Skip to main content

ஈவிகேஎஸ்சுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

உள்ளூர் ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தேனி மக்களவைத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வெளியூர் வேட்பாளர் என்று விமர்சனம் செய்தாலும், தன்னை தமிழகத்தின் பொதுவேட்பாளராக அறிவித்துக்கொண்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

 

evks elangovan



அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் அதிமுகவின் வாக்குகளை யார் அதிகமாக கூறுபோடுவது என்று பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அறிவிக்கும் ஈவிகேஎஸ், அதிமுக, அமமுகவிடம் 500 ஆயிரம் 1000 ரூபாய் வாங்காதீர்கள் என்றும் 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் வாங்குங்கள் என்றும், வாக்குகளை தனக்கு போடும்படியும் வித்தியாசமாக பிரச்சாரம் செய்கிறார்.


அவருடைய போல்டான பேச்சு ஏற்கெனவே தமிழக மக்களுக்கு அறிமுகமானதுதான். ஆனாலும், தேனித் தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் பெரியாரின் பேரன் பேசும் பேச்சை கேட்க அதிக அளவில் கூடுகிறார்கள். ஈவிகேஎஸ் வெற்றிபெற்றால் நிச்சயமாக மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் தங்கள் தொகுதிக்கு நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


மிக லேட்டாக பிரச்சாரத்தை தொடங்கிய ஈவிகேஎஸ் தொகுதி முழுவதும் முக்கியமான இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவருக்குத் துணையாக தொகுதி முழுவதும் ஈவிகேஎஸ்சின் மனைவி, மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் தனித்தனியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார்கள்.


ஈவிகேஎஸ் பிரச்சாரத்துக்கு போகிற இடங்களில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரும்பிடுகு முத்தரையர் சிலை, தீரன்சின்னமலைக் கவுண்டர் சிலை, காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

evks elangovan


அவருடைய பிரச்சாரத்தை மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் இரா.கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கிறார்கள்.


பிரச்சாரத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை ஒரு பிடிபிடிக்கிறார். மோடியை தெறிக்கவிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டார். அப்போது மிகப்பெரிய மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. இவருக்கு ஆதரவாக முதல்கட்டமாக உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த குஷ்பூ, இன்று அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.


அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பின்னுக்குத் தள்ளி அதிமுக வாக்குகளை பிரித்து மேய்கிறார் தங்கதமிழ்செல்வன். இப்போதைய நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில்தான் போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. ரவீந்திரநாத் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவினரால் பிரிக்கமுடியாத சில சாதியினரின் வாக்குகளுடன் மத்தியா மாநில அரசுகளுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக ஈவிகேஎஸ்சுக்கு கிடைக்கும் என்பதால், தேனி தொகுதி மத்திய அமைச்சரின் தொகுதியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.