Fake rabies vaccine in India? - Countries around the world are on alert Photograph: (WORLD)
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த அண்மையில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டும் தீர்வு எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக பள்ளி சிறார்கள், குழந்தைகளை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் ஒருபுறம் வைரலாகி வருகிறது. அதேபோல் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் கூட உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ராம்குமார் என்ற இளைஞரை சிறிய அளவில் நாய் கடித்த நிலையில் அதனை பொறுப்படுத்தாது அலட்சியமாக இருந்துள்ளார். நாய் கடித்த அடுத்த 14 மணி நேரத்தில் உடல்நிலை மோசமாகி நாய் போலவே நாக்கை வெளியே நீட்டி வினோதமாக நடந்துகொண்டதோடு, பக்கத்தில் இருந்தவர்களை கடிக்க பாய்ந்துள்ளார். ராம்குமாரின் இந்த செயல் அவரது குடும்பத்தினரையே அதிர்ச்சிக்குள்ளாகியது. அவரை கட்டுப்படுத்த முடியாமல் கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டிப் போட்டனர்.
பொதுவாக, நாய் அல்லது பிற விலங்குகள் கடித்த ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொற்று பரவுகிறது. இருப்பினும், 14-15 மணி நேரத்திற்குள் ராம்குமாருக்கு தொற்று பரவியது மருத்துவர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாய்க்கடி சிறியதாக இருந்தாலும் அலட்சியம் காட்டக்கூடாது. ஒரு சிறிய அலட்சியம் கூட ஆபத்தானது எனவே ரேபிஸ் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ரேபிஸ் தடுப்பூசியின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தியாவில் போலி வெறிநாய் தடுப்பூசிகள் இருக்கலாமோ என்ற உலக நாடுகளின் அச்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனமாக இருக்கும் இந்தியன் இம்மிூனோலஜிகல்ஸ் லிமிடட் நிறுவனம் கடந்த ஜனவரியில் KA24014 என்ற மருந்து பேக்கிங் தொகுப்பில் முறைக்கேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தது. 'அபய்ராப்' என்ற அரசு விநியோக ரேபிஸ் தடுப்பூசி மருந்துகளை தனியார் சந்தைக்கு திசைத் திருப்ப நடந்த பேக்கேஜிங் மாற்றம் என நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜிங் மாற்றத்தால் மருந்தின் தரம் மற்றும் வீரியத்தில் குறைபாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உலக நாடுகள் இதனால் சிக்கல் ஏற்பட்டிருக்கோமோ என்ற அச்சத்தில் உள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாய்க்கடியில் சிக்கி நீங்கள் 'அபய்ராப்' தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் மருந்தின் வீரியம் குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது.
வெறிநாய்க்கடி பாதிப்பு என்பது 100 விழுக்காடு உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்று என்பதால் சர்வதேச நாடுகள் இந்த முன்னெச்சரிக்கையில் இறங்கியுள்ளன.
Follow Us