Skip to main content

“எங்களையும் முற்பட்ட வகுப்பினராக்கு” என்ற குரல் எழுமா?

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அனைத்து சமூகத்தினரும் முற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர போராட்டம் நடத்துவார்கள் போல… தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி அந்த உரிமைகளை நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் பெற்றுத்தந்தன.
 

narendra modi

 

 

இட ஒதுக்கீடு அடிப்படையில் கடந்த  ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த சில சாதிகளும், முற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த பல சாதிகளும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும்படி கோரி போராடினார்கள்.
 

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தற்போது இருக்கும் பல சாதிகள் அப்படி இணைக்கப்பட்டவைதான். அதுபோக, முற்பட்ட சாதிகளில் இருப்போர்கூட அவர்களுடைய சாதிப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் அதையே தங்கள் சாதியாகக் குறிப்பிட்டு சான்றிதழ் பெறும் வழக்கமும் இங்கே இருக்கிறது. இப்போது, பாஜக அரசு கொண்டு வந்துள்ள முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஒதுக்கீடு என்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஆம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லாத சலுகை இந்த பிரிவினருக்கு கிடைத்திருக்கிறது.
 

ஆண்டுக்கு 8 லட்சத்திற்குள் வருமானம் வந்தால் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றார்கள். அப்போதே இதை எதிர்த்தார்கள். இந்த வருமான வரம்பில் நிறைய மோசடி செய்யலாம் என்று கூறினார்கள். எதிர்ப்பை மீறி பாஜக அரசு இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தியது. இப்போது, வேலைவாய்ப்பை பெறுவதற்கான மதிப்பெண்களிலும் பாஜக அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறிக்கும் வகையில் தலையிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 61 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் தமிழகத்தில் 28 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்றும், உ.பி., மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் அவர்கள் மதிப்பெண் பெறாவிட்டாலும் வேலையில் முன்னுரிமை பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தங்களை முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் சேர்க்கும்படி போராடத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சு பரவலாயிருக்கிறது. மத்திய அரசின் இந்த இடஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 


 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.