Skip to main content

"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே"!! - தில் போலீஸின் தூள் பேட்டி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

hjk


சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு காட்சி தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது. காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து சாலை வளைவில் விழுந்துவிடுவார், இருந்தும் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஒருவரைத் துரத்திக்கொண்டு ஓடுவார். திருவண்ணாமலையில் திருடப்பட்ட காரை பட்டுக்கோட்டையில் துரத்திப்பிடித்த அந்தக் காவலர் பெயர்தான் பிரசாத். தமிழ்நாடே கொண்டாடிய அவரின் துணிச்சலைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அவரிடம் இதுதொடர்பாக நாம் பேசினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


நீங்கள் செய்த செயலுக்காக தமிழ்நாடே உங்களைக் கொண்டாடுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. காவல்துறையில் சேர்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. எல்லாரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. டிஜிபி சார் மூன்றுமுறை ஃபோன் செய்து பாராட்டினார். சந்தோஷமாக இருக்கு. 

 

எப்படி அந்த திருடப்பட்ட காரை அடையாளம் கண்டுபிடித்தீர்கள், குறுகிய காலத்துக்குள் வண்டி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்தது எப்படி? அன்றைக்கு என்ன நடந்தது? 

 

காவல் கண்காணிப்பாளர் மேடம் அவர்கள் இந்த மாதிரி திருடு போன சம்பவம் பற்றி கூறுகிறார்கள், TN 07 CL 8454  எண் கொண்ட கார் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்குள் வந்தால் அதை தடுத்து நிறுத்திப் பிடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பிறகு டிஎஸ்பி சாரும் அனைத்து சப் ஸ்டேஷன்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்தார். நாங்களும் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார்கள். அந்த நேரத்தில் இந்தக் கார் என்னுடைய கண்ணில் பட்டது. வண்டி எண்ணைப் பார்த்ததும் இது திருடப்பட்ட கார் என்பதை உறுதி செய்துகொண்டேன். நான் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது அவர்கள் மீறி சென்றார்கள். உடனே காரை வேறு பக்கம் திருப்பி ஓட்ட முற்பட்டார்கள். உடனே நானும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அப்போதே டிஎஸ்பி சாருக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே செல்லும்போது சாலை வளைவில் விழுந்துவிடுகிறேன். பிறகு எழுந்து ஓடி காரை பிடித்துவிட்டேன்.

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை டிஜிபி பாராட்டியுள்ளார், எஸ்பி, ஐஜி என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடனே டிஜிபி சார் என்னை ஃபோனில் கூப்பிட்டு பாராட்டி, 25 ஆயிரம் பரிசு வழங்கியிருக்கிறேன் என்றார். அதைப் போல எங்க மேடம் (தஞ்சை காவல் கண்காணிப்பாளர்) கூப்பிட்டு பாராட்டி பரிசு வழங்கினார்கள். எங்கள் டிஎஸ்பி சாரும் பாராட்டினார். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினார்கள். 

 

இந்த சம்பவத்தைப் பத்தி உங்கள் ஊரில் என்ன சொல்கிறார்கள்?

 

நிறைய பேரு ஃபோன் போட்டு பேசுவாங்க. நேர்லையும் சொல்வாங்க, ரவுடிய பிடிச்சிருக்கீங்க, பார்த்து இருங்கன்னு. அம்மா கூட, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்து இரு சொன்னாங்க. நம்ம வேலையே ரவுடிகளைப் பிடிப்பதுதானே, அதற்காகத்தானே பணியாற்றுகிறோம். 

 

வீரதீர செயலுக்கான விருதுக்கு உங்கள் பெயரை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக உயரிய வருது. கிடைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கும். 

 

 

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.