Skip to main content

காங்கிரஸிலும் திமுகவிலும் மட்டும்தான் குடும்ப அரசியலா? நாடு முழுவதும் பரம்பரை ஆதிக்கம்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று நாம் கூறுகிறோம். ஆனால், அது பரம்பரை ஜனநாயக ஆட்சி முறையாக மாறிக் கொண்டிருப்பதாக பரவலான கருத்து உருவாகி வருகிறது.

 

dmk

 

அமெரிக்காவை ஜனாதிபதி ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்றும், பிரிட்டனை நாடாளுமன்ற ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்றும் கூறுவார்கள். அந்த வரிசையில் இந்தியாவை பரம்பரை ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்று அழைக்கும் நிலை விரைவில் வந்துவிடுமோ என்று சொல்கிறார்கள்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில், பரம்பரை ஆட்சிமுறை என்று நேருவின் குடும்பத்தை வைத்தே மற்ற கட்சிகள் குறைகூறுவது வாடிக்கை. அதேபோல தமிழகத்தில் திமுகவை நோக்கி மட்டுமே குடும்ப ஆட்சிமுறை குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

 

தமிழகத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் பதில் சொல்கிறார்கள். திமுகவை பாதுகாக்க எல்லாவித கஷ்டங்களையும் தாங்கியவர்களுக்கு அந்தக் கட்சி மரியாதை கொடுப்பதாக அவர்கள் சுருக்கமாக பதில் சொல்கிறார்கள். அதுதவிர, திமுகவை கொள்கை ரீதியாகப் பாதுகாக்க அந்தக் கட்சியிலேயே வளர்ந்து வந்தவர்கள்தான் அக்கறை காட்டுவார்கள் என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.

 

இந்த விஷயத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுகவில்கூட வாரிசுகளுக்கு பதவி என்பது அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. தேமுதிக தொடங்கும்போதே குடும்பக் கட்சியாக உருவெடுத்தது. பாமக உருவாகும்போது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறிய வாசகங்கள் புகழ்பெற்றவை. “இந்தக் கட்சியில் நானோ, எனது குடும்பத்தினரோ பதவிக்கு வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்” என்று கூறினார். நாட்கள் கடந்தபோது, அவருடைய மகன் அன்புமணிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுத்ததோடு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், மக்களவை உறுப்பினர் பதவியும் கொடுத்தார். 2016 தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவே அறிவித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியில் கூட சீமான் தனது மைத்துனருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் பரம்பரை ஆட்சி நடத்த விரும்புகிறது என்ற மோடியின் குற்றச்சாட்டு கடந்த ஐந்தாண்டுகளாக திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. அவருடைய குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, பாஜகவில் உள்ள வாரிசுகள் குறித்தும், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளில் நிலவும் வாரிசு அரசியல் குறித்தும் இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது.

 

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டில் மோதிலால் நேரு தனது வீட்டை காங்கிரஸுக்கு கொடுத்திருந்தார். அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அப்போதெல்லாம் காங்கிரஸுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தலைவர் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று இளம் வயதிலேயே சிறைசென்ற ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸில் தலைவராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

 

அவர் சிறையில் இருக்கும்போதே அவருடைய மனைவி கமலா நேரு இறந்தார். சிறுமியாக இருந்த இந்திராவும் விடுதலைப் போராட்டங்களில் தன் வயதுடைய சிறுவர் சிறுமிகளை சேர்த்து பிரச்சாரம் செய்திருக்கிறார். காஷ்மீர் பார்ப்பனர்களாக இருந்தாலும் மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு குடும்பம் சமத்துவ மனப்பான்மை கொண்டதாக, இந்திய மக்களிடம் சாதி, மத வேறுபாடு பார்க்காத குடும்பமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. நாடு விடுதலை பெற்ற சமயத்தில் இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை அனுசரித்துப் போகும் தன்மை நேருவுக்கே உண்டு என்று நம்பியதால்தான் பிரதமர் பதவிக்கு நேருவை காந்தி பரிந்துரைத்தார்.

 

paatel

 

படேலை பிரதமராக்கி இருந்தால் இந்து மதத்தை தூக்கிப்பிடித்து மக்கள் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரித்திருப்பார் என்று வரலாற்று ஆசிரியர்களே கூறியிருக்கிறார்கள். காந்தியின் நம்பிக்கையை நேரு காப்பாற்றினார். சோசலிஸக் கொள்கைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அணிசேராக் கொள்கை, மதசார்பற்ற கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை, மாநில மொழிகளுக்கு பாதுகாப்பு என்று நேரு இந்திய மக்களை ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து லால் பகதூர் பிரதமராக பொறுப்பேற்றாலும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறமுடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாடுமுழுவதும் அறிந்த ஒரு தலைவரையே மக்கள் விரும்பினார்கள். அதையறிந்த காமராஜ், நேருவின் மகளாக இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்த இந்திராவை பிரதமராக தேர்வு செய்தார். அதேசமயம், காங்கிரஸின் பழமைவாதத் தலைவர்களின் முட்டுக்கட்டைகளால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதை உணர்ந்ததால்தான் இந்திரா துணிச்சலாக மூத்த தலைவர்களின் முடிவை புறக்கணித்து, தனக்கான வழிமுறைகளின்படி ஆட்சி செய்ய புதிய கட்சியை உருவாக்கிக் கொண்டார்.

 

 

ஆக, அது இந்திரா காங்கிரஸ்தான். அதாவது இந்திரா தனது நோக்கப்படி இந்தியாவை ஆட்சிசெய்ய உருவாக்கிக்கொண்ட கட்சிதான். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்திரா தலைமையிலான கட்சிதான் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை தக்கவைக்கிறது. பிளவுபடுத்தியவர்கள் காணாமல் போனார்கள், அல்லது தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என்று தனிப் பெயர்களில் மாநிலக் கட்சிகளாக இயங்குகின்றன. இந்நிலையில்தான் இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 1984ல் சுட்டுக்கொன்றனர். அதைத்தொடர்ந்து அவருடைய மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார். அவரும் 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிதறடிக்கப்பட்டார்.

 

nehru

 

இந்தியா முழுக்க மக்களுக்கு அறிமுகமான நேரு குடும்பத்திற்கு அடுத்தடுத்து நடந்த இந்த இழப்புகளின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தேசத்தின் முன்னேற்றத்தை தடுப்பதே இந்தச் சதியின் நோக்கம் என்கிறார்கள். அந்த சதியை உறுதி செய்யும் வகையில்தான் 1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தது. மாநிலக் கட்சிகள் எழுச்சி பெற்றன. பாஜகவும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. காங்கிரஸின் படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸின் முக்கிய தலைவர்களே சோனியாவை கட்சிக்கு தலைமை ஏற்கும்படி கோரிக்கை விடுத்தனர். சோனியாவுக்கு உதவியாக ராகுலும், ராகுலுக்கு உதவியாக பிரியங்காவும் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 

காங்கிரஸில் மட்டும்தான் பரம்பரை ஆதிக்கம் என்ற கருத்தை பாஜகதான் முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது. அதிலும் பிரதமர் மோடி ரொம்பவே இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால், பரம்பரை ஆதிக்கத்துக்கு பாஜகவோ, மற்ற கட்சிகளோ விதிவிலக்கல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

 

vasunthra

 

முதலில் பாஜகவில் உள்ள குடும்ப ஆதிக்கத்தை பார்க்கலாம். ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பியாகி இருக்கிறார். வசுந்தராவின் சகோதரி மத்தியப்பிரதேச மாநில பாஜக அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். வசுந்தராவின் தாய் விஜயராஜே சிந்தியா பாஜகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர், மத்தியப்பிரதேச மாநிலத்தில் எம்.பியாக இருந்தவர். வசுந்தராவின் சகோதரர் மாதவராவ் சிந்தியா காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். அவருடைய மகன் ஜோதிராதித்ய சிந்தியா இப்போது எம்பியாக இருக்கிறார்.

 

சத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வராக இருந்த ராமன்சிங்கின் மகன் அபிஷேக் எம்பியாக இருக்கிறார். ஹிமாச்சல பிரதேச பாஜக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாகுர் எம்பியாக இருக்கிறார்.
 

 மகாராஸ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தந்தையும், அத்தையும்கூட மாநில அரசியலில் முக்கிய இடம் பிடித்தவர்கள்தான். அந்த மாநில பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸேவின் மருமகள் ரக்‌ஷா இப்போது எம்பியாக இருக்கிறார். மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்து மரணம் அடைந்த கோபிநாத் முண்டேவின் மூத்த மகள் பங்கஜா அமைச்சராகவும், அவருடைய சகோதரி பிரிதம் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். பிரமோத் மகாஜனின் மகள் பூனம் எம்பியாகவும், மாநில பாஜக இளைஞர் பிரிவு தலைவராகவும் இருக்கிறார்.

 

yeshwant

 

பாஜகவின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா எம்பியாகவும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் உ.பி.மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் இருக்கிறார். கல்யாண்சிங்கின் மகன் ராஜ்வீர் சிங் எம்பியாக இருக்கிறார்.

 

இதெல்லாம் பாஜகவின் பரம்பரை ஆதிக்கத்துக்கு சில சாம்பிள்கள் என்றால், மாநில கட்சிகளில் நிலவும் பரம்பரை ஆதிக்கத்துக்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

 

(நாளை மாநிலக் கட்சிகளில் பரம்பரை ஆதிக்கத்தை பார்க்கலாம்)
 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்