Skip to main content

அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில்  ’கொலை காரர்கள்’ மாநாடு!  –பேரதிர்ச்சி ரிப்போர்ட்! (EXCLUSIVE)

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

பிரபல ரவுடிகள் எல்லாம் ஒன்றுகூடி ‘கேக்’ வெட்டி கொண்டாடி தலைநகரத்தையே அதிரவைத்ததுபோல… தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் ‘போலி மருத்துவர்கள்’ அதுவும்… அமைச்சர், எம்.பி., தலைமையில் கூடி மாநாடு நடத்தவிருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. 


நாளை (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலை, அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் மாநாட்டிற்கு தலைமைதாங்கி ‘போலி டாக்டர்களை’ ஒருங்கிணைக்கும் கே.எஸ். சுப்பையா மற்றும் அவரது மனைவி எஸ். தமிழரசி இருவருமே போலி டாக்டர்கள்தான் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

 

fake doctors

 


“15 ஆண்டுகளில் 19,000 கருக்கொலைகளை செய்திருக்கிறார்” என்று திருவாண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒரேயொரு போலி டாக்டர் ஆனந்தி என்பவர் குறித்தே சமீபத்தில் அதிர்ந்துபோய் சொல்லிக்கொண்டிருக்க… பல்லாயிரக்கணக்கான போலி டாக்டர்கள் எத்தனை ஆயிரம் உயிர்களை குடித்திருப்பார்கள்? என்ற பேரதிர்ச்சியுடன் நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது பகீரிட வைக்கும் பின்னணி தகவல்கள் கிடைத்தன.  
 

 

  • எம்.பி.பி.எஸ்.(Bachelor of Medicine and Bachelor of Surgery) எனப்படும் அலோபதி மருத்துவம், 
  • சித்தா (Bachelor of Siddha Medicine & Surgery)
  • ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery)
  • யுனானி (Bachelor in Unani Medicine and Surgery)
  • ஹோமியோபதி (Bachelor of Homeopathic Medicine and Surgery) 
  • நேச்சுரோபதி அண்ட் யோகா (Bachelor of Naturopathy and Yogic Sciences) 


ஆகிய இந்திய மருத்துவம் படிக்காமலேயே படித்ததுபோல் பட்டங்களைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிப்பவர்கள் போலி மருத்துவர்கள். இதில், இந்திய மருத்துவப்படிப்புகளை படித்துவிட்டு தொடர்ந்து அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் குற்றம். 


 

invitation



பட்டப்படிப்பு படிக்காத சித்தா- ஆயுர்வேதா- யுனானி பரம்பரை வைத்தியர்களுக்கு தொடக்கத்தில் ஆர்.ஐ.எம்.பி. (Registered Indian Medical Practitioner) எனப்படும் பதிவுச்சான்றிதழும், ஹோமியோபதி பரம்பரை வைத்தியர்களுக்கு ஆர்.ஹெச்.எம்.பி. (Registered Homeopathy Medical Practitioner)  என்ற பதிவுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. தற்போது, பரம்பரை மருத்துவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும்போது ஆர்.ஐ.எம்.பி. என்ற சான்றிதழில் சித்தா பரம்பரை மருத்துவர் என்றால்  ஆர்.எஸ்.எம்.பி. என்றும், ஆயுர்வேதா பரம்பரை மருத்துவர் என்றால் ஆர்.ஏ.எம்.பி. என்றும், யுனானி பரம்பரை மருத்துவர் என்றால் ஆர்.யூ.எம்.பி. என்றும் கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டுகொண்டிருக்கிறது. அதாவது, இண்டியன் என்பதற்கு பதிலாக அந்தந்த மருத்துவத்தின் முதல் எழுத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். 1993ம் ஆண்டுக்கு பிறகு பரம்பரை சித்த வைத்தியர்களுக்கான புதிய பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை.  
 

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகடமி தலைவரும் போலி டாக்டர்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளருமான கே.எஸ். சுப்பையா பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதா (Bachelor of Ayurvedic Medicine and Surgery) ஐந்தாண்டு பட்ட படிக்காமலேயே தனது பெயருக்கு பக்கத்தில் பி. ஏ.எம்.எஸ். என போட்டுக்கொள்கிறார். இது சட்டப்படி குற்றம். 


 

fake doctors



இதைவிடக்கொடுமை, இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு வரும் 99 சதவீத போலி டாக்டர்களை வரவேற்பவரும் கே.எஸ்.சுப்பையாவின் மனைவி எஸ். தமிழரசி வேறு யாருமல்ல. டாக்டர் என்றும் அதிமுக திருச்சி மாவட்ட மளிரணி செயலாளர் என்று அழைப்பிதழில் போட்டுக்கொள்ளும் இவரும் மருத்துவரும் அல்ல; தற்போதைக்கு மகளிரணி செயலாளரும் அல்ல. அதிமுக கழக செயற்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான எஸ். தமிழரசி கடந்த, சட்டமன்றத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, போலி டாக்டர் என்ற செய்தி நக்கீரனில் வெளியாகி, அப்புகாரால் அதிரடியாக மாற்றப்பட்டவர். 


அழகு நிலையம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து தன்னை டாக்டர் என்று பெயருக்கு பக்கத்தில் போட்டுக்கொள்வதோடு தன்னைப் போன்ற போலி டாக்டர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தும் அளவுக்கு ஆளுங்கட்சி செல்வாக்கால் வளர்ந்துவிட்டார். 


இந்நிகழ்ச்சியில், ‘இயற்கை மருத்துவம் பற்றிய விளக்கவுரை’ அளிக்கப்போகிறவர் யார் தெரியுமா? தொலைக்காட்சிகளில் பிரபலமான போலி டாக்டர் எஸ்.ஆர். நவீன் பாலாஜிதான். இதில், கலந்துகொள்வதாக அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பட்டப்படிப்புகளையே படிக்காமல் படித்ததுபோல் போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் போலி டாக்டர்கள். 


 

naveen balaji
                                                  எஸ்.ஆர். நவீன் பாலாஜி



இந்த மாநாட்டில்தான் மலரினை வெளியிட்டு பேருரையாற்ற இருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். இப்படிப்பட்ட, மருத்துவர்களுக்கு திருமூலர் விருது வழங்கி வாழ்த்த இருப்பவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ப.குமார். இதுகுறித்து, 18-வது மாநில மாநாட்டை தலைமை தாங்கி ஒருங்கிணைக்கும் கே.எஸ். சுப்பையாவிடம், “நீங்கள் என்ன மருத்துவம் படித்திருக்கிறீர்கள்? என்று நக்கீரன் டெக்னிக்குடன் பேசியபோது, “நான் பதிவு பெற்ற சித்த மருத்துவர்” என்றார்.


பதிவுபெற்ற சித்தமருத்துவர் என்றால் மாநாட்டு அழைப்பிதழில் உங்களது பெயருக்கு பக்கத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பு படித்ததுபோல் பி.ஏ.எம்.எஸ். என்று  அச்சடித்திருக்கிறீர்களே? என்று நாம் கேட்டபோது, “நான் சித்தாவும் ஆயுர்வேதமும் ஒரிஸாவிலுள்ள பிரஜா மருத்துவக்கல்லூரியில் கரஸ்ஸில் படித்திருக்கிறேன்” என்று மருத்துவப்படிப்பை தொலைதூரக்கல்வி அடிப்படையில் படித்ததாக அதிர்ச்சியூட்டினார்.


உங்களது மனைவி தமிழரசிக்கு பக்கத்தில் டாக்டர் என்று போட்டுள்ளீர்களே? என்று நாம் கேட்டபோது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படித்திருக்கிறார். அதனால், அவர் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறார்” என்றவரிடம், அப்படியென்றால் அவர் முனைவர்தானே? என்று நாம் விடாமல் கேட்டபோது, “அவரும் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்பை படித்துள்ளார்” என்று அள்ளி வீசினார். ஸ்ஸ்ஸ்… ஹப்படா என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டு… நீங்கள் மருத்துவம் படித்ததற்கான சர்டிஃபிகேட்டை அனுப்புங்கள் என்றபோது, சர்டிஃபிகேட்டுகள் திருச்சியில் இருப்பதால் உடனடியாக வாட்ஸ்-அப்பில் அனுப்ப முடியாது” என்று சமாளித்தார்.

 

fake doctors
                     ஓ.பி.எஸ்-ஸுடன் எஸ்.தமிழரசி, கே.எஸ். சுப்பையா


 


 “சரி,  சர்டிஃபிகேட்தான் திருச்சியில் உள்ளது. நீங்கள் ஒரிஸாவில் சித்தா படிப்பை எத்தனை வருடம் படித்தீர்கள்? ஆயுர்வேத படிப்பை எத்தனை வருடம் படித்தீர்கள்? இந்த படிப்புகளை எல்லாம் எந்த வருடத்தில் படித்தீர்கள்?” என்று நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். 


1971 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவத்திற்கான பட்டப்படிப்புகள் கொண்டுவரப்பட்டது. கே.எஸ். சுப்பையாவின் மகன் (பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேத டாக்டர்) விஜய் கார்த்திக்கிற்கு 35 வயது இருக்கும். சுமார் 55 வயதுக்குமேற்பட்ட கே.எஸ்.சுப்பையா பி.ஏ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத பட்டப்படிப்பும் படித்திருக்கமுடியாது. பி.எஸ்.எம்.எஸ். எனப்படும்  சித்தமருத்துவ பட்டப்படிப்பையும் முடித்திருக்கமுடியாது. அப்படியென்றால்,  கே.எஸ். சுப்பையா ஒரு போலி மருத்துவர் என்பது உறுதியாகிறது. 


இருந்தாலும் உறுதிபடுத்திக்கொள்ள சென்னை  அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்திலுள்ள தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் பதிவாளர் ராஜசேகரை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “கே.எஸ். சுப்பையா, அவரது மனைவி தமிழரசி, நவீன் பாலாஜி யாருமே மருத்துவம் படித்ததற்கான பதிவை எங்களிடம் செய்யவில்லை. பதிவு செய்தவர்கள் மட்டுமே டாக்டர்கள். மற்றவர்கள் போலிகள்தான்”  என்று அதிர்ச்சியூட்டியவரிடம், “போலி டாக்டர்கள் என்று தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நாம் கேட்டபோது, “எல்லாம் அரசியல் செல்வாக்குதான். நான் என்ன செய்யமுடியும்?” என்று ஓப்பனாக சொல்லி பேரதிர்ச்சியை உண்டாக்குகிறார்.  


 

rajasekar
                                                       பதிவாளர். ராஜசேகர்




ஒரு போலி டாக்டரே 19,000 கருக்கொலைகளை செய்திருக்கிறார் என்றல், பல்லாயிரக்கணக்கான போலி டாக்டர்கள் எத்தனை எத்தனை கருக்கொலைகளை செய்வார்கள்? எத்தனை பேரின் உயிரோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள்? இப்படிப்பட்ட, மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளலாமா? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நாம் கேட்டபோது, “அப்படியா?” என்று அதிர்ச்சியானவர், ‘விசாரித்துவிட்டு செல்கிறேன்” என்றார்.


நாடாளுமன்ற உறுப்பினர் குமாரிடம் நாம் பேசியபோது, “நான், இன்னும் அந்த அழைப்பிதழைக்கூட பார்க்கவில்லை. விசாரிக்கிறேன்” என்றார். 


சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோதும்  “உடனடியாக விசாரிக்கிறேன்” என்றார்.


போலி டாக்டர்களான கே.எஸ்.சுப்பையாவும் அவரது மனைவி தமிழரசியும் பலருக்கும் போலியான மருத்துவச்சான்றுகளை கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. பொதுமக்களின் உயிரோடு விளையாடும் யாராக இருந்தாலும் கொலைகாரர்கள்தான். அப்படிப்பட்ட, மாநாடுதான் நாளை ஆளுங்கட்சியின் செல்வாக்கோடு சென்னை தி.நகரில் நடக்கவுள்ளது.  

  


 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.