Skip to main content

விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு அடிமையாக்கும் அரசு – 8 வழிச்சாலை பயண தொடர்ச்சி

Published on 03/07/2018 | Edited on 08/07/2018
tvm public

திருவண்ணாமலையை சுற்றியுள்ள வேலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொழில்துறையில் வளர்ந்த மாவட்டங்களாக உள்ளன. தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை. காஞ்சிபுரத்துக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள செய்யார் தொழிற்பேட்டை 7 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தபின்பே இதுவும் தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம் தான் என்கிற பட்டியலில் இடம் பிடித்தது. அந்த தொழிற்பேட்டை வளர்ந்ததா என்றால் தவழ்கிறது என்பதே உண்மை. தொழில்துறையில் மட்டும்மல்ல கல்வியிலும் பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்க்கும்போது அது அப்பட்டமாக தெரியும்.

 

 


இப்படி கல்வித்துறை, தொழிற்துறையில் பின்தங்கியிருந்தாலும் விவசாயத்தில் முன்னணியில் உள்ள மாவட்டம்மிது. விவசாய பொருட்கள் உற்பத்தியில் முதல் 3 இடங்களில் உள்ளது இந்தமாவட்டம். அப்படி விவசாயத்தில் முன்னணியில் உள்ள இந்த மாவட்டத்தின் விவசாயத்தை அழிக்கும் நோக்கில் தான் வருகிறது 8 வழிச்சாலை பாதை.

விவசாய நிலத்தின் மீது புதியதாக அமைக்கப்படும் இந்த சாலை இந்த மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ பயணமாகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த திட்டத்தின்படி பாதிக்கப்படும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முதன்மை மாவட்டமாகும்.

 

land



திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள நீப்பத்துறையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லை தொடங்கும் தேத்தறை கிராமம் வரை சுமார் 83 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. சாலையால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் சுமார் 3 ஆயிரம் ஏக்கர். மறைமுகமாக பாதிக்கப்படுவது 2 ஆயிரம் ஏக்கர் என சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட போகின்றன.

அதோடு, இந்த மாவட்டத்தில் சராசரியாக இருக்க வேண்டிய வனத்தின் அளவு குறைவு. அதிலும் குறைவு ஏற்படும் அளவுக்கு 3 பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக சாலை போடப்படவுள்ளன. இதனால் மழை அளவு பாதிக்கப்படும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மழை குறைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். ஏற்கனவே சாலையால் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையில், மழையும் பொய்த்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து தொழில்துறை, கல்வியைப்போல் விவசாயத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்க வேண்டிய நிலைக்கு அரசாங்கமே வழிவகுக்கிறது என்கிறார்கள்.

 

 


இந்த திட்டத்தை மண்மலை, சி.நம்மியந்தல், மோப்பறை, தென்பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் தான் எதிர்க்கிறார்கள். காவல்துறையின் மிரட்டலால் மற்ற பகுதிகளில் எதிர்ப்பை கூட காட்ட முடியாமல் தங்கள் நிலத்தில் தங்கள் அனுமதியே இல்லாமல் அளவீடு கற்கள் நடுவதை அழுகையோடு வேடிக்கை மட்டும்மே பார்க்கிறார்கள்.

இந்த சாலைக்காக விவசாய நிலங்கள் அழிப்படுவதால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக குறைவு. மறைமுகமாக பாதிக்கப்படும் விவசாய கூலி மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறார்கள் அழகேசன் போன்ற விவசாயிகள்.

தொழிற்துறை மட்டும்மல்ல விவசாயமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை தரும் தொழில் தான். தொழில்துறையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி, அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் போன்றோர்க்கு பயந்து, பயந்து அடிமையாக இருக்க வேண்டும். விவசாயத்தை பொருத்தவரை நில உரிமையாளர்களை விட விவசாய கூலி மக்கள் தான் முதலாளிகள். அந்த சுதந்திரத்தை வழங்குவது இந்த விவசாய தொழில் தான் விவசாயத்தை அழிப்பதன் மூலம் விவசாய கூலிகள் தொழில் நிறுவனங்களுக்கு தான் வேலைக்கு போய் அங்க அடிமையாக இருக்க வைக்கவே அரசாங்கம் முயல்கிறது என்றார் போளுரில் நாம் சந்தித்த பாபு என்பவர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களிடம் எழுந்ததை விட திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடம் அதிகளவு எழுச்சி ஏற்பட்டுயிருக்க வேண்டும். ஆனால் அங்கு ஏற்பட்ட எழுச்சியோடு ஒப்பிடும்போது 30 சதவிதம் அளவுக்கு கூட எதிர்ப்புக்கிடையாது. அதற்கு காரணம் என்னவென விசாரித்தபோது, காவல்துறையின் அடக்குமுறை தான் அதற்கு காரணம்.

 

 


கடந்த மார்ச் மாதம்மே விவசாயிகள் இந்த சாலைக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு போராட்ட களத்துக்கு வரவே மக்களை யோசிக்கவைத்தது. மக்களின் அச்சத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அரசாங்கம், 8 வழிச்சாலைக்கான போராட்ட குரல்கள் எங்கு எழுப்பினாலும் காவல்துறை மூலமாக அடக்கியது. கைது, சிறை போன்றவை விவசாய மக்களை பயம்கொள்ள வைத்தது. இந்த மாவட்டத்தில் எதிர்ப்பு குரல் வந்த கிராம மக்களை உளவியல் ரீதியாக மிரட்ட 200 போலிஸ்சை கொண்டும் போய் குவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்ப்பு வெளிப்படாமல் போய்விடுவதை அறிய முடிந்தது.

 

officers



இதை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரிகள் வேகவேகமாக சாலைக்கான இடத்தை அளந்து கற்களை நட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். மீறி எதிர்ப்பவர்களுக்கு பல வித ஆசையும், விவசாயிகள் ஒன்றாக திரளாமல் பார்த்துக்கொண்டு காரியத்தை கச்சிதமாக நடத்துகிறது அரசாங்கம்.

தொழில்துறையில் வளர்ந்த, வளரும் மாவட்டமான காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் வழியாக படப்பை வரை இந்த 8 வழிச்சாலை 59 கி.மீ பயணமாகிறது. காஞ்சிபுரத்தில் விவசாயம் ஓரளவு நடைபெறும் பகுதிகள் உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். அங்கு விவசாயத்தை அழிப்பதன் மூலம் காஞ்சிபுரத்தை முழு தொழிற்துறை மாவட்டமாக மாற்றுகிறது அரசாங்கம்.

தொடரும்…….

அடுத்த பதிவில்…..

இதனை பசுமை வழிச்சாலை என குறிப்பிடுவது சரியா?, இந்த சாலை உண்மையில் எதற்காக அமைக்கப்படுகிறது?, அரசாங்கம் குறிப்பிடுவது போல சேலத்தில் இருந்து 3 மணி நேரத்தில் சென்னை போக முடியுமா?. மாவட்ட ஆட்சியர்கள் சொல்வதைப்போல பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு 3 மடங்கு கிடைக்குமா? திட்ட அறிக்கை சொல்வது என்ன ?.

Next Story

இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் உழைக்கும் விவசாயிகள் இயக்கம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Farmers Movement supporting India Alliance

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு  கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள்  மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து  உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய   அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.

இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள,  18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த  வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது

இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான  பிஜேபி  மற்றும்  அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை. 

மேற்காணும் அனைத்து  நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக்  கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும்  வர்க்கத்தின் நலன்   காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. 

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.