுரம் என்று 17க்கும் மேற்பட்ட கிராமங்களின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு அந்தப் பகுதிகளின் குளங்களும் நிரம்புவதற்கும் ஆதாரமாக நிற்கிறது ராமநதி அணை,
 

தென்கால், வடகால் என இரண்டு மதகுகளைக் கொண்ட ராமநதியின் அணைக்குக் கீழாக 9 அணைக்கட்டுகள் உள்ளன. அதன் மூலம் வெளியேறும் தண்ணீர் 33 குளங்களை நிரப்புகின்றன.இந்த அணையில் பக்கமுள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிகற்களுக்காக பாறைகள் வெடிவைத்துப் பிளக்கப்பட்டு கிரஷ்ஷர் மெஷின் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. அதற்காகத் தொடர்ந்து வைக்கப்படுகிற சக்தி வாய்ந்த வெடிகளின் வெடிப்பு காரணமாக தரைப்பாறைகள் வெகு தொலைவு வரை அதிர்வதால், அருகிலுள்ள ராமநதி அணையிலும் அதிர்வுகள் ஏற்பட்டு அணையின் கரை மற்றும் ஷட்டர் பகுதிகள், பல வீனமாகி விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கொப்பளித்து வெளியேறத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வைக்கப்படும் வெடிகளால் அணை உடையும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
 

இது குறித்துச் சொல்கிற அந்தப் பகுதியின் விவசாயப் பிரதிநிதியான அழகப்புரம் செல்லையா.
 

ஜல்லிக் கற்களுக்காக கல்குவாரியை எடுத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் 30 முதல் 40 குழிகள் வரை துளைபோட்டு சக்தியுள்ள டைனமைட் வைக்கிறார்கள் அவைகள் ஒரே நேரத்தில் வெடிப்பதால் பூகம்பம் ஏற்பட்டதைப் போன்று பாறைகள் பிளந்து தரை அதிர்கிறது. இதனால் அணையில் ஏற்பட்ட விரிசல் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவைகள் தொடர்ந்து நீடிக்குமேயானால் அணை உடைந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. என அதிர்ச்சியோடு சொல்கிற செல்லையா, ஐந்து வருடக் கோடையில் நிரம்பாத அணைகள் தற்போதைய தென்மேற்குப் பருவமழையால் நிரம்பியதைக் காப்பாற்ற வேண்டும். என்கிறார் வேதனையோடு.
 

அணைகள் நிரம்புவது அத்தனை சுலபமல்ல. நிரம்பிய அணையைத்தக்க பாதுகாப்புடன் வைப்பதே அதிகாரிகள், அரசின் கடமையாகும். எதிர்பார்க்கிறார்கள் வேளாண்மக்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.