Skip to main content

தேர்தல் களத்தில் ரசிகர்கள்! கண்காணிக்கும் ரஜினி!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

ddd

 

"2021 சட்டமன்றத் தேர்தல் போர்க்களத்தில் வீரர்களாக நிற்போம்'' என 2017இல் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2020 டிசம்பரில் தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி "நான் அரசியலுக்கு வரவில்லை' என அறிவித்துவிட்டார். இன்னமும் யார் பக்கமும் சாயாத அவரது ரசிகர்களை வளைக்க கட்சிகள், மன்றங்களை வட்டமிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களின் நிலைப்பாடு என்ன? ரஜினி என்ன நினைக்கிறார் என அறிய ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.

 

"தமிழகத்தில் மன்றத்துக்கு அதிக தொண்டர்களை இணைத்து ரஜினிக்கு பக்கபலமாக இருந்தது தென்சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற மா.செ.க்கள்தான். 2021 தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டியைப் பலமாக அமைக்கச் சொல்லி தலைவர் உத்தரவிட்டார். 2019இல் தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் பூத் கமிட்டி இருந்தன. அதில் 42 ஆயிரம் பூத் கமிட்டிகளில் ஒரு கமிட்டிக்கு சராசரியாக 20 பேர் என 12 லட்சம் பேர் பட்டியலை தலைமைக்குத் தந்தோம்.

 

தமிழகத்திலேயே அதிக பூத் கமிட்டிகளை அமைத்து பக்காவாக இருந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தொகுதி என ரஜினியே பாராட்டினார். சோளிங்கர் தொகுதியில் மட்டும் 320 வாக்குச்சாவடிகளில் ஒரு பூத்துக்கு 30 பேர் கொண்ட கமிட்டி, அவர்களின் குடும்பத்தினர் என 30 ஆயிரம் வாக்குகள் என ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் மன்ற உறுப்பினர்கள், நேரடியாக பூத் கமிட்டியில் உள்ளார்கள். இவர்களின் குடும்பத்தினர், தீவிர ரசிகர்கள் என சராசரியாக 40 லட்சம் வாக்காளர்கள் தோராயமாக உள்ளார்கள்.

 

பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவிலிருந்து எங்கள் மன்றத்துக்கு வந்து, தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தலைவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தபின், மன்றத்தினர், பூத் கமிட்டி அமைப்பின் பலமறிந்து மன்றத்தினரைக் குறிவைத்தே தனிக்கட்சி தொடங்கி, ரசிகர்களைக் கவர திட்டமிட்டு எந்திரன் (ரோபோ) சின்னத்தையும் வாங்கினார். ஆனால் 5 சதவீதம் ரஜினி மன்றத்தினர்கூட அவர் பின்னால் செல்லவில்லை. இந்த விரக்தியிலேயே, "தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை” என அறிவித்து ஒதுங்கிக்கொண்டார்.

ddd

 

தலைவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டாலும், மன்றத்தினர் 80 சதவீதம் பேர் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை. இவர்கள் ரஜினி வாய்ஸ் யாருக்கு என காத்துள்ளார்கள். தலைவர் அமைதியாக இருப்பதால் இந்த வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., கமல் கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் எங்கள் மா.செ.க்களிடம் முட்டிமோதுகின்றனர். தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள், வேலூர் மா.செ. சோளிங்கர் ரவியை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் தென்சென்னை சந்தானம், கிருஷ்ணகிரி சீனுவாசன், தஞ்சை தினேஷ், புதுக்கோட்டை முருகுபாண்டியன் போன்ற 20க்கும் மேற்பட்ட மா.செ.க்களிடம் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவு கேட்கிறார்கள்'' என்றனர் நிர்வாகிகள்.

 

ரஜினிக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தலைவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை, ரசிகர்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் என அறிவித்தாலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள் யார், யார் எந்தக் கட்சிக்குச் செல்கிறார்கள் என்பதைத் தனக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதால் அதுபற்றிய பட்டியல் மா.செ.க்களிடம் வாங்கி அவர்களுக்கு அந்தக் கட்சி தலைமை எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்கிற தகவலோடு தலைவருக்குப் போகிறது.

 

தி.மு.க.வில் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளராக தூத்துக்குடி ஸ்டாலினை நியமனம் செய்ததைக் கூறினோம். தற்போது வேட்பாளர் அறிவிப்பின்போது, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளில் உள்ள தனது நண்பர்கள் யார், யாருக்கு சீட் தரப்பட்டுள்ளது என்பதை விசாரித்தவர், 2019இல் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மா.செ.வாக இருந்து தி.மு.க.வுக்குச் சென்ற மதியழகன், பர்கூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது ஆச்சர்யமானார். மதியழகன் வெற்றி வாய்ப்பு குறித்தும் விசாரித்தார். தங்களுக்கு வாய்ஸ் தரச்சொல்லி டெல்லியிலிருந்து அவருக்கு அழுத்தம் வருகின்றது, நேரடியாக வந்து சந்திக்கிறோம் என பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் கேட்கிறார்கள். அதனைத் தவிர்க்கவே அவர் ‘அண்ணாத்த' படப்பிடிப்பை தொடங்கச் சொல்லி கேட்க, அதுவும் தொடங்கப்பட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருந்தாலும் தேர்தல் களத்தைக் கவனித்தே வருகிறார். ஓட்டு அவுங்க விருப்பப்படி போடட்டும் என்கிற மனநிலையில் உள்ளார்'' என்றார்.

 

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.