Skip to main content

போலியாக வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள்.. குப்பை குழியானது ஜெ. ஜெ தொட்டி...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

தமிழ்நாட்டிலேயே அதிக நிலப் பரப்பளவு கொண்டுள்ள ஒரே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை. ஆம் 100 ஏக்கர் நிலத்தின் மையத்தில் உள்ளது ஆட்சியரின் கோட்டை. சுற்றிலும் வனம். 100 வகைக்கு மேல் மரங்கள், ஆங்காங்கே பறவைகள், விலங்குகளை ஈர்த்து வைக்கும் பழ மரங்கள். இப்படியான இடத்தில் தான் இன்று மரங்கள் கருகி வருகிறது. பறவைகளும், குரங்குகளும் இடம் பெயர்ந்து சென்று செத்து மடிகிறது.
 

pdkt


    

அதாவது மயில்களின் சரணாலயம் விராலிமலை என்றாலும் அங்கே போதிய பாதுகாப்பும், வசதிகளும் இல்லாமல் மயில்கள் வெளியேறத் தொடங்கிவிட்டது. அதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் ஆயிரம் மயில்கள் இருந்தது. குரங்குகள், பல ஆயிரம் பறவைகள் வாழ்ந்தது. ஆனால் இப்போது எல்லா சில என்ற அளவில் மாறிவிட்டது. ஏன் இப்படி ஆனது என்றால் பறவை, விலங்குகளுக்கு போதி தண்ணீர் வசதி செய்யவில்லை என்பதால் இறை தேடியும், தண்ணீருக்காகவும் இடம் பெயரும் போது விபத்துகளில் சிக்கி உயரிழக்கிறது.
    
இந்த நிலையில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மயில், போன்ற பறவைகளுக்காகவும், குரங்குகள் போன்ற உயிரினங்களுக்காகவும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்தார்கள். அதில் ஜெ ஜெயலலிதாவின் பெயரை காட்டும்விதமாக ஜெ ஜெ என்ற எழுத்தில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. அந்த தொட்டிகள் இப்போது உள்ளதா என்று பார்த்தார் குப்பை குழியாக காட்சி அளிக்கிறது. ஜெ மறைந்த பிறகு அவர் பெயரில் உள்ள தொட்டியும் குப்பைக் குழியாக்கிவிட்டார்கள் என்பது தான் வேதனை.

    
இந்த நிலையில் தான் இயற்கை விவசாயி தனபதி உயர்நீதிமன்றம் சென்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் இல்லாமல் மயில், முயல், குரங்கு பறவைகள் போன்ற உயிரினங்கள் அழிந்து வருகிறது அதனால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். அதில் மாவட்ட ஆட்சியர் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் தற்போது 3 அடி வட்டமுள்ள முக்கால் அடி உயரத்தில் 20 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டு சாலைகளில் அரிசிகள் இறைக்கப்பட்டுள்ளது.
 

pdkt

 

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது.. முன்பு ஆட்சியர் அலுவலக வனத்தில் ஆயிரக்கணக்காண மயில்கள் சுற்றி வரும், குரங்குகள், முயல்கள், பறவைகள் ஓடி திரியும். கடுமையான வறட்சி ஏற்பட்டதால் தண்ணீர் இல்லை. அந்த நேரத்தில் தான் அப்போதைய முதல்வரின் இரண்டு எழுத்துகளை ஜெ.ஜெ என்று ஆங்கிலத்தில் தண்ணீர் தொட்டிகளில் வடிவமைத்தார்கள். கொஞ்ச நாள் தண்ணீர் ஊற்றி உயிரினங்களை காத்தவர்கள். பிறகு விட்டுவிட்டார்கள். தற்போது புயல் தாக்கி பல ஆயிரம் மரங்கள் ஒடிந்து விட்டது எஞ்சியுள்ள மரங்களில் தெண்ணீர் இன்றி உணவின்றி பறவைகளும், விலங்குகளும் உள்ளது. அவைகளும் ஓடிவிடாமல் தடுக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. ஆனால் நீதிமன்றம் சொன்ன நீதிமன்றத்திற்கு காட்டுவதற்காக  3 அடி வட்டத்தில் உறை தொட்டிகளை வைக்கிறார்கள். அடிக்கிற வெயிலுக்கு அதில் ஊற்றப்படும் தண்ணீர் ஆவியாகி காணாமல் போய்விடும் நிலை தான் உள்ளது. அதனால் தான் 20, 30 அடி நீலத்திற்கு அகலமான உயரம் குறைவான தொட்டிகளின் உள்ளே சில தடுப்பு சுவர்களை கட்டி தண்ணீர் நிரப்பினால் அந்த தண்ணீர் தேங்கி நிற்கும். மழை காலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதை செய்யாமல் நீதிமன்றத்திற்கு காட்டுவதற்காக அவசர கோலத்தில் சின்ன சின்ன தொட்டிகளை வைப்பதால் தண்ணீர் தான் வீணாகும் என்றனர். 


செய்யும் வேலையை பயனுள்ள வேலைகளாக செய்தால் நல்லது.

 

 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.